திருவலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | டி.வி.எஸ் |
பிறப்பு | மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா | 7 மார்ச்சு 1945
பிறப்பிடம் | இந்தியா |
இறப்பு | 2 செப்டம்பர் 2022 | (அகவை 77)
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | செம்மொழி பாடகர் |
இசைத்துறையில் | 1968 முதல் |
டி. வி. சங்கரநாராயணன் (திருவாலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன், 7 மார்ச் 1945 – 2 செப்டம்பர் 2022) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். கருநாடக இசைப் பாடகர் மதுரை மணி ஐயரின் மருமகன் ஆவார் இவர்.[1]
இவரது இசை சீடர்களில் ஆர். சூரியபிரகாசு,அவரது மகள் அம்ருதா சங்கரநாராயணன் மற்றும் அவரது மகன் மகாதேவன் சங்கரநாராயணன் ஆகியோர் அடங்குவர்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 07 மார்ச் 1945 அன்று, டி. எஸ். வேம்பு ஐயர் - கோமதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். 9 ஆவது வயதில் இசைப் பயிற்சியை தனது மாமா மதுரை மணி ஐயரிடமிருந்து பெற ஆரம்பித்தார். சங்கரநாராயணன் மயிலாடுதுறையில் இசைச் சூழலில் வளர்ந்தார்.
வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற சங்கரநாராயணன், சட்டக் கல்வியிலும் பட்டம் பெற்றார். வழக்கறிஞர் தொழிலைப் பார்த்துக்கொண்டே இசையிலும் சாதிக்க இயலாது என தீர்மானித்த சங்கரநாராயணன், வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டார்.
01 பிப்ரவரி 1968 அன்று முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். டி. என். கிருஷ்ணன் வயலினும், வேலூர் ராமபத்ரன் மிருதங்கமும் வாசிக்க இசை நிகழ்ச்சி நடந்தது. இவருடன் ஆலங்குடி ராமச்சந்திரன் இணைந்து பாடினார்.
அடுத்து வந்த நாட்களில் லால்குடி ஜெயராமன், எம். எஸ். கோபாலகிருஷ்ணன், டி. கே. மூர்த்தி, முருகபூபதி, பாலக்காடு ரகு, உமையாள்புரம் சிவராமன் ஆகியோர் இவரின் இசை நிகழ்ச்சிகளில் இசைக்கருவிகளை இசைத்தனர்.
1975 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவில் இசைப் பயணம் செய்தார். தமிழ்நாட்டிலிருந்து ஐக்கிய அமெரிக்கா சென்ற முதல் கருநாடக இசை ஆண் பாடகர் இவராவார். கனடா, சிங்கப்பூர், ஆசுத்திரேலியா, கொங்காங் ஆகிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் செய்தார். 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கின் லிங்கன் நடுவத்தில் நடந்த 'மில்லினியம் 2000' எனும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தெலுங்கு கீர்த்தனைகளோடு தமிழிசைப் பாடல்களையும் தனது நிகழ்ச்சிகளில் இவர் பெருமளவில் பாடினார். இதன் காரணமாக 'சிவன் இசைச் செல்வர்', 'தமிழ் இசை வேந்தர்' எனும் பட்டங்களால் வழங்கப்பட்டார்.
தி. வே. சங்கரநாராயணன் 2022 செப்டம்பர் 2 மாலை சென்னையில் அவரது 77-ஆவது அகவையில் காலமானார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். மகன் மகாதேவனும் ஒரு கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[4]