சரிபாஸ் அல்லது சரிபாஸ் இராச்சியம் (மலாய் மொழி; ஆங்கிலம்: Saribas) என்பது போர்னியோ தீவின், சரவாக், பெத்தோங் பிரிவில், 17--ஆம் நூற்றாண்டில் இருந்த ஒரு வரலாற்று நிலப்பகுதியாகும். தற்போதைய நிலையில், இபான் பண்பாட்டின் மையமாகக் கருதப்படும் சரிபாஸ் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.[1] இதற்கு சரவாக் இழந்த இராச்சியம் (The Lost Kingdom of Sarawak) எனும் பெயரும் உண்டு.[2]
பெத்தோங் பிரிவின், மூன்று முக்கிய ஆறுகளான பாத்தாங் ராயார் ஆறு (Batang Rayar), பாத்தாங் பாக்கு ஆறு (Batang Paku) மற்றும் பாத்தாங் ரிம்பாஸ் ஆறு (Batang Rimbas) ஆகிய ஆறுகளின் படுகைகளில் சரிபாசு இராச்சியம் அமைந்து இருந்தது.
ஜேம்சு புரூக் எனும் வெள்ளை இராசாவுக்கும் இபான் மக்களுக்கும் இடையே 31 சூலை 1849-இல் நடந்த போருக்குப் பின்னர், சரிபாஸ் இராச்சியம், சரவாக் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
இபான் மக்கள், சரவாக் மாநிலத்தின் பூர்வீகப் பழங்குடியினர். இவர்கள் கடல் டயாக் (Sea Dayaks) மக்கள் என்று அழைக்கப்படுவதும் உண்டு.[3][4]
சரிபாஸ் அதன் இபான் மக்களின் நீளவீடுகளுக்கு (Longhouses) பிரபலமானது; மற்றும், சரிபாஸ் குடியேற்றப் பகுதிகள், இபான் பண்பாட்டின் மையமாகவும் கருதப் படுகிறது. சரிபாஸ் பகுதியில் 222 நீளவீடுகள் உள்ளன.
16-ஆம் நூற்றாண்டில், சரவாக்கின் கடலோரப் பகுதிகள், புருணை பேரரசின் செல்வாக்கின் கீழ் வந்தன. 1609-ஆம் ஆண்டில், ஜொகூர் சுல்தானகத்துடன் அரசியல் ரீதியாக இணைத்துக் கொள்வதற்காக கலகா இராச்சியம் (Kelaka kingdom), சரிபாஸ், மற்றும் மெலனோவில் (Melano) வாழ்ந்த பழங்குடியினர், புரூணை சுல்தானகத்திற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுட்டுள்ளனர்.[5] டச்சு தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.
சரிபாஸ் ஆறு மற்றும் ரிம்பாஸ் ஆறு; ஆகிய ஆறுகளின் சங்கமத்தில் அமைந்து இருந்த சரவாக்கின் ஐந்து தொடக்க்கால இராச்சியங்களில் சரிபாஸ் இராச்சியமும் ஒன்றாகும். இது 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் நிறுவப்பட்டு இருக்கலாம்.[5]
சில்சிலா ராஜா-ராஜா புரூணை (மலாய்: Silsilah Raja-Raja Brunei; ஆங்கிலம்: Genealogical History of the Sultans of Brunei) எனும் புரூணை சுல்தான்களின் பரம்பரை வரலாற்றுக் கையெழுத்துப் பிரதியில், சரிபாஸ் இராச்சியம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
புரூணை நாட்டு உயர் அதிகாரியான பெங்கீரான் தெமெங்கோங் டத்து அப்துல் காதிர் (Pengiran Temenggong Datu Abdul Kadir) என்பவரின் மகள் தாங் சி (Dang Chi’) எனும் தாங் இசா (Dayang Esa) என்பவரை புரூணை சுல்தான் கைப்பற்றி, தன் 3-ஆவது மனைவியாக்க முயற்சி செய்தார். அதனால் சினமடைந்த தெமெங்கோங் டத்து அப்துல் காதிர், புரூணை நகரை விட்டு வெளியேறினார்.
தெமெங்கோங் டத்து அப்துல் காதிர், சரிபாஸ் ஆற்றின் கரையோரத்தில் தண்டாங் சாரி (Tandang Sari) எனும் இடத்தில் ஒரு புதிய தலைநகரை அமைத்தார். தன் மகளை மீட்க டத்தோ குடாம் (Dato Gudam) என்பவரை அனுப்பினார். டத்தோ குடாம் என்பவர் சுமத்திரா, பகாருயோங் மினாங்கபாவு இனத்தைச் சேர்ந்தவர்.[6][7]
தாங் இசாவை மீட்டெடுத்த டத்தோ குடாம் அவளையே மணம் புரிந்து கொண்டார். பின்னர் இவர் சரிபாஸ் இராச்சியத்தின் ஆட்சியாளரானார். அதன் பின்னர் சரிபாஸ் நிர்வாகத்தின் ஆட்சியாளர்களுக்கு டத்து பாத்திங்கி, டத்து பண்டார், அவுலக்சமானா, டத்து இமாம் மற்றும் டத்து அக்கீம் எனும் இராச்சியப் பெயர்கள் தகுதிகளுக்கு ஏற்றவாறு வழங்கப்பட்டன.[5][2]
1750-ஆம் ஆண்டுகளில், இபான் மக்கள், கப்புவாஸ் உலு (Kapuas Hulu) பகுதிகளில் இருந்து சரிபாஸ் பகுதிக்கு இடம்பெயரத் தொடங்கினர்.[8] ஐந்து தலைமுறைகளுக்குள் அவர்கள்; பாடாங் லுபார், பாடாங் சாடோங், பாடாங் லாயார், சரிபாஸ் ஆகிய இடங்களில் தங்களின் சமூகங்களை நிறுவினர்.
1839-ஆம் ஆண்டில், ஜேம்சு புரூக் எனும் பிரித்தானிய ஆய்வாளர், சரவாக்கிற்கு வந்தார். புரூணை சுல்தானால் அவருக்கு ஒப்படைக்கப்பட்ட பிரதேசத்தில் சரவாக் இராச்சியத்தை நிறுவினார். அந்தக் கட்டத்தில் சரிபாஸ் இராச்சியம், சரவாக் இராச்சியத்தில் சேர்க்கப்படவில்லை.
1841-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரையில், புரூக் குடும்பத்தால் (வெள்ளை இராசாக்கள்) சரவாக் இராச்சியம் நிர்வகிக்கப்பட்டது. 1843-இல், பாடாங் சரிபாஸ் பகுதியின் பாடே, பாக்கு, ரிம்பாஸ் கிராமங்களில் இருந்த இபான் மக்களை ஜேம்சு புரூக்கின் படைகள் தாக்கின.[9] இருந்தாலும் வெற்றி பெற இயலவில்லை.
1849-ஆம் ஆண்டு சூலை 31-ஆம் தேதி சரவாக், பெத்திங் மாரு எனும் இடத்தில் ஒரு போர் நடந்தது (Battle of Beting Maru). செக்ராங் (Sekrang) இபான் மக்கள்; மற்றும் சரிபாஸ் இபான் (Saribas Iban) மக்களுக்கும்; ராஜா ஜேம்சு புரூக்கிற்கும் (Rajah James Brooke) நடந்த போர் ஆகும். அதில் ஜேம்ஸ் புரூக் வெற்றி பெற்றார். அதன் பிறகு, சரிபாஸ் பகுதி சரவாக் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
புரூணை சுல்தான் 1853-இல் சரிபாஸ் மற்றும் செக்ராங் (Skrang) மாவட்டங்களை ஜேம்சு புரூக்கிற்கு விட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் சரிபாஸ் இராச்சியம் சரவாக் மாநிலத்தின் இரண்டாம் பிரிவாக மாறியது.[10]