தர்மசேனா பத்திராஜா Dharmasena Pathiraja | |
---|---|
பிறப்பு | கண்டி, இலங்கை | 28 மார்ச்சு 1943
இறப்பு | 28 சனவரி 2018 |
தேசியம் | இலங்கையர் |
கல்வி | இளங்கலை, முதுகலை, முனைவர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கண்டி தர்மராஜா கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், மொனாஷ் பல்கலைக்கழகம் |
பணி | பல்கலைக்கழகப் பேராசிரியர், திரைப்பட இயக்குநர் |
தர்மசேன பத்திராஜா (Dharmasena Pathiraja, மார்ச் 28, 1943 - சனவரி 28, 2018) இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குநரும், கல்வியாளரும் ஆவார். பொன்மணி என்ற தமிழ்த் திரைப்படம் உட்பட ஏறத்தாழ பத்து முழுநீளத் திரைப்படங்கள், ஏழு ஆவணப் படங்கள், பதினொரு தொலைக்காட்சி நாடகங்கள் இவரது படைப்புகளாகும்.
கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற தர்மசேனா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1967 இல் சிங்களம், மற்றும் மேற்கத்தைய கலாசாரத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் நாடகத்துறை, மற்றும் நிகழ்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1] ஆத்திரேலியா, மொனாசுப் பல்கலைக்கழகத்தில் வங்காளத் திரைப்படத்துறை குறித்த ஆய்வை மேற்கொண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.[2]
தர்மசேன பத்திராஜா களனிப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியைத் திடங்கியவர், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், இலங்கை ஊடகப்பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[3]
பத்திராஜா 1970 ஆம் ஆண்டில் சத்தூரோ என்ற பெயரில் 10-நிமிடக் குறும்படம் ஒன்றைத் தயாரித்தார். நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆகாசு கௌவா என்ற முழுநீள சிங்களத் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். இது அவருக்குப் பல திரைப்பட விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது.[1] 1975 இல் வெளியான "பெரிய பையனாக வருவது எப்படி" (எயா தன் லொக்கு லமயாக்) திரைப்படம் மாஸ்கோ 9வது பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1][4] இவரது பம்பரு அவித் (1978) என்ற திரைப்படம் மாஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டது. இலங்கையில் இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படத்துக்கான சனாதிபதி விருதுகள் கிடைத்தன.[1]
இவர் தயாரித்த பொன்மணி தமிழ்த் திரைப்படம் இந்தியாவில் 1980 இல் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1]
திரையரங்கக் கலை பற்றி இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.[3]
தர்மசேன பத்திராஜா 2018 சனவரி 28 அன்று கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.[5][6]