குலாபோ சபேரா (Gulabo Saberi )(குலாபோ அல்லது தன்வந்த்ரி ) இவர் இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஆவார்.[1] குலாபோ ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான கோட்டாவில் நாடோடிகளான கல்பேலியா சமூகத்தில் தனது பெற்றோரின் ஏழாவது குழந்தையாக 1960இல் பிறந்தார். குலாபோ சபேராவின் வாழ்க்கை இவரது சமூகத்தில் உள்ள மற்ற சிறுமிகளிடமிருந்து வேறுபட்டதல்ல. இவர் பிறந்த ஒரு மணி நேரத்திலேயே உயிருடன் புதைக்கப்பட்டு, பின்னர் இவருடைய அத்தையால் மீட்கப்பட்டார்.[2] குலாபோ சபேரா பிற்காலத்தில் ஒரு பிரபல நடனக் கலைஞரானார். இவருக்கு குலாபோ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. டிட்டி ராபினின் இசைப் பணிகளில் இவர் மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.
தன்தேராசு என்ற இடத்தில் இவர் பிறந்ததால் இவருக்கு இவரது குடும்பத்தினர் தன்வந்தி என்று பெயரிட்டனர். ஆனால் இவர் மோசமாக நோய்வாய்ப்பட்ட பிறகு, இவரது பெயர் குலாபி என்று மாற்றப்பட்டது. இவர் அந்த நிகழ்வைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார், “மருத்துவர்கள் என்னை இறந்துவிட்டதாக அறிவித்தனர், ஆனால் நான் உயிர் பிழைத்தபோது, அஜ்மீரில் உள்ள தர்காவில், என் மார்பில் ரோஜா வைக்கப்பட்டு, என் தந்தை எனக்கு குலாபி என்று பெயரிட்டார். ‘தன்வந்தி இறந்துவிட்டார், குலாபி பிறந்தார்’ என்று என் தந்தை கூறினார்.”. ஆனால் இப்போது குலாபோ என்று பிரபலமாக அறியப்படும் இவர் அது ஒரு பத்திரிகையின் எழுத்துப்பிழையே காரணம் என்று கூறுகிறார்.[3]
1981 ஆம் ஆண்டில், பாடகர் இலா அருணின் சகோதரியும் ராஜஸ்தான் சுற்றுலாத் துறை அதிகாரியுமான திரிப்தி பாண்டே என்பவர் புஷ்கர் என்ற இடத்தில் குலாபோ நடனமாடுவதைக் கண்டு இவரை ஊக்குவித்தார். அப்போதிருந்து ஜெர்மனி பிரான்ஸ், ஜப்பான் பிரேசில் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணம் செய்து இவர் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறார். இப்போது இவர் தனது சொந்த நடனப்பள்ளியான குலாபோ சப்பேரா நடன அகாதமியைக் கொண்டுள்ளார், அங்கு இவர் சப்பேரா-கல்பேலியா நடனத்தை கற்பிக்கிறார். மேலும் இவர் நடனத்தின் அன்பிற்காக உலகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்கிறார்.
2011 ஆம் ஆண்டில், குலாபோ பிக் பாஸ் என்ற மெய்நிகர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பன்னிரெண்டாவது போட்டியாளராக இருந்தார்.[4] குடும்பத்தில் ஏற்கனவே மூன்று சிறுமிகள் இருந்ததால், தனது பிறப்புக்குப் பின்னால் உள்ள உண்மை குறித்தும், இவருடைய தந்தை வீட்டை விட்டு விலகி இருந்தபோது இவருடைய சமூகத்தைச் சேர்ந்த சில உறவினர்கள் இவரை எப்படி உயிரோடு புதைக்க முயன்றார்கள் என்பதையும் பற்றி வெளிப்படையாகப் பேசினார். குலாபோவின் தந்தை அன்னை தேவியை வணங்குவார். எனவே அவர் தனது மகள்கள் அனைவரையும் தெய்வத்தின் ஆசீர்வாதமாகவும், குறிப்பாக இளையவராகவும் நேசித்தார். இதை பிக் பாஸ் (பருவம் 5) தொடரில் வெளிப்படுத்தினார். இவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை தியரி ராபின் மற்றும் வெரோனிக் கில்லியன் ஆகியோர் குலாபி சப்பேரா, டான்சியூஸ் கீதானே டு ராஜஸ்தான் என்ற தலைப்பில் பிரெஞ்சு மொழியில் எழுதியுள்ளனர் . அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிப்சி நடனக் கலைஞரான குலாபோ சப்பேரா என்பதாகும்.
இந்திய அரசு 2016 ஆம் ஆண்டில் பத்மசிறீ கௌரவத்தை இவருக்கு வழங்கியது.[5] இந்த விருதைப் பெற்ற இவரது சமூகத்தைச் சேர்ந்த முதல் மற்றும் ஒரே பெண்மணி ஆவார்.[3]