சரோஜினி வரதப்பன் | |
---|---|
![]() | |
பிறப்பு | மதராசு, இந்தியா | 21 செப்டம்பர் 1921
இறப்பு | 17 அக்டோபர் 2013 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 92)
தேசியம் | இந்தியர் |
பணி | சமூக சேவகி |
வாழ்க்கைத் துணை | வரதப்பன் |
விருதுகள் | பத்ம ஸ்ரீ (1973) ஜம்னாலால் பஜாஜ் விருது (2004) பத்ம பூசன் (2009) |
சரோஜினி வரதப்பன் (Sarojini Varadappan, செப்டம்பர் 21, 1921 - அக்டோபர் 17, 2013) தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகி ஆவார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகளாவார்.
சரோஜினி செப்டம்பர் 21, 1921 ஆம் ஆண்டு பக்தவத்சலம், ஞானசுந்தராம்பாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[1] ஒன்பதாம் வகுப்பு வரை லேடி சிவசாமி பெண்கள் பள்ளியில் படித்த இவர், அதன் பிறகு படிப்பை கைவிட்டார்.[1][2] இவர் தனி ஆசிரியர் மூலமாக இந்தியில் விசாரத் பயின்றார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பிலும், காங்கிரசு சேவை தளத்திலும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தார்.[1]
சிறிய வயதிலேயே தன்னுடைய உறவினரான வரதப்பன் என்பவரை மணந்தார்.[1]
சரோஜினி தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு மைசூர் பல்கலைக்கழகம் வாயிலாக அரசறிவியல் துறையில் முதுகலை பயின்றார்.[1] சென்னைப் பல்கலைக்கழகத்தில் வைஷ்ணவத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். தன்னுடைய 80-வது அகவையில் "சமூக சேவை மற்றும் நாராயணன் இயக்கம்" என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான முன்மொழிவை வைத்தார்.[1]
சரோஜினி, பாரூர் சுந்தரம் ஐயர் என்பவரிடம் இசையை முறையாக பயின்றார். இவர் காங்கிரசு கூட்டங்களில் வாழ்த்துப் பாடல்களை பாடியுள்ளார். இவர் சத்ரிய பாடங்களையும், தமிழ்ப் பாடங்களையும் மைலாப்பூர் கவுரி அம்மாவிடமும், பாரதியார் பாடல்களை கிருஷ்ணா ஐயரிடமும், இந்தி பஜன்களை வீனா விசாலாக்ஷியிடமும் பயின்றார்.[1]
தன்னுடைய சிறிய வயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய தாயார் ஞானசுந்தராம்பாள் உமன்ஸ் இந்தியா அசோசியேசன் (Women's India Association (WIA)) என்ற அமைப்பில் இருந்ததால், சரோஜினியும் அவருடன் இணைந்து கொண்டார்.[1] அவ்வமைப்பின் தலைவராக உயர்ந்தார்.[1] சரோஜினியின் தலைமையில், இவ்வமைப்பின் கிளை நான்கிலிருந்து எழுபத்தியாறாக உயர்ந்தது.[1] இவர் மைலாப்பூர் அகாதமியின் தலைவராகவும் இருந்தார்.[1]
சரோஜினி, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் 35 வருடத்திற்கு மேலாக இருந்தார்.[1] மாரி சன்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோது இவர் இச்சங்கத்தின் தலைவராக நியமிக்கப்படார்.[1] அதுவரையில் ஆளுநர்களின் மனைவியரே அப்பதவியை ஏற்றுவந்தனர்.[1] சன்னா ரெட்டியின் மனைவியும், சரோஜினிக்கு ஆதரவு தெரிவித்தார்.[1]
சரோஜினிக்கு, இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான பத்ம ஸ்ரீ விருது, 1973 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[1] பின்னர் இவருக்கு, 2004 ஆம் ஆண்டு ஜம்னாலால் பஜாஜ் விருது[3] மற்றும் 2009 ஆம் ஆண்டு, பத்ம பூசன் ஆகியவை இவருடைய சமூக சேவையை பாராட்டி வழங்கப்பட்டது.[4]
உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 92வது அகவையில், 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் இறந்தார்.[5][6][7]