பேரா. சுகுமார் அழிக்கோடு | |
---|---|
பிறப்பு | 26 மே 1926 (85) அழிக்கோடு, கண்ணூர், கேரளம், இந்தியா |
இறப்பு | 24 சனவரி 2012 [1] திருச்சூர், கேரளம், இந்தியா |
தொழில் | எழுத்தாளர், சமூக விமரிசகர், பேச்சாளர், புரோ துணைவேந்தர் |
தேசியம் | இந்தியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தத்வமசி,ஆசான்டே சீதாகாவ்யம், ரமணனும் மலையாளக்கவிதையும், மகாத்மாவின்டே மார்க்கம், மலையாள சாகித்ய விமர்சனம்,மகாகவி உள்ளூர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கேரள சாகித்திய அகாதமி விருது சாகித்திய அகாதமி விருது 1985 தத்வமசி வயலார் விருது 1985 தத்வமசி |
சுகுமார் அழிக்கோடு (Sukumar Azhikode, மலையாளம்: സുകുമാര് അഴീക്കോട്, மே 26, 1926 - சனவரி 24, 2012) மலையாள மொழி இலக்கியத்திற்கும் இந்திய மெய்யியல் குறித்தும் ஆற்றிய பங்களிப்புக்களுக்காக அறியப்படும் ஓர் இந்திய எழுத்தாளர், விமரிசகர், பேச்சாளர் ஆவார்.[2] மே 26, 1926 இல் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள அழிக்கோடு என்ற சிற்றூரில் பிறந்த சுகுமார் கேரளாவின் திருச்சூர் நகர் அண்மையில் உள்ள இரவிமங்கலத்தில் மணம் புரியாதவராக வாழ்ந்து வந்தார்.
சுகுமார் அழிக்கோடு 1946 ஆம் ஆண்டில் தமது இளங்கலை பட்டத்தை வணிகவியலில் பெற்றார். பின்னர் கற்பித்தலில் இளங்கலைப் பட்டம், சமசுகிருதம் மற்றும் மலையாளத்தில் முதுகலை பட்டம் என பட்டங்கள் பெற்று இறுதியில் மலையாள மொழியில் ஆய்வு செய்து மலையாள சாகித்திய விமர்சனம் என்ற ஆய்வேட்டிற்காக முனைவர் பட்டமும் பெற்றார். ஆசிரியராக ராஜாஸ் உயர்நிலைப்பள்ளி, சிரக்கல், புனித அலோசியசு கல்லூரி, மங்களூரு, தேவகிரி கல்லூரி, கோழிக்கோடு ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர் எஸ் என் எம் பயிற்சிக் கல்லூரி, மூட்டக்குன்னத்தில் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார். கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் இணை துணைவேந்தராகப் பணியாற்றிய சுகுமார் 1986 ஆம் ஆண்டில் பணிஓய்வு பெற்றார்.
சுகுமாரின் மிகச்சிறந்த படைப்பாக இந்திய மெய்யியல் வேதங்கள் மற்றும் உபநிடதங்களை குறித்த தத்வமசி (1984, மலையாளம்) என்ற நூல் கருதப்படுகிறது. இந்த படைப்பிற்கு 12 விருதுகள் வரை சுகுமார் அழிக்கோடு பெற்றுள்ளார். இவற்றில் இந்திய சாகித்திய அகாதமி விருது, கேரள மாநில சாகித்திய அகாதமி விருது, வயலார் விருது மற்றும் இராசாசி விருது என்பன குறிப்பிடத்தக்கன. தமது வாழ்நாள் சாதனைக்காக பகரைன் கேரளீய சமாஜத்தின் சாகித்திய விருதும் பெற்றுள்ளார்.
2007, சனவரியில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டபோது அனைவரையும் சமனாகக் கருதும் இந்திய அரசியலமைப்பிற்கு இது முரணானது எனக் கூறி வாங்க மறுத்தார்.[3]