குரங்கு பொம்மை | |
---|---|
இயக்கம் | நித்திலன் சுவாமிநாதன் |
கதை | நித்திலன் சுவாமிநாதன் மடோனி அஸ்வின் (உரையாடல்) |
இசை | பி. அஜ்னீஷ் லோக்நாத் |
நடிப்பு | விதார்த் பாரதிராஜா டெல்னா டேவிசு கஞ்சா கறுப்பு |
ஒளிப்பதிவு | என். எஸ். உதயகுமார் |
படத்தொகுப்பு | அபிநவ் சுந்தர் நாயக் |
கலையகம் | ஷ்ரேயா ஸ்ரீ மூவீஸ் எல்எல்பி |
வெளியீடு | 1 செப்டம்பர் 2017 |
ஓட்டம் | 105 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குரங்கு பொம்மை (Kurangu Bommai) நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்திலும் எழுத்திலும் தமிழில் 2017இல் வெளியான திகில் திரைப்படம்.[1] இத்திரைப்படத்தினை ஷ்ரேயா ஸ்ரீ மூவீஸ் எல்எல்பி என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் விதார்த், பாரதிராஜா, டெல்வினா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் என். எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவிலும் பி. அஜ்னீஷ் லோக்நாத் இசையிலும் அபிநவ் சுந்தர் நாயக் படத்தொகுப்பிலும் செப்டம்பர் 1 2017 அன்று வெளியானது.[2][3]
பணப்பேராசை நல்ல ஒரு நட்பை, அன்பை, நல்லுறவை எப்படி எல்லாம் சீரழிக்கின்றது என்பதே குரங்கு பொம்மை திரைப்படத்தின் அடிப்படைக் கதைக்கருவாகும்.[4].தஞ்சாவூரில் சிலை கடத்தல் வேலையச் செய்பவர் ஏகாம்பரம். ஏகாம்பரத்திடம் பல ஆண்டுகளாக நண்பன் என்னும் பாசத்தின் அடிப்படையில் சுந்தரம் வேலை செய்கிறார். அவரது மகனான கதிர், தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குச் சென்று அங்கு வாடகை மகிழுந்து ஓட்டுநராகப் பணி செய்கின்றார்.[5] ஏகாம்பரத்திடம் தன் தந்தை உடனிருந்து வேலை செய்வதை கதிர் வெறுக்கின்றார் அதை அவரின் தந்தையிடமும் தெரிவிக்கின்றார்.[6] ஏகாம்பரம், சுந்தரின் கூடா நட்பினால் கதிரின் திருமணம் தடைபடுகின்றது. இச்சூழலில், நண்பன் கொடுத்த ‘குரங்கு பொம்மை’ படம் வரைந்த பையுடன் மகனுக்குத் தெரியாமல் சென்னைக்கு செல்கின்றார் சுந்தரம். அந்தக் குரங்குபடம் வரையப்பட்ட பையில் ஐந்து கோடி மதிப்புடைய கடத்தல் பொருள் உள்ளது. அதை சுந்தரம் கொடுக்க வேண்டிய சரியான இடத்தில் கொடுக்கும் நிலையில் நடந்த நிகழ்வுகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும் என்ன என்பதே பரபரப்பான திகிலூட்டும் மீதிக்கதை.[7]