ஞாநி | |
---|---|
ஞாநி சங்கரன் | |
பிறப்பு | வே. சங்கரன் சனவரி 4, 1954 செங்கல்பட்டு, தமிழ்நாடு |
இறப்பு | 15 சனவரி 2018 | (அகவை 64)
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | ஓ பக்கங்கள் ஞாநி, பரீக்ஷா ஞாநி |
கல்வி | பி.ஏ. |
பணி | பத்திரிகையாளர் |
பணியகம் | இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, ஆனந்த விகடன், முரசொலி, தீம்தரிகிட |
அறியப்படுவது | எழுத்தாளர் |
சமயம் | மத நம்பிக்கையற்றவர் |
பெற்றோர் | வேம்புசாமி, பங்காரு |
வாழ்க்கைத் துணை | பத்மா |
பிள்ளைகள் | மகன்: மனுஷ் நந்தன் |
ஞாநி என்றும் ஞாநி சங்கரன் என்றும் அறியப்படுபவர் (4 சனவரி 1954 - 15 சனவரி 2018) தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர். இவர் செங்கல்பட்டில் பிறந்தவர்; இவரது இயற்பெயர் வே. சங்கரன்; ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன்.
சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும் மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். பரீக்ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். தீம்தரிகிட என்ற பத்திரிகையை நடத்தியவர்.[1] இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும் படங்கள், நாடகங்கள் இயக்குதல் இவரது ஆளுமை; பெரியார் பற்றிய தொலைகாட்சிப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு எளிய மக்கள் கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2014 சூன் 28 அன்று எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார்.
அப்பா வேம்புசாமி (1907-1997) சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்; அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது. பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார் (1973-74). பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார் (1974). அதன் பின்னர் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார் (1975).
சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த ஞாநி சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் 2018 சனவரி 15 திங்கட்கிழமை அன்று காலமானார்.[2]