சுண்டன் வள்ளம் என்பது கேரளத்துக்கே சிறப்பான பாம்பு வடிவப் படகு ஆகும் (வள்ளம் = படகு). இது கேரளத்தின் கலைச்சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. வள்ளங்களி எனப்படும் படகுப்போட்டியில் இவை முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சுண்டன் வள்ளங்கள் 100 முதல் 158 அடி வரை நீளம் கொண்டவை. வள்ளத்தின் பின்பாகம் 20 அடி உயரத்தில் இருக்கும். முன்பாகம் நீளத்தில் கூர்மையாக இருக்கும். படகில் நூறு ஆட்களுக்கும் மேல் அமர முடியும்.[1]
இந்த வள்ளங்கள் செய்ய அஞ்சிலி மரம் எனப்படும் அயனி மரம், தேக்கு, கடம்ப மரம் போன்றவை பயன்படுத்தபடுகின்றன.[2]
சுண்டன் வள்ளம் தங்க நாடாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஒன்றோ இரண்டோ முத்துக்குடைகளும் ஒரு கொடியும் சுண்டன் வள்ளத்தில் காணப்படும்.
ஒவ்வொரு படகும் ஒரு கிராமத்திற்கு உரித்தானது. ஊர் மக்கள் அந்தப் படகினைக் கடவுளாக வணங்குகின்றனர். ஆண்கள் மட்டுமே படகுகளைத் தொடவியலும். மேலும் அவர்கள் செருப்பு அணியாமல் வெறும் காலிலேயே படகைத் தொடவேண்டும். படகானது நீரில் ஊறாமல் இருக்கவும் படகைச் செலுத்தும் போது நீருடன் உராய்வதால் ஏற்படும் எதிர்விசையைக் குறைக்கவும் வள்ளத்தின் வெளிப்புறம் மீன் எண்ணெய், தேங்காய் ஓட்டின் சாம்பல், முட்டை ஆகியவற்றைப் பூசுவர்.