எஸ். சாமிவேலு S. Samy Vellu | |
---|---|
2004 இல் சாமிவேலு | |
பொதுப்பணித்துறை அமைச்சர்]] | |
பதவியில் 8 மே 1995 – 18 மார்ச் 2008 | |
ஆட்சியாளர்கள் | யாஃபர், சலாகுதீன், சிராச்சுதீன், மிசான் சைனல் ஆபிதீன் |
பிரதமர் | மகாதீர் பின் முகமது அப்துல்லா அகமது படாவி |
முன்னையவர் | லியோ இரோக் |
பின்னவர் | மொகுத் சின் முகமது |
தொகுதி | சுங்கை சிப்புத் |
பதவியில் 15 செப்டம்பர் 1979 – 15 சூன் 1989 | |
ஆட்சியாளர்கள் | அகமது சா இசுக்காந்தர் அசுலான் சா |
பிரதமர் | உசேன் ஓன் மகாதீர் பின் முகமது |
முன்னையவர் | லீ சான் சூன் |
பின்னவர் | லியோ மொகி இரோக் |
தொகுதி | சுங்கை சிப்புத் |
எரிசக்தி, இயற்கை வள அமைச்சர் | |
பதவியில் 15 சூன் 1989 – 7 மே 1995 | |
ஆட்சியாளர்கள் | அசுலான் சா யாஃபர் |
பிரதமர் | மகாதீர் பின் முகமது |
முன்னையவர் | லியோ மொகி இரோக் |
பின்னவர் | லியோ மொகி இரோக் |
தொகுதி | சுங்கை சிப்புத் |
மலேசிய இந்திய காங்கிரசின் 7-ஆவது தலைவர் | |
பதவியில் 12 அக்டோபர் 1979 – 6 திசம்பர் 2010 | |
முன்னையவர் | வி. மாணிக்கவாசகம் |
பின்னவர் | கோவிந்தசாமி பழனிவேல் |
மலேசிய நாடாளுமன்றம் சுங்கை சிப்புத் | |
பதவியில் 16 செப்டம்பர் 1974 – 8 மார்ச் 2008 | |
முன்னையவர் | வீ. தி. சம்பந்தன் (ம.இ.கா) |
பின்னவர் | ஜெயக்குமார் தேவராஜ் (ம.ச.க) |
பெரும்பான்மை | 644 (1974) 5,141 (1978) 7,897 (1982) 4,436 (1986) 1,763 (1990) 15,610 (1995) 5,259 (1999) 10,349 (2004) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாமிவேலு சங்கிலிமுத்து 8 மார்ச்சு 1936 குளுவாங், ஜொகூர், மலாயா) |
இறப்பு | 15 செப்டம்பர் 2022 கோலாலம்பூர், மலேசியா | (அகவை 86)
குடியுரிமை | மலேசியர் |
அரசியல் கட்சி | மலேசிய இந்திய காங்கிரசு (ம.இ.கா) |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய முன்னணி (மலேசியா) (தே.மு) பெரிக்காத்தான் நேசனல் (பெ.நே) |
துணைவர் | இந்திராணி சாமிவேலு |
பிள்ளைகள் | 1 |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | கட்டடக் கலைஞர் |
சாமிவேலு சங்கிலிமுத்து (S. Samy Vellu; 8 மார்ச் 1936 – 15 செப்டம்பர் 2022) மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர். இவர் 1979-ஆம் ஆண்டில் இருந்து 2010-ஆம் ஆண்டு வரை ம.இ.கா.வின் தலைவர் பதவியில் சேவை ஆற்றியுள்ளார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராகப் பதவி வகித்தவர். இவர் 2022 செப்டம்பர் 15 இல் கோலாலம்பூரில் தனது 88-ஆவது அகவையில் மூப்பின் காரணமாகக் காலமானார்.
நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் சேவை செய்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன.[1]
சாமிவேலு 1963-இல் இருந்து மலேசிய வானொலி, மலேசியத் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசியத் தகவல் இலாகாவில் நாடகக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர்.
ஆகிய முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர்.
1974-ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார்.
2008-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், தன்னுடைய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெயக்குமார் தேவராஜ் எனும் மலேசிய சமூகக் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அந்தப் பொதுத் தேர்தல் முடிவு அவரின் அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்தது.
1960-களில் இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அரசியலில் ஓர் இறுக்க நிலை ஏற்பட்டது. அப்போது இந்தோனேசியாவை அதிபர் சுகர்ணோ ஆட்சி செய்து வந்தார். மலாய்க்காரர்கள் வாழும் நாடுகள் எல்லாம் இந்தோனீசியாவிற்குச் சொந்தம் என்று பிரகடனம் செய்தார். Ganyang Malaysia எனும் வாசகங்களிப் பயன் படுத்தி ’மலேசியாவை நசுக்குவோம்’ என்று தீவிரம் காட்டினார்.
மலேசியாவிற்குள் இந்தோனேசியப் படைகள் தரை இறங்கின. உலக அரசியல் அரங்கில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டது.[2] அந்தக் கட்டத்தில் சாமிவேலு, கோலாலம்பூரில் இருந்த இந்தோனேசிய தூதரகத்தின் கொடிக் கம்பத்தில் ஏறி இந்தோனேசிய நாட்டுக் கொடியைக் கீழே இறக்கி எரித்தார்.
அவருடைய நாட்டுப் பற்றின் மூலம் அவரது புகழ் மலேசியா முழுமையும் பரவத் தொடங்கியது. மலேசிய ஆங்கில, மலாய், சீன, தமிழ் நாளேடுகள் அவரைப் பெரிதும் புகழ்ந்தன.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரத்தில், ஆவாரம்பட்டி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட சங்கிலிமுத்து நரங்கியர், அங்கம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாக ஜொகூர் மாநிலத்தில் குளுவாங் நகருக்கு அருகில் இருந்த செங்கமலை ரப்பர் தோட்டத்தில் பிறந்தார்.[3]
தனது ஐந்தாவது வயதில் ஜொகூர் மாநிலத்தை விட்டு சிலாங்கூர் மாநிலத்தில் இருந்த எல்மினா தோட்டத்திற்குப் பெற்றோருடன் வந்தார். தாய் தந்தையருக்கு பால் மரம் சீவும் வேலைகலில் உதவி செய்தார்.
பின்னர், இவருடைய குடும்பம் நிலக்கரிச் சுரங்க நகராக விளங்கும் பத்து ஆராங்கிற்கு குடி பெயர்ந்தது. பத்து ஆராங்கிற்கு குடி வந்த பின்னரும் அவருடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஏழ்மை தொடர்ந்து வந்தது.
பத்து ஆராங்கிற்கு அருகில் ரவாங் நகரம் உள்ளது. அந்த நகரத்தில் இயங்கி வந்த கிளைவ் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். நான்காம் வகுப்பு வரை தான் பயின்றார். அதன் பின்னர் குடும்பத்தின் வறுமை அவருடைய வாழ்க்கையைத் திசைத் திருப்பியது.
அவரால் படிப்பைத் தொடர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. குடும்பத்தின் ஏழ்மை நிலை அவரை மேலும் மோசமாக்கியது. வேறு வழி இல்லாமல், அந்தச் சின்ன வயதிலேயே குடும்பத்திற்கு உதவியாக வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.
மோகினி சுருட்டு நிறுவனத்தில் சுருட்டு சுற்றும் வேலையில் சேர்ந்தார். புகையிலையின் வாடை அவருக்கு ஒத்து வரவில்லை. வேலையை விட்டு விக வேண்டிய நிலைமை.
பிறகு, பத்து ஆராங்கில் உள்ள ‘மலாயன் கொலிரியர்ஸ்’ எனும் நிறுவனத்தில் அலுவலகப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். குடும்பச் சுமையைக் குறைப்பதற்காகப் படிக்கும் வயதில் அலுவலகத்தில் எடுபிடி வேலைகளையும் செய்து உள்ளார். இரவு வகுப்புகளில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்.
சாமிவேலுவின் கடின உழைப்பு மலாயன் கொலிரியர்ஸ் நிர்வாகத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதனால் அவருக்கு எழுத்தர் வேலை வழங்கப் பட்டது. அந்த வேலையில் அவர் சிறிது காலம் பணிபுரிந்தார்.
1950 ஆம் ஆண்டு நவம்பர் 7-இல் அவருடைய தாயார் அங்கம்மாள் இயற்கை எய்தினார். தாயாரின் இழப்பு அவரைப் பெரிதும் பாதித்தது. அதன் பின்னர், அவர் அங்கு இருக்க விரும்பவில்லை. 1951-இல் பத்து ஆராங் நகரையே விட்டு கோலாலம்பூருக்கு வந்து சேர்ந்தார்.
1951-இல் கோலாலம்பூரில் செந்தூல் பகுதியில் உள்ள ஓர் உணவுக் கடையில் சமையல்காரருக்கு உதவியாளராகச் சிறிது காலம் வேலை பார்த்தார். அந்தக் காலகட்டத்தில் கோலாலம்பூரில் ஸ்ரீ ஜெயா பேருந்து நிறுவனம் செயல்பட்டு வந்தது. உதவிச் சமையல்காரர் வேலையை விட்டு விட்டு ஸ்ரீ ஜெயா நிறுவனத்தில் சேர்ந்து பேருந்து உதவியாளராக வேலை செய்தார்.
அங்கு வேலை செய்கின்ற காலத்தில் அவருக்கு வேதவனம் கட்டடக் கலைஞர் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகப் பணி புரியும் புதிய வேலையும் கிடைத்தது. இந்த வேலை தான் சாமிவேலுவின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.
வேலை நேரங்கள் போக ஓய்வு நேரங்களில் கோவிந்தசாமி என்பவரின் துணையுடன் கட்டடக்கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். கட்டட வரைபடத் துறையில் பயிற்சியாளராகவும் சேர்ந்து தன்னுடைய கல்வி நிலையை வளர்த்துக் கொண்டார்.
தந்தையார் சங்கிலிமுத்து 1957ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி மறைந்த போது சாமிவேலுவின் வயது 21. இக்கட்டத்தில் சகோதரர்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பு சாமிவேலுவின் தோளில் விழுந்தது.
குடும்பத்தின் மீது காட்டிய அதே அக்கறையை, கடமை உணர்வைப் பின்னர் சமுதாயத்தின் மீதும் செலுத்த வேண்டிய பொறுப்பு சாமிவேலுவுக்கு வாய்த்தது. 1960 ஆம் ஆண்டில் பத்து கேவ்ஸ் ம.இ.கா. கிளையில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர், அக்கிளையின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
1964 ஆம் ஆண்டில் ம.இ.கா. மத்திய செயலவையில் இடம் பிடித்தார். அத்துடன் அவர் ம.இ.கா. தேசிய கலாசாரப் பிரிவுத் தலைவராகவும் அப்போதைய தேசியத் தலைவர் துன் சமபந்தனால் நியமிக்கப் பட்டார்.
பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட கால கட்டத்திலேயே சாமிவேலு தனது கல்வித் தகுதியையும் பெருக்கிக் கொண்டார். லண்டனுக்குச் சென்று Royal Institute of British Architects எனும் அரச பிரித்தானிய கட்டடக்கலைக் கழகத்தில் கட்டடக்கலைத் தேர்வு எழுதி வல்லுநராகத் தாயகம் திரும்பினார். அந்தத் துறையிலேயே தொழில் புரியவும் தொடங்கினார்.
அரசியலில் சிலாங்கூர் மாநிலத் தலைவராகவும், தேசிய உதவித் தலைவராகவும் தொடர்ந்து தேசியத் துணைத் தலைவராகவும் கடுமையான போட்டிகளுக்கு இடையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974-இல் முதல் முறையாகச் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1978-இல் துணையமைச்சராக நியமிக்கப் பட்டார். அதற்கு மறு ஆண்டில் அதாவது 1979-இல் முழு அமைச்சராகத் தகுதி உயர்த்தப் பட்டார். 1979 அக்டோபர் 12-இல் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவிற்குப் பின் சாமிவேலு தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து மலேசிய அமைச்சரவையில் பொதுப்பணி அமைச்சராகவும், 1990 முதல் 1995 வரை எரிசக்தி தொலைத் தொடர்பு அஞ்சல் துறை அமைச்சராகவும் பணி புரிந்தார். அரசாங்கத்தின் தூதுக்குழுக்களில் இடம் பெற்ற சாமிவேலு உலகின் பல நாடுகளுக்கு மலேசியாவைப் பிரதிநிதித்து சென்றுள்ளார்.
1979 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில சுல்தான் இவருக்கு ‘டத்தோ’ விருதை வழங்கினார். 1980-இல் ஜொகூர் மாநில சுல்தானும் இவருக்கு டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.
1982-இல் கொரியக் குடியரசு சாமிவேலுவுக்கு கொரிய அரச சேவை விருதை வழங்கியது. 1982-இல் இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய உயரிய அரசு சேவை விருதை வழங்கிக் கௌரவம் செய்துள்ளது. 1987-இல் உலக மாமனிதர் எனும் கௌரவ விருதை அமெரிக்க அரசாங்கம் வழங்கியது.
அப்போதைய பிரதமர் துன் (டத்தோ ஸ்ரீ) டாக்டர் மகாதீர் தலைமையில் செயல்பட்ட அமைச்சரவை பினாங்கு பாலத்தைக் கட்டி முடிக்கும் பொறுப்பைச் சாமிவேலுவிடம் வழங்கியது. அதன்படி 1985 செப்டமபர் 14-இல் 13.4 கி.மீ. தூரமுள்ள பினாங்கு பாலம் கட்டி முடிக்கப் பட்டது. இந்தப் பாலம் உலகின் நான்காவது நீளப் பாலமாக இருந்து வருகிறது.
1989 ஆம் ஆண்டு பேராக் சுல்தான் தன் 61ஆம் பிறந்த நாளில் சாமிவேலுவிற்கு ‘டத்தோ ஸ்ரீ’ எனும் விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார். அதே ஆண்டு இந்தியாவின் புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது சாமிவேலுவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.
2001 ஆம் ஆண்டில் தமிழகத் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி, தமிழக முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சாமிவேலுவிற்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பு செய்தார்.
நாட்டின் மிக உயரிய விருதான “துன்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார். மலேசிய வரலாற்றில் துன் விருது பெறும் இரண்டாவது இந்தியர் சாமிவேலு ஆவார்.[4]
இவருடைய மனைவியின் பெயர் டத்தின் ஸ்ரீ இந்திராணி. இவர் சமூக அரசியல் கழகங்கள், அரசு சாரா இயக்கங்களின் தொண்டூழியச் சேவைகளில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு செயல் பட்டு வருகிறார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்பதியினருக்கு வேல்பாரி (பிறப்பு:1965) எனும் ஒரு மகன் உள்ளார்.
வேல்பாரி சர்ச்சைக்குரிய மலேசிய இந்தியர்களின் மைக்கா ஹோல்டிங்ஸ் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஷீலா நாயர், (பிறப்பு:1976) டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்பதியினரின் மருமகள் ஆவார்.
2008 ஆம் ஆண்டில், ம.இ.கா.வின் மாஜு கல்வி வளர்ச்சிக் கழகத்தின் (Maju Institute of Education Development (MIED)) நிர்வாக இயக்குநர் சித்திரகலாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடரப் பட்டது. அந்தக் குற்றச் சாட்டை மறுத்த சித்திரகலா, ம.இ.கா தலைவர்களின் மீதே திருப்பிக் குற்றம் சாட்டினார். இப்போது அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் கண்டுள்ளது.
2000 ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களின் ஒரே பிரதிநிதியாக டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டது ஒரு தவறான வியூகம் என்று மலேசிய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இவர் மீது ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பு படுத்தப்பட்டன.[5]
அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கிய மான்யத் தொகைகள் முறையாகப் போய்ச் சேரவில்லை எனும் குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப் பட்டன.[6]
மலேசியாவின் பல சர்ச்சைக்குரிய இந்திய பிரச்னைகளில் இவர் தலையிட்டுத் தீர்வு காண முயற்சி செய்தார். ஆனால், சரியான தீர்வுகளைக் காண முடியவில்லை. அவரின் கீழ் பணிபுரிந்தவர்கள் அவரையே மோசம் செய்து விட்டனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து சொல்கின்றனர்.
நவம்பர் 25, 2007ல் வெடித்த மலேசிய இந்திய மக்கள் போராட்டமும் அதனை டத்தோ ஸ்ரீ சாமிவேலு தீர்வு காணக் கையாண்ட முறைகளும் இந்திய மலேசியர்களை அவருக்கு எதிராகத் திருப்பி விட்டன.[7]. அதனால், சாமிவேலுவின் அரசியல் எதிர்காலமும் பாதிப்பு நிலையை அடைந்தது.
பின்னர், மார்ச் 8, 2008ல் நடந்த பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட மரு. ஜெயக்குமார் தேவராஜிடம் சாமிவேலு தோல்வி கண்டார். அதன் விளைவாக, நாடாளுமன்ற உறுப்பியத்தையும் அமைச்சர் பொறுப்பையும் இழந்தார்.
இவர் தலைமையில் இயங்கிய மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் தோல்வி அடைந்தது. அது மட்டும் இல்லை. ஆளும் கட்சியில் இருந்த பாரிசான் நேசனல், மலேசியாவில் நான்கு மாநிலங்களை எதிர்க்கட்சிகளிடம் பறி கொடுத்தது. ம.இ.கா. பாரிசான் நேசனல் கூட்டணியின் பங்காளிக் கட்சியாகும்.
{{cite web}}
: Check date values in: |date=
(help)