கீ கின் இரகசியச் சங்கம் (மலாய்; ஆங்கிலம்: Ghee Hin Kongsi; சீனம்: 義興公司 Yì Xìng Gōng Sī) என்பது சிங்கப்பூர் மற்றும் மலாயாவில் 1820-இல் உருவாக்கப்பட்ட ஓர் இரகசியச் சங்கம் ஆகும். கீ கின் என்றால் சீன மொழியில் "நீதியின் எழுச்சி" என்று பொருள்.
இந்தச் சங்கம் பெரும்பாலும் ஹக்கா எனும் மற்றொரு சீனச் சமூகத்தினர் (Hokkien people) ஆதிக்கம் செலுத்தி வந்த ஆய் சான் இரகசியச் சங்கம் எனும் இரகசியச் சங்கத்திற்கு (Hai San Secret Society) எதிராகப் போராடியது. கீ கின் இரகசியச் சங்கம் செயல்பட்டு வந்த 70 ஆண்டுகள் காலத்தில், பழி வாங்கும் நடவடிக்கைகளின் மூலமாக மலாயா, சிங்கப்பூர் பிரதேசங்களில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என அறியப்படுகிறது.[1]
கீ கின் தொடக்கத்தில் கான்டோனீசு மக்களால் (Cantonese people) ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இருப்பினும் 1860-ஆம் ஆண்டுகளில் ஆக்கியன் மக்கள் அதிகமானோர் சங்கத்தில் இணைந்தனர். அந்த வகையில் அந்தச் சமூகத்தினர் பெரும்பான்மை உயர்நிலையை உருவாக்கிக் கொண்டனர். அதே வேளையில், தியோச்யூ, அயினானிஸ் மற்றும் ஹக்கா மக்கள் சிறுபான்மை இனக்குழுக்களாக உறுப்பியம் பெற்று இருந்தனர்.
கீ கின் இரகசிய சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சின் ஆ யாம்(Chin Ah Yam). இவர் சீனாவின் குவாங்டொங் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி ஆவார்.[2] சீனாவில் இருந்து மலாயாவிற்குப் புலம்பெயர்ந்த சீனர்களுக்கு உதவி செய்வது; மற்றும் நிதி ஆதரவு வழங்குவது; ஆகியவற்றுக்காகவே கீ கின் இரகசிய சங்கம் அமைக்கப்பட்டது. அத்துடன் சீனாவின் குயிங் வம்சத்தை தூக்கி எறிவதும்;மிங் வம்சத்தை மீட்டெடுப்பதும் அதன் பொதுவான நோக்கமாகவும் இருந்தது.[3]
இந்தச் சங்கத்தின் தலைமைக் கட்டிடம் சிங்கப்பூர், லாவெண்டர் தெருவில் இருந்தது. அந்தக் கட்டிடம் 1892-இல் இடிக்கப்பட்டது. அதற்கு முன்னரே அந்தக் கட்டிடத்தின் உரிமம் சிங்கப்பூர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
1850-இல் கத்தோலிக்க மக்கள்; மற்றும் ஹக்கா மக்களைக் கொலை செய்ததற்காக, இந்த கீ கின் இரகசிய சங்கம் பெயர் பெற்றது. ஏறக்குறைய் 500 பேர் கொல்லப்பட்டனர். 1876 -ஆம் ஆண்டில், அஞ்சல் கட்டணம் மற்றும் அஞ்சல் மூலமாகப் பணம் அனுப்பும் கட்டணம் ஆகியவற்றில் விலையேற்றம் ஏற்பட்டதால் அஞ்சல் அலுவலக ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.
கீ கின் இரகசிய சங்கத்தின் தீவிரமான செயல்பாடுகள் கட்டுப்பாடுகளை மீறிப் போனதும் நீரிணை குடியேற்றங்கள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. முதலில் சங்க உறுப்பினர்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இறுதியாக 1890-களில் இருந்து கீ கின் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை தொடங்கியது. அதன் விளைவாக கீ கின் இரகசிய சமூகத்தைச் சேர்ந்த தியோச்யூ மக்கள் ஆயிரக் கணக்கானோர் களை எடுக்கபட்டனர்.[4]