கொ. சி. நாராயணசாமி | |
---|---|
பிறப்பு | 1914 பாலக்காடு, கேரளம் |
இறப்பு | 1999 |
இசை வடிவங்கள் | இந்தியப் பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | வீணைக் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | வீணை |
கொ. சி. நாரயணசாமி (K. S. Narayanaswamy) (முழு பெயர் கொடுவாயூர் சிவராம ஐயர் நாரயணசாமி 1914 செப்டம்பர் 27 - 1999) இவர் தஞ்சாவூர் பாணியின் கர்நாடக வீணை இசைக்கலைஞர் ஆவார். இதில் தாள அடிப்படையிலான கணக்குகளை விட நுணுக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.[1] இருக்கு 1979 இல் மெட்ராஸ் மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி என்ற விருது வழங்கப்பட்டது.
கேரளாவின் பாலககாட்டு மாவட்டத்தில் உள்ள கொடுவாயூரில் நாராயணியம்மாள், சிவராம ஐயர் ஆகியோருக்கு 1914 செப்டம்பர் 27 அன்று பிறந்தார். இவர் தனது சகோதரர் கொ. சி. கிருட்டிண ஐயரின் கீழ் கர்நாடக இசையில் ஆரம்ப பயிற்சி பெற்றார். பின்னர், இவர் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைக்கல்லூரியில் சேர்ந்தார். அங்கு புகழ்பெற்ற தஞ்சை நால்வர்களின் வம்சாவளியான சங்கீத கலாநிதி தி. எஸ். எஸ். சபேச ஐயர், சங்கீத கலாநிதி தஞ்சை பொன்னையா பிள்ளை போன்றவர்களின் கீழ் குரல் இசையை கற்றுக்கொண்டார். இவர், தேசமங்கலம் சுப்பிரமணிய ஐயரின் கீழ் வீணையும், தஞ்சை பொன்னையா பிள்ளையின் கீழ் மிருதங்கத்தையும் கற்றுக்கொண்டார். 1937-1946 வரை, இவர் தான் படித்தக் கல்லூரியான அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார், மேலும் கோபாலகிருட்டிண பாரதி, நீலகண்ட சிவன், அருணாச்சலக் கவிராயர் ஆகியோரின் தமிழ் கிருதிகளை வெளியிடுவதில் உதவினார். [2]
திருவிதாங்கூர் மகாராஜாவின் அழைப்பின் பேரில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதித் திருநாள் இசைக் கல்லூரியில் ஒரு வீணை இசையை பயிற்றுவித்தார்.[3] அகாதமியில் பணியாற்றிய காலத்தில், சுவாதித் திருநாள் ராம வர்மனின் கிருதிகளைத் திருத்தி வெளியிடுவதில் அகாதமியின் முதல்வராக இருந்த செம்மங்குடி சீனிவாச ஐயருக்கு இவர் உதவியாக இருந்தார்.[1][4] [5]
இவர் பல சர்வதேச மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். 1954 இல் முந்தைய சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான இசை மற்றும் கலாச்சார பிரதிநிதிகளின் உறுப்பினராகச் சென்றார். 1970 ஆம் ஆண்டில்,இங்கிலாந்தின் பாத் சர்வதேச இசை விழாவில் கலந்துகொண்டு இலண்டன், பிரிஸ்டல், ஆக்சுபோர்டு, கேம்பிரிச்சு, பர்மிங்காம் ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த எகுடி மெனுகின் இவரை அழைத்தார். பின்னர், இவர் செம்மங்குடி சீனிவாச ஐயருக்குப் பிறகு அகாதமியின் முதல்வரக இருந்து 1970 இல் ஓய்வு பெற்றார். [2]
1970 ஆம் ஆண்டில், மும்பை, சண்முகானந்தா நுண்கலை மற்றும் சங்கீத சபையின் சங்கீத வித்யாலயாவின் முதல்வராக இருந்து 1985 வரை குரல் இசை மற்றும் வீணை ஆகிய இரண்டையும் கற்பித்தார்.[1][2] [3] 1974 ஆம் ஆண்டில், ஆத்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்ற சர்வதேச இசைக் கல்வி சங்கத்தின் பதினொன்றாவது மாநாட்டில் கர்நாடக இசைக் கலைஞராகவும் வீணைக் கலைஞராகவும் பங்கேற்றார். 1977 இல் பெர்லினில் நடந்த ஒப்பீட்டு இசை ஆய்வுகள் மற்றும் ஆவணங்களுக்கான சர்வதேச நிறுவனத்தின் இந்திய இசை மற்றும் நடன விழாவிலும் பங்கேற்றார்.
1962 இல் கேரள மாநில விருது, 1968 இல் தமிழ்நாடு மாநில விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். [2] 1968 இல் சங்கீத நாடக அகாதமியின் தேசிய விருது; [6] 1977 இல் இந்திய அரசிடமிருந்து பத்ம பூசண் ; [7] 1979 ஆம் ஆண்டில் சென்னை மியூசிக் அகாதெமியிடமிருந்து சங்கீத கலாநிதி [8] மற்றும் 1999 ல் சுவாதி ரத்னா போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது குறிப்பிடத்தக்க சீடர்களில் ருக்மிணி கோபாலகிருட்டிணன், [9] [10] கல்யாணி சர்மா,[1] சரசுவதி ராசகோபாலன், [11] திருவனந்தபுரம் வெங்கடராமன், [12] அசுவதி திருனல் இராம வர்மன், [13] கீதா ராஜா, [3] நிர்மலா பார்த்தசாரதி, [14] ஜெயசிறீ அரவிந்த் போன்றவர்கள் இருந்தனர். ம. ச. சுப்புலட்சுமி, செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்ற பல இசைக்கலைஞர்கள் இவருடன் நல்லுறவைக் கொண்டிருந்தனர். மேலும் இவரது இசையைப் பாராட்டியுள்ளனர். [2]