சாந்தா சின்கா | |
---|---|
பிறப்பு | 7 சனவரி 1950 நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | பேராசிரியர், சமூக சேவகர் |
விருதுகள் | பத்மசிறீ (1999) ரமோன் மக்சேசே விருது (2003) |
சாந்தா சின்கா (Shantha Sinha-பிறப்பு: சனவரி 7, 1950)[1] ஓர் இந்தியக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு ஆர்வலர் ஆவார். அவர் மா. வெ. அறக்கட்டளை என்று பிரபலமாக அறியப்படும் மாமிடிப்புடி வெங்கடரங்கையா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்திற்குத் தொடர்ந்து இரண்டு முறை (தலா மூன்று ஆண்டுகள்) தலைமை வகித்துள்ளார். குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் மார்ச் 2007-இல் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம், 2005, நாடாளுமன்றத்தின் சட்டத்தின் (திசம்பர் 2005) கீழ் அமைக்கப்பட்டது. சின்கா இதன் முதல் தலைவராக இருந்தார். 1998-இல் இந்திய அரசால் பத்மசிறீ என்ற குடிமக்களுக்காக வழங்கப்படும் கவுரவம் இவருக்கு வழங்கப்பட்டது.[2]
சாந்தா சின்கா 1950 சனவரி 7 அன்று கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை செகந்திராபாத்தில் உள்ள தூய ஆன்சு உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். 1972-இல் உசுமானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு, 1976-இல் புது தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகக் கல்விப் பணியில் சேர்ந்தார்.[3]
சின்கா ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் கல்வியாளர் ஆவார். 2003ஆம் ஆண்டில், இவருக்குச் சமூகத் தலைமைக்கான ரமோன் மக்கசேசே விருது வழங்கப்பட்டது. "ஆபி மக்கள் குழந்தைத் தொழிலாளர் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வரவும், அவர்களின் குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பவும் வழிகாட்டியதில்" சின்கா ஆற்றிய பணியைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது. பத்மசிறீ விருதினை இந்திய அரசிடமிருந்து 1999ஆம் ஆண்டும்,[4] ஆல்பர்ட் சங்கர் பன்னாட்டு விருதினை (1999) கல்வி பன்னாடு நிறுவனத்திடமிருந்தும் பெற்றுள்ளார். அசோசாம் மகளிர் கூட்டமைப்பிடமிருந்தும் சமூக சேவைக்கான ஐதராபாத் மகளிர் தசாப்த சாதனையாளர் விருதையும் இவர் பெற்றுள்ளார்.[5] தெலங்காணாவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் கிட்டத்தட்ட 1200 கிராமங்களில் குழந்தைத் தொழிலாளர்களை அபரிமிதமாகக் குறைப்பதில் இவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. இவரது பணியை அங்கீகரித்த இந்திய அரசு, புதிதாக உருவாக்கப்பட்ட தேசியக் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் முதல் தலைவராக நியமித்தது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவரான சின்கா, குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வாதிட்டார், மேலும் இவ்வாரியத்தின் இன் உறுப்பினர் யோகேஷ் துபே மற்றும் மகளிர் அமைச்சகத்தின் செயலாளர் நீலா கங்காதரன் முன்னிலையில் இளம் பருவத் தொழிலாளர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் குழந்தைகள் நலம் குறித்து இவர் உரையாற்றினார்.[6]