சிறீகுமாரன் தம்பி ശ്രീകുമാരൻ തമ്പി | |
---|---|
![]() 2018 இல் சிறீகுமாரன் தம்பி | |
பிறப்பு | 16 மார்ச்சு 1940 ஹரிப்பாடு, ஆழப்புழா, திருவிதாங்கூர் (தற்போதைய கேரளம், இந்தியா) |
இருப்பிடம் | திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
பணி | பாடலாசிரியர் இயக்குநர் (திரைப்படம்) தயாரிப்பாளர் (திரைப்படம்) திரைக்கதை ஆசிரியர் கவிஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1966 முதல் தற்போது வரை |
பெற்றோர் | கிருட்டின பிள்ளை பவானிக்குட்டி தங்கச்சி |
வாழ்க்கைத் துணை | இராஜேஸ்வரி |
பிள்ளைகள் | 2 |
சிறீகுமாரன் தம்பி (பிறப்பு 1940 மார்ச் 16) [1] இவர் மலையாள சினிமாவில் ஒரு இந்திய பாடலாசிரியராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் உள்ளார். அவர் கவிதைகளையும் எழுதுகிறார். இவர்மதிப்புமிக்க வள்ளத்தோள் விருதைப் பெற்றுள்ளார்.[2][3]
1966 ஆம் ஆண்டில் காட்டுமல்லிகா என்ற திரைப் படத்தில் பாடலாசிரியராக இயக்குநர் பி.சுப்பிரமணியம் தம்பியை மலையாள திரையுலகில் அறிமுகப்படுத்தினார். இவர் 25 க்கும் மேற்பட்டத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். 29 திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் மலையாளத்தில் 85 க்கும் மேற்பட்டப் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். பிரேம் நசீர் என்ன பிரேம கானம் என்ற பிரபல இலக்கியப் படைப்பின் ஆசிரியரும் ஆவார். திரைப்படத்திற்கான சிறந்த புத்தகத்திற்கான தேசிய விருதை (கணக்கும் கவிதயும்) வென்றார். அதே நேரத்தில் கானம் மற்றும் மோகினியாட்டம் என்ற அவரது படங்கள் கேரள மாநில விருதுகளை வென்றது.[4]
இவர் ஒரு பாடலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும், திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், இசைக்கலைஞமாவார். ஆனால் இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் என்பதைவிட ஒரு பாடலாசிரியர் என்று தன்னைக் கூறிக்கொள்கிறார். இவரது பாடல்களில் "சந்திரிகயில் அலியுன்ன சந்திரகாந்தம்", "இருதயசரசிரிலே பிரணய புஷ்பமே", "ஸ்வந்தமென்ன பந்தத்தினு எந்து அர்த்தம்" ஆகியவை அடங்கும். இவரது படங்கள் சந்திரகாந்தம், கானம், மோகினியாட்டம், மாளிக பணியுன்னவர், ஜீவிதம் ஓரு கானம், அம்பலவிளக்கு என்பவை வெற்றிப் படங்களாக அமைந்தன. இவரது வெற்றிகரமான திரையரங்க வசூல் படங்களில் நாயட்டு, ஆக்ரல்மணம் மற்றும் இடி முழக்கம் ஆகியவை அடங்கும். தம்பி பரவலாக "இருதய ராகங்களுடெ கவி" (காதல் பாடல்களின் கவிஞர்) என்று அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவரது பெரும்பாலான பாடல்கள் காதல் மனநிலையைத் தூண்டுகின்றன. அவர் தனது வேலையில் பிடிவாதமும், சமரசமற்ற அணுகுமுறையும் கொண்டவராக அறியப்படுகிறார். மேலும் அவரது பாடல்கள் காட்சியுடன் கலக்க முயற்சிக்கிறார்.
தம்பி 1940 மார்ச் 16 ஆம் தேதி ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிப்பாடு என்ற இடத்தில் களரிக்கல் கிருஷ்ண பிள்ளை, கரிம்பாளையத்து பவானிக்குட்டி தங்கச்சி ஆகியோருக்கு பிறந்தார். அவரது மூதாதையர்கள் கண்ணூர் மாவட்டத்திலுள்ள சிறக்கலில் இருந்து ஹரிப்பாடுக்கு மாறியதாக தெரிகிறது.[1] இவர் தனது பள்ளிப்படிப்பை ஹரிப்பாடு அரசுப் பள்ளியில் முடித்தார். இவர் ஆலப்புழ சனாதன தர்ம கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஆவார். திருச்சூர் அரசுப் பொறியியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.[5]
இவரது உடன்பிறப்புகளில் புகழ்பெற்ற புதின ஆசிரியரும் ஸ்ரீகிருஷ்ணபரிந்து போன்ற நாவல்களை எழுதியவருமான, மறைந்த பி.வாசுதேவன் தம்பி [6], (இது ஒரு வெற்றிகரமான மலையாளத் திரைப்படமாக மாறியது) வழக்கறிஞர் பி. கோபாலகிருஷ்ணன் தம்பி, முன்னாள் வழக்குரைஞர் தலைவர் (கேரளா), கேரள வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் துளசி கோபிநாத், ஆரக்கிள் பைனான்சியல் சிஸ்டம்ஸ் மென்பொருள் லிமிடெட் முன்னாள் துணைத் தலைவரான பிரசன்னவதனன் தம்பி ஆகியோர் அடங்குவர்.[7]
தம்பி, ராஜேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு கவிதா என்ற ஒரு மகள் உள்ளார். இவரது மனைவியும் மகளும் கலைத்துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.[8] இவருக்கு ஒரு மகனும் இருந்தார். இராஜகுமாரன் தம்பி (இராஜ் ஆதித்யா என்றும் அழைக்கப்பட்டார்) பிரியதர்சனின் முன்னாள் கூட்டாளியாக இருந்தார் .பின்னர் தெலுங்கு திரையுலகில் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2009 மார்ச்சில் செகந்திராபாத்தில் திடீரென இறந்து போனார்.[9] சிறீகுமாரன் தம்பிக்கு தன்மயா, வரதா, தனயா என்ற மூன்று பேத்திகள் உள்ளனர். இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது அலுவலகம் திருவனந்தபுரத்தில் உள்ளது.