தௌலிகங்கா ஆறு (Dhauliganga) கங்கை ஆற்றின் ஆறு துணை ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்த சமோலி மாவட்டத்தில் பரவியுள்ள இமயமலையின் தொடர்ச்சியான சிவாலிக் மலையின் கொடுமுடிகளில் உற்பத்தியாகிறது. தௌலிகங்கா ஆறு, ஜோஷி மடத்தின் அடிவாரத்தில் அமைந்த ரெய்னி எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலக்கிறது. இதன் துணை ஆறு ரிஷிகங்கா ஆறு ஆகும்.
7 பிப்ரவரி 2021 அன்று சமோலி மாவட்டத்தின் ஜோஷி மடம் அருகே அமைந்த சிவாலிக் மலை கொடுமுடிகளில் படர்ந்த பனிப்படலங்கள் பெருமளவில் உருகி சரிந்ததால், தௌலிகங்கா ஆற்றில் பெருவெள்ளம் பாய்ந்தது. இதனால் 100 முதல் 150 நபர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. [1]மேலும் சமோலி மாவட்டத்தில் உள்ள ரெய்னி எனும் கிராமத்தில் உள்ள ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை மற்றும் தேசிய அனல் மின் நிறுவனத்தின் புனல் மின்சாரத் திட்டத்தின் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.[2][3]