தாராஷா நோஷெர்வான் வாடியா (Darashaw Nosherwan Wadia) (அக்டோபர் 23 1883 - 15 ஜூன் 1969) இந்தியாவின் முன்னோடி புவியியலாளரும் இந்திய புவியியல் ஆய்வில் பணியாற்றிய முதல் இந்திய விஞ்ஞானிகளில் ஒருவருமாவார். இமயமலையின் நில அமைப்பு குறித்த இவரது பணிக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். இவர் இந்தியாவில் புவியியல் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை நிறுவ உதவினார். குறிப்பாக இமயமலை புவியியல் நிறுவனத்தில். இவர் இப்பணிகளை மேற்கொண்டார். இவருக்குப் பிறகு 1976ஆம் ஆண்டில் வாடியா இமயமலை புவியியல் தொழில்நுட்ப நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது.[1] முதன்முதலில் 1919இல் வெளியிடப்பட்ட இந்தியாவின் புவியியல் பற்றிய இவரது பாடநூல் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.[2]
அக்டோபர் 23, 1883 அன்று குசராத்தின் சூரத்தில் ஒரு பார்சி குடும்பத்தில் ஒன்பது குழந்தைகளில் நான்காவது குழந்தையாக பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும்போதே அறிவியலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இவரது தந்தை, ஒரு கிராமத்தில் தொடர் வண்டி நிலைய அதிகாரியாக பணிபுரிந்தார். வாடியா சூரத்தின் கல்வி பயின்றார். பரோடாவில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் போது வாடியா புவியியலில் ஆர்வம் காட்டினார். இரண்டு இளங்கலை அறிவியல் பட்டங்களைப் பெற்று, பின்னர் முதுகலை அறிவியலையும் முடித்து, ஜம்முவிலுள்ள் வேல்ஸ் இளவரசரின் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். விடுமுறை நாட்களில், இமயமலை மலைகளிலுள்ள தாதுக்கள், பாறைகள், புதைபடிவங்களை சேகரிக்க இவர் நேரத்தை செலவிடுவார். அந்த நேரத்தில் இவர் சேகரித்த அரிய புதைபடிவங்கள் ஜம்மு பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்னும் உள்ளன.
உலகெங்கிலும் உள்ள மலைத்தொடர்கள் உருவாகியதன் பின்னணியில் உள்ள புவியியல் காரணிகளை ஆராய்ந்த இந்திய விஞ்ஞானியாக, வாடியா இருந்துள்ளார். இவரது ஆராய்ச்சிகள் இந்தியாவில் விவசாய வளர்ச்சிக்கு பங்களித்தன. இலங்கையின் புவியியல் வரைபடத்தை உருவாக்கியவர் இவர்தான்.[2][3] இமயமலை எப்போது, எப்படி, எந்த சூழ்நிலையில் உருவானது என்பதை இவரால் விளக்க முடிந்தது.[4] இமயமலை பிளவு- மலைகள் எவ்வாறு உருவாகின? மண்ணின் தன்மை என்ன? நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ரகசியங்கள் யாவை? போன்றவற்றை பற்றி இவர் விரிவாக ஆராய்ந்துள்ளார். இவர் பல நாடுகளுக்குச் சென்று புவியியல் அவதானிப்புகளை மேற்கொண்டார்.
வாடியா, பின்னர் 1921ஆம் ஆண்டில் இந்திய புவியியல் ஆய்வில் உதவி கண்காணிப்பாளராக சேர்ந்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் இமயமலையிலும் பிற இடங்களிலும் சுமார் 11,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிவாகப் பயணம் செய்து விரிவான புவியியல் வரைபடங்களை உருவாக்கினார். நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. புவியியல் விவரங்கள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், பரந்த கனிம வைப்பு, நிலத்தடி நீர் வளம், விளைநிலங்கள் மற்றும் அணைகள் போன்ற திட்டங்களை நிர்மாணிக்க பொருத்தமான இடங்கள் உள்ள பகுதிகளை அடையாளம் காண முடியும். இவர் பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு அங்குள்ள அணிகளுடன் வெளிநாடுகளில் ஆராய்ச்சி நடத்தியுள்ளார். இவர் ஓய்வு பெற்ற பின்னர், அரசாங்கத்தின் சார்பாக இலங்கையின் புவியியல் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கனிமக் கொள்கையை வகுக்க நமது நாட்டின் புவியியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவரது 'இந்தியாவின் புவியியல்' ஒரு நிலையான உரை.
வாடியா பல குழுக்களுக்கு தலைமை தாங்கினார். மேலும், பல பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இருந்தார். வாடியா தனது பணிக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 1934இல் பாரரசின் புவியியல் சங்கத்தின் பேக் விருது, 1943 இல் இலண்டனின் புவியியல் சங்கத்திலிருந்து லைல் பதக்கம், 1944இல் இந்திய அறிவியல் முன்னேற்றத்திற்கான சங்கத்திலிருந்து ஜாயாகிஷன் பதக்கம், 1947இல் பேரரசின் ஆசியச் சங்கத்தின் ஜகதீஷ் போஸ் நினைவு பதக்கம், 1947 ல் தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ பட்டம், தேசிய புவியியல் சங்கத்தின் நேரு பதக்கம், 1958இல் இந்திய அரசிடமிருந்து பத்ம பூஷண் விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்.[2][5][6] 1957இல் பேரரசு சங்கத்தின் சக கூட்டாளாராகவும் கௌரவிக்கப்பட்டார்.[7]
1951ஆம் ஆண்டில், இந்திய புவியியல் ஆய்வின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் 2 அணா இந்திய அஞ்சல் முத்திரையில் விலங்குகளின் தனித்துவ உருவம் இடம் பெற்றது. 1984ஆம் ஆண்டில் வாடியாவின் உருவப்படத்துடன் இந்திய அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)