பத்ம விபூசண் நந்தாலால் போஸ் | |
---|---|
பிறப்பு | ஹாவேலி காரக்புர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது பீகார், இந்தியா)[1] | 3 திசம்பர் 1882
இறப்பு | 16 ஏப்ரல் 1966 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 83)
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | ஓவியக் கலை |
அரசியல் இயக்கம் | சூழ்நிலை நவீனத்துவத்துவம் |
விருதுகள் | பத்ம விபூசண் (1954) |
நந்தாலால் போஸ் (Nandalal Bose) (3 திசம்பர் 1882 - 16 ஏப்ரல் 1966) நவீன இந்திய கலையின் முன்னோடிகளில் ஒருவராகவும், சூழ்நிலை நவீனத்துவத்தின் முக்கிய நபராகவும் இருந்தார்.
அபனிந்திரநாத் தாகூரின் மாணவரான போஸ் தனது "இந்திய பாணி" ஓவியத்திற்காக அறியப்பட்டார். இவர் 1922இல் சாந்திநிகேதனின் கலா பவனின் முதல்வராக இருந்தார். தாகூர் குடும்பத்தாலும் அஜந்தாவின் சுவரோவியங்களாலும் இவர் செல்வாக்கு பெற்றார். இவரது உன்னதமான படைப்புகளில் இந்திய புராணங்கள், பெண்கள் மற்றும் கிராம வாழ்க்கை ஆகியவற்றின் காட்சிகளின் ஓவியங்கள் அடங்கும்.
இன்று, பல விமர்சகர்கள் இந்தியாவின் மிக முக்கியமான நவீன ஓவியங்களில் ஒன்றாக இவரது ஓவியங்களை கருதுகின்றனர். 1976ஆம் ஆண்டில், இந்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், கலாச்சாரத் துறை ஆகியவை இணைந்து இவரது படைப்புகளை "ஒன்பது கலைஞர்களின் படைப்புகளில் ஒன்றாகக் கருதி அவை பழங்காலப் படைப்புகள் அல்ல" என்றும், இனிமேல் "கலை மற்றும் அழகியல் மதிப்பைக் கருத்தில் கொண்டு, கலைப் பொக்கிஷங்களாகக் கருதப்படும்" எனவும் அறிவித்தது. [2]
இந்திய அரசியலமைப்பை விளக்கும் பணி இவருக்கு வழங்கப்பட்டது.
நந்தாலால் போஸ் 1882 திசம்பர் 3 ஆம் தேதி பீகார் மாநிலத்தின் முங்கேர் மாவட்டத்தில் ஹவேலி காரக்பூரில் ஒரு நடுத்தர வர்க்க வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். இந்த குடும்பம் முதலில் மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தின் ஜெஜூரைச் சேர்ந்தது . [3] இவரது தந்தை பூர்ண சந்திரபோஸ் அப்போது தர்பங்கா தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார். [4] இவரது தாயார் கேத்ரமணி தேவி இல்லத்தரசி. தனது ஆரம்ப நாட்களிலிருந்து நந்தலால் படங்களை வடிவமைப்பதிலும் பின்னர் பூசை பந்தல்களை அலங்கரிப்பதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
1898ஆம் ஆண்டில், தனது பதினைந்து வயதில், நந்தாலால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பிற்காக கொல்கத்தா சென்றார். சூன் 1903 இல் இவர் தனது குடும்ப நண்பரின் மகள் சுதிராதேவியை மணந்தார். இவர், கலையை படிக்க விரும்பினார். ஆனால் இவரது குடும்பத்தினர் அனுமதி வழங்கவில்லை. 1905 ஆம் ஆண்டில் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்து வர்த்தகம் பயின்றார். பின்னர், கொல்கத்தாவின் கலைப் பள்ளியில் கலையைப் படிக்க அனுமதிக்கும்படி தனது குடும்பத்தினரை வற்புறுத்தினார். [5]
ஒரு இளம் கலைஞராக, நந்தாலால் அஜந்தா குகைகளின் சுவரோவியங்களால் ஆழ்ந்த தாக்கம் கொண்டார். பாரம்பரிய இந்திய கலாச்சாரத்தை புதுப்பிக்க விரும்பும் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் சர்வதேச வட்டத்தின் ஒரு பகுதியாக இவர் மாறினார். ஏற்கனவே ஒககுரா ககுசே, வில்லியம் ரோதன்ஸ்டீன், யோகோயாமா தைக்கான், கிறிஸ்டியானா ஹெர்ரிங்ஹாம், லாரன்ஸ் பினியோன், அபனிந்திரநாத் தாகூர் மற்றும் லண்டன் நவீனத்துவ சிற்பிகள் எரிக் கில் மற்றும் ஜேக்கப் எப்ஸ்டீன் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு வட்டமாகும். [6]
1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி உப்பு மீதான பிரிட்டிசு வரியை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்டதைக் குறிக்கும் விதமாக, தொண்டர்களுடன் நடந்து செல்லும் காந்தியின் உருவத்தை வெள்ளை லினோகட் அச்சில் ஒரு கருப்பு நிறத்தை உருவாக்கினார். இது அகிம்சை இயக்கத்தின் சின்னமான உருவமாக மாறியது.
இவரது மேதமையையும் அசல் பாணியையும் பிரபல கலைஞர்கள் மற்றும் கலை விமர்சகர்களான ககனேந்திரநாத் தாகூர், ஆனந்த குமாரசாமி மற்றும் ஓ.சி. கங்குலி ஆகியோர் அங்கீகரித்தனர் . இந்த கலை ஆர்வலர்கள் ஓவியத்தின் வளர்ச்சிக்கு புறநிலை விமர்சனம் அவசியம் என்று உணர்ந்ததோடு, "இந்திய கிழக்கத்திய கலைகளின் இந்தியச்சங்க"த்தை நிறுவினர்.
பாரத ரத்னா மற்றும் பத்மசிறீ உள்ளிட்ட இந்திய அரசின் விருதுகளுக்கான சின்னங்களை வரைவதற்கு ஜவகர்லால் நேருவால் இவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். தனது சீடரான இராம்மனோகருடன் சேர்ந்து, இவர் இந்திய அரசியலமைப்பின் அசல் கையெழுத்துப் பிரதியை அழகுபடுத்தும் / அலங்கரிக்கும் வரலாற்றுப் பணியை மேற்கொண்டார். [7]
இவர் ஏப்ரல் 16, 1966 அன்று கொல்கத்தாவில் காலமானார்.
இன்று, புது தில்லியிலுள்ள தேசிய நவீன கலைக்கூடம் இவரது 7000 படைப்புகளை அதன் சேகரிப்பில் வைத்திருக்கிறது. இதில் 1930ஆம் ஆண்டு கருப்பு மற்றும் வெள்ளை லினோகட், உப்புச் சத்தியாகிரகம் மகாத்மா காந்தியை சித்தரிக்கிறது. மேலும் மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் இவர் செய்த ஏழு சுவரொட்டிகளின் தொகுப்பு இந்திய தேசிய காங்கிரசின் 1938 ஹரிபுரா அமர்வில் இடம் பெற்றது. [8]
இவரது மாணவர்களில், பெனோட் பிஹாரி முகர்ஜி, இராம்கிங்கர் பைஜ், பியோஹர் ராம்மனோகர் சின்ஹா, கே. ஜி. சுப்ரமணியன், ஏ.ராமச்சந்திரன், ஹென்றி தர்மசேனா, பிரதிமா தேவி, ராமானந்தா பந்தோபாத்யாய், சோவன் சோம், ஜஹார் தாஸ்குப்தா, சபிதா தாகூர், மலினா டொமேரா , யஷ் பாம்பட், சத்யஜித் ராய், டிங்கர் கௌசிக், அமிர்தலால் வேகாட், கௌரங்கா சரண் மற்றும் கோண்டப்பள்ளி சேஷகிரி ராவ் ஆகியோர் அடங்குவர்.
இவரது மாணவர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஏ.டி.ஜெயதிலகே, (1948–1952) இவரின் கீழ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. [9] இவரால் தனித்துவமாக வரையப்பட்ட இரண்டு ஓவியங்களான; "அர்ஜுனா மரம்" [10] , "மா மரங்கள்" [11] தற்போது இவரது இலங்கை மாணவரிடம் உள்ளன.
இவரைப்பற்றி "ஆச்சார்யா நந்தாலால்" என்ற இந்திய ஆவணப்படம் 1984 இல் ஹரிசதன் தாஸ்குப்தா என்பவரால் எடுக்கப்பட்டது. [13]
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help) Government Museum and Art Gallery, Chandigarh.