கூலாய் | |
---|---|
Kulai | |
ஜொகூர் | |
அடைபெயர்(கள்): கூலாய் ஜெயா, ஆமை நகரம் Kulaijaya, The Turtle Town | |
ஆள்கூறுகள்: 1°40′00″N 103°36′00″E / 1.66667°N 103.60000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | கூலாய் மாவட்டம் |
உள்ளூராட்சி | கூலாய் நகராட்சி |
அமைவு | 1890 |
உள்ளூராட்சி தகுதி | 21 ஏப்ரல் 2004 |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 2,94,156 |
• தரவரிசை | 31-ஆவது |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய குறியீடு | 810xx |
மலேசிய எண்கள் | +6-07 |
மலேசியப் பதிவெண்கள் | J |
இணையதளம் | www |
கூலாய் (ஆங்கிலம்: Kulai; மலாய்: Kulai; சீனம்: 士乃) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், கூலாய் மாவட்டத்தின் (Kulai District) தலைநகரம் ஆகும்.
இந்த நகரம் முன்பு கூலாய் மாவட்ட மன்றம் (Kulai District Council) எனும் ஊராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப் பட்டது. தற்சமயம் கூலாய் நகராட்சி மன்றத்தால் (Kulai Municipal Council) (MPKu) நிர்வகிக்கப் படுகிறது.
கோலாலம்பூர் மாநகரில் இருந்து 302 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 142 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 51 கி.மீ.; ஜொகூர் பாரு நகரத்தில் இருந்து 29 கி.மீ. (18 மைல்); ஸ்கூடாய் (Skudai) நகரத்தில் இருந்து 8 கி.மீ .(5.0 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
கூலாய் மாவட்டத்தில், கூலாய்; கூலாய் ஜெயா; ஆயர் பெம்பான் (Ayer Bemban); பண்டார் புத்ரா கூலாய் (Bandar Putra Kulai); புக்கிட் பத்து (Bukit Batu); இண்டாபுரா (Indahpura); பண்டார் பாரு கங்கார் பூலாய் (Bandar Baru Kangkar Pulai); கெலாப்பா சாவிட், சாலேங் (Saleng); செடனாக் (Sedenak); சீலோங் (Seelong); செனாய் (Senai); செங்காங் ஆகிய நகர்ப் பகுதிகள் உள்ளன.
தவிர, இந்த நகரம் இசுகந்தர் மலேசியா (Iskandar Malaysia) எனும் பொருளாதார மண்டலத்திற்குள் அமையப் பெற்று உள்ளது. அத்துடன் இந்த நகரம் இசுகந்தர் மலேசியாவின் முதன்மை மண்டலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இங்கு பல பெரிய பன்னாட்டு மின்னணு உற்பத்தியாளர்களின் தொழிற்சாலைகள் உள்ளன. அதன்வழி உள்ளூர் மக்கள் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.
கூலாய் மாவட்டம் முன்பு பூலாய் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாக இருந்தது. அந்தப் பள்ளத்தாக்கு தற்போதைய துணை மாவட்டமான பூலாய் முக்கிமை உள்ளடக்கி இருந்தது.
1892-ஆம் ஆண்டில் ஹுவாங் குவோ மாவோ (Huang Guo Mao) என்பவரின் தலைமையிலான ஹக்கா சீன மக்கள் (Chinese Hakka); ஜொகூருக்கு குடிபெயர்ந்தனர். ஒரு குடியேற்றப் பகுதியைத் திறந்தனர்.
அவர்கள் குடியேறிய அந்த இடத்திற்கு குய்லாய் (Guilai) என்று பெயர் வைத்தார்கள். குய்லாய் என்றால் ஆமைகள் வருகின்றன என்று பொருள். இந்தக் குய்லாய் எனும் பெயர்தான் பின்நாட்களில் கூலாய் என்று திரிந்தது.[1]
கூலாய் மாவட்டத்தின் பரப்பளவு 753.75 சதுர கி.மீ.; ஜொகூர் மாநிலத்திலேயே சிறிய மாவட்டமாகும். மாநிலப் பரப்பளவில் 3.96%. இந்த மாவட்டம் நகர்ப்புற மற்றும் கிராமப்புறக் குடியிருப்புகளின் கலவையைக் கொண்டு உள்ளது. பெரும்பான்மையான மக்கள் ஜொகூர் பாரு மாநகருக்கு அருகில் உள்ள நகரங்களில் குடியேறி வருகிறார்கள்.[2]
கூலாய் ஜெயா (Kulai Jaya) மற்றும் செனாய் போன்ற நகரங்கள், கூலாய் மாவட்டத்தின் அதிக மக்கள்தொகை மையங்களாக மாறி வருகின்றன. அத்துடன் அந்த நகரங்கள் ஜொகூர் பாரு மாநகரப் பகுதியின் புறநகர்ப் பகுதிகளாகவும் மாறி உள்ளன.
ஸ்ரீ விஜய பேரரசு காலத்தில் இருந்தே கூலாய் நிலப் பகுதிகளில் தொடக்கக் காலக் குடியேற்றங்கள் தோற்றம் கண்டு உள்ளன. தற்போதைய பண்டார் தெங்காராவில் (Bandar Tenggara) உள்ள சாயோங் நதிப் படுகையில், முதன்முதலாகக் கூலாய் குடியேற்றம் தொடங்கி உள்ளது.[3]
மலாயா மற்றும் சிங்கப்பூர் நாட்டுப்புறக் கதைகளின் நாயகர்களாக விளங்கும் பாடாங் (Badang) என்பவரின் சொந்த ஊர், சாயோங் ஆற்றின் மேல்புறத்தில் உள்ள ஓராங் அஸ்லி குடியிருப்புப் பகுதியாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.[4]
மலாக்கா சுல்தானகம் நிறுவப் படுவதற்கு முன்னர், 13-ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியா, சுமத்திராவில் ஸ்ரீவிஜயப் பேரரசு இயங்கி வந்தது. அந்தப் பேரரசிற்கு உட்பட்டதாக சிங்கபுர இராச்சியம் விளங்கியது.
சிங்கபுர அரசை 1362–ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை, ஸ்ரீ ராணா விக்கிரமா (Sri Rana Wikrama) என்பவர் ஆட்சி செய்தார். அப்போது பாடாங் என்பவர் படைத் தளபதிகளில் ஒருவராக இருந்து இருக்கலாம். அவர் காலத்தில் கூலாய் பகுதியில் குடியேற்றம் நடந்து இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.[5]
1548-ஆம் ஆண்டில், சுமத்திரா, கம்பார் எனும் இடத்தில் மலாக்கா சுல்தானகத்தின் கடைசி மன்னர் சுல்தான் மகமுட் ஷா (Sultan Mahmud Syah) காலமானார். அவரின் மறைவுக்குப் பிறகு, அவரின் மகனும் இளவரசருமான அலாவுதீன் ரியாட் ஷா II (Alauddin Riayat Shah II of Johor); சுமத்திரா, கம்பார் தலைநகரை ஜொகூர், கூலாய், சாயோங்கிற்கு மாற்றினார்.
ஜொகூர் சுல்தானகத்தின் முதல் தலைநகராக கோத்தா சாயோங் பினாங்கு (Kota Sayong Pinang) எனும் நகரம் நிறுவப்பட்டது. அதன் பின்னர் ஜொகூர் ஆற்றின் முகப்பில் உள்ள கோத்தா பத்து எனும் இடத்திற்கு தலைநகரம் மாற்றம் கண்டது.
இப்போதைய நவீன கூலாய் மாவட்டம், முன்பு ஜொகூர் பாரு மாவட்டத்தின் துணை மாவட்டமாகும். 2008 ஜனவரி 1-ஆம் தேதி, கூலாய் ஜெயா என்று முழு மாவட்ட நிலைக்கு மேம்படுத்தப்பட்டது.
கூலாய் ஜெயா மாவட்டம் (District of Kulaijaya) மாநிலத்தின் 9-ஆவது மாவட்டமாக அங்கீகரிக்கப் பட்டது.[6] 2015 ஆகஸ்டு 28-ஆம் தேதி, ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுமாயில் இப்னி சுல்தான் இசுகந்தர் (Sultan Ibrahim Ismail ibni Sultan Iskandar) அவர்கள், கூலாய் ஜெயாவின் பெயரை அதன் அசல் பெயரான கூலாய் என்பதற்கு மாற்றம் செய்ய ஆணையிட்டார்.[7][8]