இந்து சமயப் புராணங்களில் படைப்புக் கடவுள் பிரம்மா முதன் முதலாக படைத்ததாகச் சொல்லப்படும் நால்வரில் ஒருவர் சனத்குமாரர். மற்ற மூவர் சனகர், சதானந்தர், சனாதனர் என்பவர். இவர்கள் நால்வரையும் படைத்தல் தொழிலில் ஈடுபடச் சொன்னார் பிரம்மா. ஆனால் அவர்கள் தோன்றியவுடனேயே ஆன்மிக அறிவில் சிறந்த நித்திய பிரம்மச்சரிய வாழ்வை மேற்கொண்டனர். பரம்பொருளின் தியானத்தைத் தவிர வேறு எதிலும் அவர்கள் மனம் செல்லவில்லை. புராணங்களில் இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசித்ததைப் பற்றி நிறையவே உள்ளது. சனத்குமாரர் எழுதியதாக கூறப்படும் சனத்குமார சம்ஹிதை எனும் நூல் பாஞ்ச ராத்திர ஆகமம் வைணவர்களால் போற்றப்படுகிறது.[1]
சாந்தோக்ய உபநிடதத்தில் நாரதருக்கும் சனத்குமாரருக்கும் ஒரு நீண்ட உரையாடல் அதன் ஏழாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படுகிறது. அது பூமா வித்தை என்ற வேதாந்தக் கருத்து. அல்பமான பொருளில் சுகம் கிடையாது; அநந்தமான பரம்பொருளில் தான் சுகம் என்பதை சனத்குமாரர் நாரதருக்கு உபதேசிக்கிறார்.
குருச்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பேரரசன் திருதராஷ்டிரனுக்கு அவர் உடன்பிறந்த விதுரன் பல நீதிகளை எடுத்துரைக்கும் ஓரிரவு. (இந்த நீதிகள் அடங்கியதுதான் 'விதுர நீதி' என்று புகழ் பெற்ற நூல்). அதில் 'சாகாநிலை' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார் விதுரர். திருதராஷ்டிரருக்கு தன் 100 புத்திரர்களும் போரில் சாகாநிலையை அடையவேண்டும் என்ற அவா. இதனால் தூண்டப்பட்டு தனக்கு இறவாநிலையைப் பற்றிச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்துகிறார். விதுரர் தன் யோகசக்தியினால் தேவலோகத்திலிருந்த சனத்குமாரரை உடனே அழைக்க அவர் திருதராஷ்டிரரின் கேள்விகளுக்கெல்லாம் விவரமாக பதில் சொல்லுகிறார். இது மகாபாரதத்தின் உத்தியோகபர்வத்தில் ஒரு மூன்று அத்தியாயமாக விவரிக்கப்படுகிறது. இம்மூன்று அத்தியாயங்களுக்கு சனத்சுஜாதீயம்[2][3] என்று பெயர். வேதாந்த தத்துவங்கள் வெகு எளிமையாக விளக்கப்பட்டிருக்கும் நூல்.