சாந்தி பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களில் பன்னிரண்டாவது பருவம். தருமபுத்திரன் போரில் தனது உறவினர்களையும் பெரியவர்களையும் கொன்றதை நினைத்து வருந்தும் நிகழ்வுகள் இப்பருவத்தில் இடம் பெறுகின்றன. அரசரின் கடமைகள் குறித்து இறக்கும் தறுவாயில் வீடுமர் வழங்கிய அறிவுரைகளும் இப்பகுதியிலேயே எடுத்தாளப்பட்டு உள்ளன.[1]
இப்பருவம் மூன்று துணைப் பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை பின்வருமாறு:
இவற்றில் முதல் துணைப் பருவம் பிற விடயங்களுடன் அரசர்களது, தலைவர்களதும் கடமைகளை எடுத்துக் கூறுகிறது. இரண்டாவது துணைப்பருவம் பாதகமான நிலைமைகளை எதிர்கொள்ளும்போது ஒருவர் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றிச் சொல்கிறது. இறுதித் துணைப் பருவம் மோட்சம் அடைவதற்கான நடத்தைகள், விதிமுறைகள் என்பன பற்றிக் கூறுகின்றது.
சாந்தி என்பது அமைதி என்னும் பொருளுடையது. போர் முடிந்து அமைதி ஏற்பட்டு தருமர் முழு இராச்சியத்துக்கும் அரசனாகி ஆளத் தொடங்கினார். ஆனாலும், போரில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து மன அமைதி இல்லாது தவித்தார். நாரதர் தருமருக்குக் கூறிய ஆறுதல் வார்த்தைகள் இப்பருவத்தில் இடம்பெறுகின்றன. நாளாக ஆகத் தருமபுத்திரன் மனத்தில் சஞ்சலம் அதிகரிக்கிறது. கொல்லப்பட்டவர்கள் குறித்துத் துயரம் மேலோங்குகிறது. உலக ஆசைகளைத் துறந்து துறவறம் மேற்கொள்ள விரும்புகிறார். உடன்பிறந்தோரும், திரௌபதியும், வியாசர் முதலியோரும் தருமரை அமைதிப்படுத்துகின்றனர்.
அமைதிக்கால ஆட்சிக்குரிய விடயங்கள் பல இப்பருவத்தில் பேசப்படுகின்றன. போரில் காயம்பட்டு அம்புப் படுக்கையில் இருந்தபடி அரசருக்குரிய கடமைகள் குறித்தும், அறம், சிறந்த ஆட்சிமுறை என்பன குறித்தும், வீடுமர் கூறியவையும் இக்கட்டத்திலேயே வருகின்றன