ஜார்ஜ் எல். ஹார்ட் (George Luzerne Hart, III; பிறப்பு அண். 1945) கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டதற்கும் இவரே மூல காரணர் ஆவார். தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகத்துக்கு உணர்த்தியவர்களில் இவர் முக்கியமானவர். இவருடைய கடும் முயற்சியினால் செப்டம்பர் 2004 இல் இருந்து தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. பிறப்பால் இவர் ஓர் ஆங்கிலேயர் ஆவார். ஹார்ட் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். அத்துடன் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராகப் பணியாற்றினார். இவருக்கு இலத்தீன், கிரேக்கம், உருசியம், செருமானியம், பிரெஞ்சு போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி உண்டு.
ஹார்ட் பல பழந்தமிழ் நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இவர் மொழிபெயர்த்த The Poems of The Tamil Anthologies (1979) எனும் நூல் The American Book Award-இக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. The Four Hundred Songs of War and Wisdom (1999) எனும் புறநானூறு மொழிபெயர்ப்பு தென்னாசிய மையம் ஏ.கே.ராமானுஜன் பரிசைப் பெற்றது. கனேடிய இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கும் இயல் விருதை 2005-ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்.
இவரது மனைவி கவுசல்யா என்பவராவார். அவர் ஒரு ஆசிரியர்.[1]
{{cite book}}
: Check date values in: |date=
(help)