துஷார நாடு (Tushara Kingdom), பண்டைய சமசுகிருத மொழி இலக்கியமான மகாபாரத காவியத்தில், பரத கண்டத்திற்கு வடமேற்கில் தற்கால ஆப்கானித்தானத்தில் அமைந்திருந்ததாக கூறுகிறது. மேலும் துஷார நாட்டு மக்களை மிலேச்சர்கள் என்றும், போர்க்குணம் உடையவர்கள் என மகாபாரதம் வருணிக்கிறது.
துஷாரர்கள், இந்து குஷ் – ஆமூ தாரியா ஆற்றிற்கு இடைப்பட்ட பகுதியான நடு ஆசியாவின் பாக்திரியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பாக்திரியாப் பகுதியைச் சேர்ந்த குசானர்கள் வட இந்தியாவை கி மு 30 முதல் கி பி 375 முடிய ஆண்டனர்.
மகாபாரத காவியத்தின் சாந்தி பருவத்தில், துஷார நாட்டவர்களுடன், பகலவர்கள், யவனர்கள், காந்தாரர்கள், காம்போஜர்கள், கிராதர்கள், சகர்கள் மற்றும் சீனர்களை காட்டுமிராண்டித்தன வாழும் மலைவாழ் மக்கள் எனக் கூறுகிறது. வட பரத கண்டத்தில் வாழ்ந்த இம்மக்களை ஆரியர்கள், தாசர்கள் என்று அழைத்தனர். [1]
தருமன் நடத்திய இராசசூய வேள்வியின் போது தூஷாரர்களுடன் பாக்லீகர்கள், கிராதர்கள், பகலவர்கள், பரதர்கள், காம்போஜர்கள், சகர்கள், திரிகர்த்தர்கள், யவனர்கள் குதிரைகள், பசுக்கள், யானைகள் மற்றும் பொன்னால் ஆன நகைகள் பரிசாக வழங்கினர் என மகாபாரத்தின் சபா பருவத்தில் கூறப்பட்டுள்ளது.[2]
குருச்சேத்திரப் போரில் தூஷாரர்கள், சகர்கள், பாக்லீகர்கள் மற்றும் யவனர்களுடன் கூட்டுச் சேர்ந்து, கௌரவர் அணி சார்பாக, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர். [3] தூஷார நாட்டு வீரர்கள் முரட்டுக் குணமும், சீற்றங் கொண்டு போரிடும் வல்லமை பெற்றவர்கள் என கர்ண பருவத்தில் கூறப்பட்டுள்ளது.