இந்தோனேசிய வரலாறு |
---|
![]() |
காலவரிசை |
சாலகநகரா இராச்சியம் (ஆங்கிலம்: Salakanagara; Salakanagara Kingdom; மலாய்: Kerajaan Salakanagara; இந்தோனேசிய மொழி: Kerajaan Salakanagara; Kerajaan Rajatapura) என்பது கிபி 130–362-ஆம் ஆண்டுகளில் இந்தோனேசியா, மேற்கு ஜாவாவில் ஆட்சி புரிந்த ஓர் இந்திய மய இராச்சியமாகும். இதுவே இந்தோனேசியாவில் இந்திய மயமாக்கப்பட்ட முதல் அரசும் ஆகும். சாலகநகர அரசு ஏறக்குறைய 1890 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய அரசு.[1]
இந்த இராச்சியத்தை சலகநகரப் பேரரசு அல்லது சாலகநகர அரசு என்றும் அழைப்பது உண்டு. சாலகநகரம் என்றால் வெள்ளி இராச்சியம் என்று பொருள்.[2]
சாலகம் என்றால் சிறுகுறிஞ்சா எனும் மூலிகைச் செடி. இந்தோனேசியா ஜாவா தீவில் அதிகமாய்க் காணப்படும் ஒரு வகையான மூலிகைத் தாவரம்.
சிறுகுறிஞ்சா எனும் மூலிகைச் செடியைச் சாலகம் என்றும் அழைப்பார்கள். இதன் இலைகள்; வேர்கள் மருத்துவக் குணம் நிறைந்தவை. வாத நோய், உதிரச் சிக்கல் போன்றவற்றுக்கு மூலிகையாகப் பயன்படுகிறது. [3] இருப்பினும், இந்த மூலிகையைப் பற்றி போதியளவு அறிவியல் சான்றுகள் கிடைக்கவில்லை.[4]
முன்பு காலத்துப் பெண்கள் நெற்றியில் அணியும் ஓர் ஆபரணத்திற்குப் பெயரும் சாலகம் தான். இப்போது அந்த ஆபரணம் பயன்பாட்டில் உள்ளதா என்று தெரியவில்லை.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் போர்னியோ, பிலிப்பீன்சு, மலாயா, இந்தோனேசியா போன்ற இடங்களுக்குப் பயணித்து உள்ளார்கள்.
பயணம் சென்ற இடங்களில் நிலபுலன்களை வாங்கி, நிலப் பிரபுக்களாக மாறி உள்ளார்கள்; சிற்றரசுகளை உருவாக்கி சிற்றரசர்களாகவும் மாற்றி உள்ளார்கள்.
கி.பி. 120-ஆம் ஆண்டுகளில் தேவ வர்மன் (Dewawarman)[5] என்பவர் வணிக உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து இந்தோனேசியாவிற்குச் சென்றுள்ளார். வணிகம் செய்வதே முதன்மை நோக்கமாக இருந்துள்ளது என இந்தோனேசிய வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான எடி எஸ். ஏகஜதி (Edi S. Ekajati) என்பவரின் கூற்று.[6]
சாலகநகர வரலாற்றுக்கு புசுதக்கா பூமி நுசாந்தாரா (Pustaka Rajya-rajya Bhumi Nusantara) எனும் 17-ஆம் நூற்றாண்டுக் கையெழுத்துப் பிரதி மட்டுமே தற்போது முக்கியச் சான்றாக விளங்குகிறது. அதன் காரணமாக சாலகநகரா அரசு ஒரு புராணக்கால அரசு என்றும் வகைப்படுத்தப்படுகிறது.[7]
சிரபொன் இளவரசர் வாங்சகெர்டா (Prince Wangsakerta) என்பவரின் கட்டளையின் பேரில் புசுதக்கா பூமி நுசாந்தாரா கையெழுத்துப் பிரதி தயாரிக்கப்பட்டது. இதைத்தவிர சில சீன நாட்டுச் சான்றுகளும் கிடைத்துள்ளன.
அந்தக் கையெழுத்துப் பிரதியின் கூற்றுப்படி, இன்றைய இந்தோனேசியா, மேற்கு ஜாவா, பான்டென் மாநிலத்தின் (Province of Banten) கடற்கரையில் சாலகநகரம் அமைந்து இருந்தது.
சாலகநகரப் பேரரசு தோற்றுவிக்கப் பட்டதும் தேவ வர்மன், தன் பெயரைப் பிரபு தர்மலோகபாலா தேவ வர்மன் ரக்சபுர சாகரன் (Prabu Dharmalokapala Dewawarman Raksagapura Sagara) என்று மாற்றிக் கொண்டார். இவர் 38 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவருடைய மனைவியின் பெயர் தேவி பாவாச்சி லாரசதி (Dewi Pwahaci Larasati).
உள்ளூர் நிலப் பிரபு ஒருவரின் மகளைத் தேவ வர்மன் திருமணம் செய்து கொண்டதால் தேவ வர்மன் இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லவில்லை.
சாலகநகரத்தை ஆட்சி செய்த அரசர்கள் அனைவரும் தேவர்மன் (Dewawarman) வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆகும். இவர்களின் ஆட்சிக் காலத்தில் இரு சிறிய அரசுகளையும் நிறுவி இருக்கிறார்கள்.
உஜோங் குலோன் அரசு (Ujung Kulon Kingdom), தற்போது இந்தோனேசியாவின் உஜோங் குலோன் வட்டாரத்தில் அமைந்து உள்ளது. இந்த அரசு சேனாபதி பகதூரா அரிகானா செயசக்தி (Senapati Bahadura Harigana Jayasakti) என்பவரால் நிறுவப்பட்டது. இந்தச் சேனாதிபதி பகதூரா அரிகானா என்பவர் சாலகநகரப் பேரரசைத் தோற்றுவித்த தேவவர்மனின் தம்பியாகும்.
உஜோங் குலோன் அரசைத் தர்ம சத்யநகரா (Darma Satyanagara) என்பவர் ஆட்சி செய்த போது, மூன்றாம் தேவவர்மனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தர்ம சத்யநகரா, சாலகநகரப் பேரரசின் 4-வது மன்னர் ஆனார்.
இந்தக் கட்டத்தில் சாலகநகரப் பேரரசிற்கு இணையாக மற்றோர் அரசு போட்டியாக உருவாகிக் கொண்டு இருந்தது. அதன் பெயர் தருமநகரா இராச்சியம் (Tarumanagara). இந்தத் தருமநகரா இராச்சியம் நன்றாக வளர்ச்சி அடைந்ததும், உஜோங் குலோன் சிற்றரசின் மீது படை எடுத்தது.
தருமநகரா இராச்சியத்தின் மூன்றாவது அரசராக இருந்த பூர்ணவர்மன் என்பவர் தான் அந்தப் படையெடுப்பைச் செய்து உஜோங் குலோன் சிற்றரசைக் கைப்பற்றினார். கடைசியில் உஜோங் குலோன் சிற்றரசு, தருமநகரா இராச்சியத்தின் துணைச் சிற்றரசாக மாறியது.
தஞ்சோங் கிடுல் அரசு (Kingdom of Tanjung Kidul), தற்போதைய இந்தோனேசியா சியான்ஜூர் (Cianjur) மாநிலத்தில் அமைந்து இருந்தது. அதன் தலைநகரம் அக்ரபிந்தபுரா (Aghrabintapura). இந்தச் சிற்றரசை சுவேதா லிமான் சக்தி (Sweta Liman Sakti) எனும் அரசியார் ஆட்சி செய்து வந்தார். இந்த அரசியார் சாலகநகரப் பேரரசை உருவாக்கிய தேவவர்மன் அரசரின் இரண்டாவது சகோதரி ஆவார்.
சாலகநகர இராச்சியம் மையமாகக் கொண்ட மூன்று இடங்களை இந்தோனேசிய அரசாங்கம் அடையாளம் கண்டு உள்ளது. அந்த இடங்களின் விவரங்கள்:
இந்தோனேசியா, பாண்டென் மாநிலத்தில் பாண்டெகிலாங் (Pandeglang, Banten) எனும் இடத்தில் லாடா விரிகுடா (Lada Bay) உள்ளது. அந்த இடத்தில் சாலகநகரப் பேரரசின் தலைநகரம் ராஜதபுரா (Kerajaan Rajatapura) அமைந்து இருக்கலாம் என்று வாங்சா கெர்டா கையெழுத்துப் பிரதியில் (Wangsakerta Manuscript) எழுதப்பட்டு உள்ளது.[8]
சாலகநகரப் பேரரசின் எட்டாவது மன்னராக ஆட்சி செய்த தேவர்மன் (Dewawarman VIII),[9] இந்த இடத்தில் இருந்து ஜாவா முழுவதும் தன் வணிகத்தை விரிவுபடுத்தி உள்ளா. இது முதலாவதாக அடையாளம் காணப்படும் இடமாக அமைகிறது.
இந்தோனேசியா, கிழக்கு ஜகார்த்தா பகுதியில் கொன்டெட் (Condet, Jakarta) எனும் ஓர் இடம் உள்ளது. அதாவது இப்போதைய சுந்தா கெலாப்பா (Sunda Kelapa)[10] எனும் துறைமுகத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கொன்டெட் சிறுநகரம் உள்ளது. அங்கே சாலகநகரா மையம் கொண்டு இருந்து இருக்கலாம். இது இரண்டாவதாக அடையாளம் காணப்பட்டு உள்ள இடம்.
இந்தப் பகுதியில் சுங்கை திராம் (Sungai Tiram) எனும் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சிப்பிகள் அதிகம். சாலகநகரப் பேரரசை உருவாக்கிய தேவவர்மனின் மாமியாரின் பெயர் அகி திராம் (Aki Tirem).[11] சுங்கை திராம் நதிக்கு மாமியார் அகி திராம் பெயரில் இருந்து வந்து இருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருத்து கூறுகிறார்கள்.
திராம் எனும் சொல், பல்லவர் அப்போது பயன்படுத்திய சொல். அந்தச் சொல் தற்போது மலாய் மொழியிலும் பயன்படுத்தப் படுகிறது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 60 கி.மீ. தொலைவில் போகோர் (Bogor) எனும் மாநகரம் உள்ளது. அங்கே சாலாக் எனும் பெயரில் ஒரு மலை உள்ளது. இந்த சாலாக் மலைக்கு சாலகநகரப் பேரரசின் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.[12]
சுந்தா மொழியில் சாலகநகரம் என்றால் வெள்ளி இராச்சியம் என்று பொருள்.