சி. சத்யா (C.Sathya ) என்பவர் ஒரு தென்னிந்திய இசையமைப்பாளர் மற்றும் பின்னணி பாடகராவார். இவர் 'சில்லுனு ஒரு காதல்' திரைப்பட இயக்குநரான கிருஷ்ணா இயக்கிய ’ஏன் இப்படி மயக்கினாய்’ படம் மூலம் இசையமைப்பாளராக 2009 இல் அறிமுகமானார். அந்தப் படப் பாடல்கள் வெளிவந்ததே தவிர, படம் வெளிவரவில்லை. இதன்பிறகு வெற்றிபெற்ற தமிழ் திரைப்படமான எங்கேயும் எப்போதும் திரைப்படத்திற்கு இசையமைத்தார் அதன்பிறகு வெற்றிகரமாக பல படங்களுக்கு இசையமைத்தார். இவர் தெலுங்கு படமான சம்திங் சம்திங் படத்திற்கு இசையமைத்ததின் மூலம் புகழ்பெற்றார்.
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சத்யா. இவரது தந்தை சிதம்பரம் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நாடகக்குழுவில் பாடி ஆர்மோனியம் வாசித்தவர். தன் மகன் சத்யாவுக்கு எட்டு வயதிலிருந்தே காலையில் எழுப்பி மரபிசையை கற்பிக்கத் துவங்கினார். அடுத்து நாஞ்சில் ராஜா, சாம்பசிவம், சீதா நாராயணன் ஆகியோர் கர்னாடக இசையை ஆழமாகச் சொல்லித் தந்தனர். வட சென்னையில் புகழ்வாய்ந்த ‘வசீகரா’, ‘கீரவாணி’ ஆகிய இசைக் குழுக்களின் கீபோர்ட் கலைஞரானார். 1997 இல் கங்கை அமரன் மெல்லிசைக் குழுவில் முதன்மை கீபோர்ட் வாசிப்பாளர் ஆனார். சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றின் பிரபல இசை நிகழ்ச்சிகளுக்கு துவக்கப் பாடல் இசையமைப்பது, இசை நிகழ்ச்சிகளின் பேண்ட் தலைவராக மாறுவது என அடுத்தடுத்து முன்னேற்றம் கண்டார். அடுத்து தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்து விருதுகள் பெற்றார். விஜய் தொலைக்காட்சியின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் அடையாள இசையான ‘ஏலேலோ…ஏலேலே…’ இவரின் கைவண்ணத்தில் உருவானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தபோது விளம்பரப் படங்களுக்கு ஜிங்கில்ஸ் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் பாலபாரதி, பரத்வாஜ், சிற்பி ஆகியோரிடம் சில காலம் கீபோர்ட் கலைஞராகவும், ஒலி நிரலராக (சவுண்ட் புரோகிராமர்) இருந்தார். முதன்முதலில் ஏன் இப்படி மயக்கினாய் என்ற படத்திற்கு இசையமைத்தார். ஆனால் படம் வெளிவரவில்லை. இதன்பிறகு எங்கேயும் எப்போதும் படத்திற்கு இசையமைத்து புகழ்பெற்றார்.[1][2][3]