டேவிட் நிபர்ட் | |
---|---|
பிறப்பு | 1953 ஐக்கிய அமெரிக்கா |
காலம் | தற்கால மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
கல்விக்கழகங்கள் | விட்டன்பெர்க் பல்கலைக்கழகம் |
முக்கிய ஆர்வங்கள் | சமூகவியல், விலங்குரிமைக் கோட்பாடு |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | விலங்குரிமை செயற்பாடு |
டேவிட் ஆலன் நிபர்ட் (David Alan Nibert, பிறப்பு: 1953) ஒரு அமெரிக்க சமூகவியலாளரும், எழுத்தாளரும், ஆர்வலரும் ஆவார். இவர் விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றுகிறார்.[1] அவர் அமெரிக்க சமூகவியல் சங்கத்தின் விலங்குகள் மற்றும் சமூகம் பற்றிய பிரிவின் இணையமைப்பாளராக உள்ளார்.[2] 2005-ல், அந்த அமைப்பின் ஆகச்சிறந்த புலமைப்பரிசில் விருதைப் பெற்றார்.[3]
நிபர்ட் விலங்குரிமைக் கோட்பாட்டை மற்ற பொருளாதார மற்றும் சமூகவியல் கோட்பாடுகளுடன் இணைக்கிறார்.[4] நிபர்ட்டின் விளக்கத்தின்படி, விலங்கினவாதம் என்பது உணர்திற விலங்குகளுக்கு எதிரான பாகுபாட்டை அவ்விலங்குகளின் இனத்தைக் காரணமாக வைத்து நியாயப்படுத்தி அதன் மூலம் விலங்கு அடிமைத்தனத்தை சட்டப்பூர்வமாக்க முற்படும் ஒரு சித்தாந்தமாகும். அவர் நனிசைவ வாழ்வுமுறையையும் ஒழிப்புவாதச் சித்தாந்தத்தையும் ஊக்குவிக்கிறார்.
விலங்குகள் ஒடுக்குமுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் "விலங்குகள் மற்றும் சமூகம்" என்ற வகுப்பை நிபர்ட் வழங்குகிறார்:[5]
“ | தொடர்ச்சியாகப் பெருமளவில் சமூக அறிவியலாளர்கள் விலங்குகளுடனான மனிதனின் நடத்தை முறைகளால் விளையும் நெறியியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக விளைவுகளை ஆராய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். மனித சமூகங்கள் மற்ற விலங்குகளை எவ்வாறு பார்க்கின்றன என்பதையும் அவற்றை எவ்வாறு நடத்துகின்றன என்பதையும், மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் இடையிலான உறவின் தொடர்புகளும் அமைப்பும் மனித மற்றும் விலங்குகளின் சமூக அமைப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் இந்தப் பாடநெறி ஆராய்கிறது. எடுத்துக்காட்டாக, மனிதரல்லா விலங்குகளை உணவாக வரையறுத்துப் பயன்படுத்தும் மனித கலாச்சார நடைமுறைகள் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பேரழிவிற்குக் காரணமாக அமைந்துள்ளன என்று சில அறிஞர்கள் நிறுவுகின்றனர். நாம் விலங்குகளை உண்பதே இதய நோய், புற்றுநோய் ஆகியவை பெருகிவருவதற்குக் காரணமாக அமைவதாக மனித சுகாதார ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. வேறு சில அறிஞர்கள் மனிதரல்லா விலங்குகளின் மீதான மனிதனின் பார்வையும் நடத்தையும் நிறவெறி, பாலின பாகுபாடு, நலிவடைந்த மக்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட தொடர்ப் பிரச்சனைகளுடன் குறிப்பிடத்தக்க வழிகளில் தொடர்புடையவை என்று கண்டறிந்துள்ளனர். விலங்குகளை மனிதன் சுரண்டுவதற்கான காரணங்களையும் விலங்குரிமை விவாதத்திற்கு அடிக்கல் நாட்டும் சமூக சிக்கல்களையும் இந்த பாடநெறி ஆராயும். | ” |