சதயம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 24 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது சதய நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் சதய நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" சதயம் ஆகும்.
ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து நான்காவது நட்சத்திரமாகிய சதயம் 306° 40'க்கும் 320° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் சதய நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுவதும் கும்ப இராசியில் அமைந்துள்ளது.
இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி சதய நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் அக்குவாரியசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட அவிட்டத்தின் (γ அக்குவாரீ) பெயரைத் தழுவியது. அவிட்டத்தின் சமசுக்கிருதப் பெயரான ஷத்தபிஷா (Shatabhisha) என்பது "நூறு குணப்படுத்துபவர்கள்" அல்லது "நூறு பூக்கள்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "வெறும் வட்டம்" ஆகும்.
இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. சதய நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]
கோள் | இராகு |
தேவதை | வருணன் |
தன்மை | அசையும் |
சாதி | சங்கர சாதி |
கோத்திரம் | கிருது |
பால் | அலி |
குணம் | இராட்சத குணம் |
இயற்கை மூலம் | ஆகாயம் |
விலங்கு | பெண் குதிரை |
பறவை | அண்டங்காக்கை |
மரம் | கடம்பு |
நாடி | இடை |