துளிமக் கருவி (quantum machine) என்பது துளிம இயந்திரவியல் விதிகளின் அடிப்படையில் இயங்கும் ஒரு செயற்கைக் கருவி. மிகச்சிறிய துணுக்குகள் எவ்வாறு இயங்குகின்றன, செயல்படுகின்றன போன்றவற்றை அறிவது துளிம இயந்திரவியல் ஆகும். மூலக்கூறுகளிலும் அணுக்களிலும் மட்டுமே துளிம விளைவுகள் காணப்பட்டு வந்தன. ஆனால், கட்புலனாகும் அளவிற்கு உள்ள பெரிய பொருள்களும் துளிம இயந்திரவியலின் அடிப்படையில் இயங்கக்கூடும் என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கூறப்பட்டது.[1][2] பெரிய பொருள்களில் துளிம இயல்பைக் காண்பது எளிதில் நடைபெறாத நிகழ்வாக இருந்தது. ஆனால், உலகின் முதல் துளிமக் கருவி ஆகத்து 4, 2009 அன்று ஏரன் ஓ’கானெல் என்பவரால் ஆண்டிரூ கிளீலாண்டு, ஜான் மார்ட்டினிசு (கலிபோர்னியா பல்கலைக்கழகம்) ஆகியோரின் வழிகாட்டுதலால் உருவாக்கப்பட்டது. இது சயன்சு என்ற பனுவலின் கணிப்புப்படி 2010-ஆம் ஆண்டின் முக்கியக் கண்டுபிடிப்பாகும்.[3]