சந்திரவதி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 24°27′00″N 72°46′00″E / 24.45000°N 72.76667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ராஜஸ்தான் |
வட்டம் | ஆபு சாலை |
மொழி | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | ஆர்ஜே-38 |
சந்திரவதி (Chandravati) சந்திரோதி என்று பிரபலமாக அறியப்படும் இது, [1] இந்தியாவின் இராஜஸ்தானில் மேற்கு பனாஸ் ஆற்றங்கரையில் ஆபு சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். பண்டைய காலங்களில் இது ஒரு விரிவான நகரமாக இருந்தது. தற்போதைய கிராமங்களான தத்தானி, கிவேர்லி, காரடி மற்றும் சாந்த்புரா அதன் புறநகர்ப் பகுதிகளாக இருந்தன. பழைய இடிபாடுகளான கோயில்கள், தோரணங்கள் மற்றும் பெரிய பரப்பளவில் சிதறிக் கிடக்கும் உருவங்கள், அதன் கடந்த காலப் பெருமைக்குச் சான்று பகர்கின்றன.
பரமாரர்கள் சந்திரவதியை நிறுவுவதற்கு முன்பு அந்த இடத்தில் ஒரு பெரிய குடியேற்றம் இருந்ததாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [2] சந்திரவதியை சந்திரவதியின் பரமாரர்கள் ஆட்சி செய்தனர். [1] சிந்துராஜா என்பவர் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இப்பகுதியை ஆண்ட முதல் பரமாரா ஆட்சியாளர் ஆவார். [3]
கி.பி 1024 இல், பதானைத் தாக்க இராஜஸ்தான் வழியாகச் சென்றபோது கசினியின் மகுமூதுவால் சந்திரவதி தாக்கப்பட்டு சூறையாடப்பட்டது. கிபி 1192 இல் பிருத்திவிராச் சௌகானைத் தோற்கடித்த பிறகு, முஸ்லிம் இராணுவமும் சந்திரவதியைத் தாக்கியது. [1]
சந்திரவதியில் ஏராளமான கோவில்கள் இருந்தன. முக்கியமாக சிவன் மற்றும் சைனக் கோவில்கள் இருந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்குச் சென்ற பல ஐரோப்பிய அறிஞர்கள் எஞ்சியிருக்கும் கலை மாதிரிகள் பற்றி எழுதியுள்ளனர். ஜேம்ஸ் டோட் மேற்கிந்தியாவில் தனது பயணங்கள் என்ற நூலில் இந்தக் கோயில்களில் சிலவற்றின் படங்களைக் கொடுத்துள்ளார். 1824 இல் சார்லஸ் கொல்வில் மற்றும் அவரது குழுவினர் சந்திரவதிக்கு விஜயம் செய்து வெவ்வேறு அளவுகளில் இருபது பளிங்குக் கட்டிடங்களைக் கண்டனர். பிரம்மாவுக்கு ஒரு கோயில் செழுமையான மற்றும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மற்றொரு அறிஞரான பெர்குசன், இரண்டு தூண்களும் ஒரே மாதிரியாக இல்லாத அளவுக்கு விவரங்கள் மற்றும் வகைகளில் தூண்கள் மிகவும் அலங்கரிக்கப்பட்டுள்ளன எனக் கூறுகிறார்.
தற்போது ஒரு கோவில் கூட ஒழுங்காக இல்லை. பழைய கோயில்களின் துண்டுகள் அகற்றப்பட்டு தொலைதூர நகரங்களில் உள்ள கோயில்களில் பயன்படுத்தப்பட்டன. சுதந்திரத்திற்கு முன்பு ராஜ்புதனா மால்வா ரயில்வேயின் ஒப்பந்தக்காரர்களால் பல நினைவுச்சின்னங்கள் அழிக்கப்பட்டன. அபு சாலை தொழிற்பேட்டை விரிவாக்கம் செய்யப்பட்டு, பாலன்பூர்-அபு சாலை நெடுஞ்சாலை கட்டப்பட்டபோது மீதமுள்ளவை திருடப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. இது பண்டைய தளத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது. [2]
This article incorporates text from a publication now in the public domain: Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha. Government Central Press. 1880. p. 338.