கிம்மாஸ் | |
---|---|
Gemas | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°34′48″N 102°36′48″E / 2.58009°N 102.61345°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | தம்பின் மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 29,777 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 73400 |
மலேசிய தொலைபேசி எண் | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | J |
கிம்மாஸ் (ஆங்கிலம்: Gemas; மலாய்: Gemas; சீனம்: 金馬士; ஜாவி: ڬيمس) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், தம்பின் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 165 கி.மீ. தொலைவில் தெற்கே உள்ளது. ஜொகூர் மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 207 கி.மீ. தொலைவில் வடக்கே உள்ளது. இங்குதான் மலேசியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கிம்மாஸ் தொடருந்து நிலையம் உள்ளது. இந்த நிலையம் கிம்மாஸ் நகரத்திற்கும், மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
இந்த நகரம் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அமைந்து இருந்தாலும், ஜொகூர் மாநிலத்திற்கு மிக மிக அருகாமையில் உள்ளது. அத்துடன் நெகிரி செம்பிலான்; ஜொகூர் மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ளது.[1]
அண்மைய காலத்தில் இந்த நகரத்தின் தென் பகுதியில், ஜொகூர் மாநில எல்லைப் பகுதியில் ஒரு புதிய நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கு கிம்மாஸ் பாரு (Gemas Baharu) என்று பெயர். இருப்பினும் கிம்மாஸ் நகரத்தின் மையப் பகுதி இன்றும் நெகிரி செம்பிலான் பகுதியில் தான் உள்ளது.
மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடமும் (KTM East Coast Railway Line) மலேசியக் மேற்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடமும் (KTM East Coast Railway Line) சந்திக்கும் நிலையமாக இந்த நிலையம் அமைகிறது. அதாவது கிம்மாஸ் நகரம் தீபகற்ப மலேசியாவின் மேற்கு இரயில் பாதையையும்; கிழக்குக்கரை இரயில் பாதையையும் இணைக்கும் ஒரு சந்திப்பு முனையாக அமைந்து உள்ளது.
இந்தக் காரணத்தினால் இந்த நகரத்தில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நகரம் ஒரு சிறிய நகரமாக இருந்தாலும் ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை இங்கு காண முடிகின்றது.
இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவை; கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவை; ஆகிய இரண்டு சேவைகளையும் வழங்குகிறது. தீபகற்ப மலேசியாவின் மேற்கு கரை பகுதியில் பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பெசார் தொடருந்து நிலையம் தொடங்கி சிங்கப்பூர், உட்லண்ட்ஸ் ரயில் நிலையம் (Padang Besar–Singapore); தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியில் கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் தொடருந்து நிலையம் தொடங்கி நெகிரி செம்பிலான் கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களில் இருந்து வரும் தொடருந்துகளுக்கு தலையாய சந்திப்பு முனையாக இந்த கிம்மாஸ் தொடருந்து நிலையம் அமைகிறது.
மலேசியாவில் வேறு எங்கும் இப்படி ஒரு தொடருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. தீபகற்ப மலேசியாவில் வாழும் மக்கள் மேற்கு கரையில் இருந்து கிழக்கு கரைக்கு தொடருந்து மூலமாகச் செல்ல வேண்டும் என்றால் கிம்மாஸ் தொடருந்து நிலையத்திற்கு வந்தாக வேண்டும். முன்பு காலத்தில் சாலைப் போக்குவரத்துகள் குறைவாக இருந்ததால் மக்கள் கிமாஸ் தொடருந்து நிலையத்தின் சேவையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை இருந்தது.
கிம்மாஸ் நகரத்திற்கு தென் மேற்கில், மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற லேடாங் மலை கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. இந்த மலை 1276 மீட்டர் உயரம் கொண்டது.[2]
கிமாஸ் வாழ் மக்களுக்கு வாழ்வதாரமாக கிம்மாஸ் ஆறு; மூவார் ஆறு; கெமிஞ்சே ஆறுகள் அமைகின்றன. ரப்பர், செம்பனை, விவசாயத் தொழில்களுக்கு இந்த ஆறுகள் பெரும் பங்காற்றி வருகின்றன. புக்கிட் பெரோட் என்பது கிமாஸ் பகுதியில் உள்ள உயர்ந்த குன்றாகும்.
கிம்மாஸ் நகரின் பழைய பெயர் ஆயர் தெராப் (Ayer Terap). கிம்மாஸிற்கு அருகில் ஓர் ஆறு ஓடுகிறது. அதன் பெயர் ஆயர் தெராப். அந்தப் பெயரே இந்த நகரத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. பிரித்தானியர்கள் ஆட்சி செய்த போது தங்கம், செம்பு போன்ற உலோகங்கள் தோண்டி எடுக்கப் பட்டன.
அதனால், அந்த நகரை ’கோமே’ என்று அழைத்தனர். அதுவே காலப் போக்கில் கிம்மாஸ் (Gemas) என்று மாற்றம் கண்டு இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.[3]
இரண்டாவது உலகப் போரின் போது இந்த இடத்தில் ஒரு கடுமையான சண்டை நடந்துள்ளது. ஜப்பானியப் போர் வீரர்களுக்கும், ஆஸ்திரேலியப் போர்ப் படையினருக்கும் இடையே நடைபெற்ற அந்தக் கடுமையான மோதலில் பல உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்துள்ளன.
இரண்டாம் உலகப் போரில் பசிபிக் வளாகத்தில் மலாயா மீதான ஜப்பானிய படையெடுப்பின் போது நடந்த போர். இதற்கு கிம்மாஸ் போர் என்று பெயர். மூவார் போரின் ஒரு பகுதியாக கிம்மாஸ் போர் அமைந்தது.
இந்தப் போர் 1942 ஜனவரி 14-ஆம் தேதி கிம்மாஸ் நகருக்கு அருகிலுள்ள கெமிஞ்சே பாலத்தில் நடந்தது. ஏறக்குரைய 1,000 போர் வீரரகள் கொல்லப் பட்டனர் அல்லது காயம் அடைந்தனர்.[4]
இந்த நகரம் மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. 83 விழுக்காடினர். சீனர்கள் 8%. இந்தியர்கள் 5%. மற்ற இனத்தவர்கள் 4%.
{{cite book}}
: |access-date=
requires |url=
(help)