புவியியல் | |
---|---|
அமைவிடம் | பினாங்கு |
ஆள்கூறுகள் | 5°19′31.9872″N 100°19′25.575″E / 5.325552000°N 100.32377083°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | மலாக்கா நீரிணை |
நிர்வாகம் | |
பினாங்கு மாநிலம் |
செரஜாக் தீவு எனும் பினாங்கு புறமலை (மலாய்: Pulau Jerejak; ஆங்கிலம்:Jerejak Island) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள பினாங்கு தீவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.
வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்திற்குள் அமைந்துள்ள இந்தத் தீவு, பினாங்கு தீவின் தென்கிழக்கு முனையில் உள்ள பாயான் லெப்பாஸ் நகரத்திற்கும் மிக அருகில் உள்ளது.[1]
இந்த செரஜாக் தீவு 1868-ஆம் ஆண்டில் தொழுநோயாளிகளின் புகலிடமாக (Leper Asylum) இருந்தது. 1875-ஆம் ஆண்டில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையமாகவும் (Quarantine Station); 1969-ஆம் ஆண்டில் ஒரு தண்டனைக் காலனித் தீவாகவும் (Penal Colony) இருந்தது.
இந்தத் தீவு, மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத தீவாகவும் முத்திரை பதிக்கிறது. 1800-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் இருந்து மலாயாவுக்கு அழைத்து வரப்பட்ட தமிழர்கள், பினாங்குத் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததும், முதலில் இந்தத் தீவில் தான் மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டார்கள். அந்த வகையில் மலாயா வாழ் தமிழர்கள் இந்தத் தீவைப் பினாங்கு புறமலை என்று அழைக்கிறார்கள்.
பினாங்கின் நிறுவனர் பிரான்சிஸ் லைட் (Francis Light), 1786 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பினாங்குத் தீவிற்குச் செல்வதற்கு முன் இந்த செரஜாக் தீவுக்குத்தான் முதலில் வந்ததாகவும் கூறப் படுகிறது.
1797-ஆம் ஆண்டில், கார்ன்வாலிஸ் கோட்டை (Fort Cornwallis) கட்டுவதற்கு செரஜாக் தீவு, சாத்தியமான இடமாக அமையும் என கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி (Colonel Arthur Wellesley) முன்மொழிந்தார்.
இன்றைய பாயான் லெப்பாஸ் பகுதியில் ஜேம்ஸ்டவுன் (Jamestown) எனும் பெயரில் ஒரு புதிய நகரத்தை அமைக்கத் திட்டம் வைத்து இருந்தார்கள். அந்த ஜேம்ஸ்டவுன் நகரத்திற்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் செரஜாக் தீவில் ஓர் இராணுவ முகாமை அமைக்கவும் திட்டம் வகுத்து இருந்தார்கள்.
இதற்கு முன்னதாக 1794-ஆம் ஆண்டில், ஜார்ஜ் டவுன் நகரை நிறுவுவதற்காகப் பினாங்குத் தீவின் ஒரு பகுதியில் காட்டை அழித்தார்கள். அதன் விளைவாக மலேரியா நோய் பரவியது. பல உயிர்களையும் பலி கொண்டது. அதில் பிரான்சிஸ் லைட் அவர்களும் பலியானார்.[2]
எனவே, பினாங்குத் தீவில் கார்ன்வாலிஸ் கோட்டையைக் கட்டுவதற்கு கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி முதலில் ஆதரவு வழங்கவில்லை.
ஆனாலும் ஜார்ஜ் டவுன் லாபகரமான துறைமுகமாக மாறத் தொடங்கியதால் இந்தத் திட்டம் நிறைவேறவில்லை. ஜேம்ஸ்டவுன் நகரை நிறுவுவதும்; அந்த இடத்தின் பாதுகாப்பு காரணமாக செரஜாக் தீவில் இராணுவ முகாமை அமைப்பதும் தேவையற்றதாக மாறின.