ஜார்ஜ் டவுன், சென்னை
ஜார்ஜ் டவுன் | |
---|---|
நகரப்புறப் பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
மெட்ரோ | சென்னை |
வார்டு | முத்தியால்பேட்டை |
அரசு | |
• நிர்வாகம் | சென்னை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சலக சுட்டு எண் | 600 001 |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
நகர்ப்புறத் திட்டக் குழு | சி.எம்.டி.ஏ. |
நகராட்சி | சென்னை மாநகராட்சி |
இணையதளம் | www |
ஜார்ஜ் டவுன் (George Town) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் நகர்ப்புறப் பகுதியாகும். புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டபிறகு இங்கு குடியேற்றம் நிகழ்ந்தது; இதுவே சென்னையில் அமைந்த முதல் குடியிருப்புப் பகுதியாகும். குடிமைப்பட்ட காலத்தில் இது கறுப்பர் நகரம் என அழைக்கப்பட்டு வந்தது. 1911-ஆம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவின் பேரரசராக முடி சூடியபோது இப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது.[1][2]
நகரத்தின் மற்ற குடிமைப்பட்டக் காலப் பெயர்கள் மாற்றப்பட்டபோதும் இப்பகுதி இன்றும் அலுவல்முறையாக ஜார்ஜ் டவுன் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 1640களில் சென்னை இங்கிருந்துதான் வளரத் துவங்கியது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு அண்மையில் உள்ளூர்வாசிகளின் குடியிருப்பாக துவங்கிய ஜார்ஜ் டவுன் குடிகளின் தேவைகள் மற்றும் ஆட்சியாளர்களின் வசதிகளை முன்னிட்டு விரைவாக வளரத் தொடங்கியது. முன்பு இந்துக் கோவிலாக இருந்தவிடத்தில் உயர் நீதி மன்ற வளாகமும் முதல் கலங்கரை விளக்கமும் கட்டப்பட்டன. அங்கிருந்த சென்னக் கேசவப் பெருமாள் மற்றும் சென்ன மல்லிசுவரசுவாமி கோவில்கள் தற்போதுள்ள இடத்தில் தங்கச்சாலைக்கு இடம் பெயர்க்கப்பட்டன. இவை இந்துக்களிடையே பட்டணம் கோவில் என புகழ்பெற்றிருந்தன.