சபா மக்களாட்சி முற்போக்கு கட்சி Liberal Democratic Party Sabah Parti Liberal Demokratik Sabah | |
---|---|
தலைவர் | லியூ ஊய் கியோங் Liew Vui Keong |
தொடக்கம் | 1989 |
தலைமையகம் | P.O.Box 16033, 88866 கோத்தா கினபாலு, சபா |
கொள்கை | இனவாதம் |
நிறங்கள் | சிகப்பு, செம்மஞ்சள், கறுப்பு[1] |
மலேசிய மேலவை: | 0 / 70 |
மலேசிய மக்களவை: | 0 / 26 |
சபா மாநில சட்டமன்றம்: | 0 / 79 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
www |
சபா மக்களாட்சி முற்போக்கு கட்சி (மலாய்: Parti Liberal Demokratik Sabah, ஆங்கிலம்: Liberal Democratic Party Sabah, சீனம்: 沙巴联合党) என்பது கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள ஒரு சீன அரசியல் கட்சியாகும். 1989ஆம் ஆண்டு லியூ மின் கோங் என்பவரால் சபா, தாவாவ் நகரில் தோற்றுவிக்கப்பட்டது. இந்தக் கட்சி, மலேசியாவில் உள்ள ஒரு சிறிய அரசியல் கட்சியாகும். இதனை எல்.டி.பி என்று அழைப்பார்கள்.
இக்கட்சியின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சபா மாநிலத்தின் எல்லைக்குள்ளே உள்ளன. 2008ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் அதற்கு சண்டாக்கான் தொகுதியில் மட்டும் ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்தில் வெற்றி கிடைத்தது. அந்தக் கட்சியின் தலைவர் லியூ ஊய் கியோங் என்பவர் அதன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் தோழமைக் கட்சிகளில் ஓர் உறுப்புக் கட்சியாகவும் இருக்கின்றது.
1989ஆம் ஆண்டு சபா மாநிலத்தின் ஆளும் கட்சியாகவும், மலேசிய நடுவண் அரசாங்கத்தில் எதிர்க் கட்சியாகவும் பி.பி.எஸ் எனும் ஐக்கிய சபா கட்சி (ஆங்கிலம்: United Sabah Party) இருந்த காலகட்டத்தில்தான், இந்த ஜனநாயக விடுதலை கட்சி உருவாக்கப்பட்டது. அப்போது பெர்ஜாயா (ஆங்கிலம்: Berjaya), ஐக்கிய சபா தேசிய அமைப்பு United Sabah National Organization (ஆங்கிலம்: Liberal Democratic Party), சபா சீனர் கட்சி (ஆங்கிலம்: Sabah Chinese Party) போன்ற கட்சிகள் ஐக்கிய சபா கட்சிக்கு வலுவான எதிர்க்கட்சிகளாக இருந்தன.
ஜனநாயக விடுதலை கட்சி உருவாக்கப்பட்டதும் ஐக்கிய சபா கட்சிக்கு மேலும் சற்று கூடுதலான மிரட்டல் ஏற்பட்டது. 1990ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலில் ஜனநாயக விடுதலை கட்சி 14 வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால், எல்லா இடங்களிலும் தோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் பி.பி.எஸ் எனும் ஐக்கிய சபா கட்சி, தான் போட்டியிட்ட 48 இடங்களில் 44இல் வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை அமைத்தது.
1990ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தாலும், 1991ஆம் ஆண்டில் பாரிசான் நேசனல் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது.[2] சபா மாநிலத்தில் சீனர்களை மட்டும் அடித்தளமாகக் கொண்டு இயங்கிய ஒரு கட்சி பாரிசான் நேசனல் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப்படுவது அதுவே முதல் முறை.
பி.பி.எஸ் எனும் ஐக்கிய சபா கட்சியை எதிர்த்துப் போராட, சபா மாநிலத்தில் அம்னோ களம் இறக்கப்பட்டதும் பெர்ஜாயா, ஐக்கிய சபா தேசிய அமைப்பு போன்ற கட்சிகள் கலைக்கப்பட்டன. அதன் பின்னர், அந்தக் கட்சிகள் அரசியல் அரங்கில் சுவடுகள் இல்லாமலேயே போய்விட்டன. ஜனநாயக விடுதலை கட்சி தப்பித்துக் கொண்டது.
பாரிசான் நேசனல் கூட்டணியில் சேர்ந்ததும், தேர்தலில் போட்டியிட ஜனநாயக விடுதலை கட்சிக்கு தெனோம், கூடாட், செம்புலான் ஆகிய மூன்று இடங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றுள் கூடாட் தொகுதியில் மட்டுமே அது வெற்றி பெற்றது. மற்ற இரு இடங்களில் பி.பி.எஸ் கட்சியிடம் தோல்வி அடைந்தது.
1994ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் சபா மாநில அரசியலில் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன. பல சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவல் செய்தனர். அதனால் பி.பி.எஸ் எனும் ஐக்கிய சபா கட்சி சரிந்து விழுந்தது. அம்னோ மாநில ஆட்சியைக் கைப்பற்றி மாநில அரசாங்கத்தை அமைத்தது. அப்போது அமைக்கப்பட்ட அமைச்சரவையில், ஜனநாயக விடுதலை கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோங் ஹோங் மிங் என்பவரை மாநில அமைச்சரவையிலும் சேர்த்துக் கொண்டது.
1994ஆம் ஆண்டு ஜனநாயக விடுதலை கட்சியின் தலைவராக இருந்த சோங் கா கியாட் என்பவர் மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்தக் கட்டத்தில் கூடாட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோங் ஹோங் மிங் என்பவருக்கும் தலைவராக இருந்த சோங் கா கியாட்டிற்கும் பிரச்னைகள் தலைதூக்கின.
அந்தப் பிரச்னைகளில் இருந்து சோங் கா கியாட் பின்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கோங் ஹோங் மிங் கட்சியில் இருந்து வெளியேறினார். தன்னுடைய மாநில அமைச்சர் பதவியையும் ராஜிநாமா செய்தார். சோங் கா கியாட், தன்னுடைய மாநில அளவிலான அரசியலில் இருந்து விடுபட்டு மலேசிய நடுவண் அரசாங்கத்தில் பிரதமர் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1995ஆம் ஆண்டில் இருந்து 1999 ஆம் ஆண்டு வரை பிரதமர் துறையில் அமைச்சராக இருந்தார்.
இப்போது லியூ ஊய் கியோங் என்பவர் ஜனநாயக விடுதலை கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் சபாவின் முதலைமைச்சராகவும் பதவி வகித்தவர். தம்முடைய தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.[3]