நில உச்சவரம்பு (Ceiling on Land Holding) என்பது தனி நபர்கள் வைத்திருக்கும் நில உடைமைக்கு உச்சவரம்பை நிர்ணயித்து அதற்கு மேற்பட்ட உபரி நிலங்களை அரசு கையகப் படுத்தும் முறை ஏதுவாக 1958ல் இந்திய அரசால் கொண்டு வரப்பெற்ற சட்டம் ஆகும். வேளாண்மையைச் சீர்திருத்தும் நோக்கத்துடன் குடிவாரச் சட்டங்கள் தவிர வேறுபல நடவடிக்கைகளும் இந்திய அரசால் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று நில உடைமைகளுக்கு உச்சவரம்பை நிர்ணயிப்பதாகும். ஒரு குடும்பம் அல்லது தனிநபருக்குரிய உயர்ந்த பட்ச நிலங்கள் என தீர்மானித்து அதற்கு மேல் உள்ள நிலத்தை அதற்குறிய இழப்பீட்டுத் தொகையை நில உடமையாளருக்கு வழங்கி கையகப்படுத்தும் நிலங்களை உபரி என வகை படுத்திக்கொள்ளும் நடைமுறைக்கு உரியவாறு ஏற்படுத்தப்பட்டது நில உச்சவரம்பு சட்டம் என்கிறோம். இது இரண்டு பிரிவுகளாகும். 1. தற்போதுள்ள உடைமைகள் மீது உச்சவரம்பு நிர்ணயிப்பது. 2. எதிர்காலத்தில் வாங்கப்படும் நிலங்கள் மீது உச்சவரம்பு நிர்ணயிப்பது.
இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மாநில அரசுகள் நில உச்சவரம்புச் சட்டங்களை இயற்றின. ஆனால் நில உச்சவரம்பின் அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது. 1972-ல் நடந்த மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் நாடுமுழுவதும் ஒரே மாதிரியான நில உச்சவரம்பு அளவே கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் நில உச்சவரம்புச் சட்டங்கள் கீழ்வரும் இயல்புகளைக் கொண்டுள்ளன.
நில உரிமை அதிகப்படியான நிலமற்றோருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனால் நில அளவு சிறியதாகிவிடும். சிறிய பண்னைகளில் பெரிய எந்திரங்களைப் பயன்படுத்த முடியாது அதனால் உற்பத்தி குறையும். மேலும் நிலத்தைப் பகிர்ந்து கொடுப்பதால் மட்டும் நிலமற்றோரின் வாழ்வு உயராது. அதில் பயிர் செய்வதற்கான வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும். உபரியான நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும் போது அரசு இழப்புத்தொகை கொடுக்கவேண்டியுள்ளது. இது அரசுக்குச் சுமையாகும். நில உச்சவரன பகிர்வு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினம்.
நில உச்சவரம்பினைக் கொண்டு வந்ததன் காரணமாக நாடு முழுதும் பல இலட்சம் ஏக்கர்கள் நிலங்கள் உபரியாகக் கிடைத்தன. அவை நிலமற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. 1983 மார்ச் முடிய 45 இலட்சம் ஹெக்டேர் நிலம் உபரி என்று அறிவிக்கப்பட்டு அதில் 29 இலட்சம் ஹெக்டேர் நிலம் பெறப்பட்டு 19.8 இலட்சம் ஹெக்டேர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் இச்சட்டங்களை அமுலாக்குவதில் ஏற்பட்ட காலதாமதமே ஆகும். மேலும் எண்ணற்ற விதிவிலக்குகள், பொய்மாற்றுகள், நில உரிமை பற்றிய முழு விவரங்கள் இல்லாமை, பாகப் பிரிவினைகள், தாமதமான செயல்பாடு, அதிகாரிகளின் திறமையின்மை, ஊழல் போன்ற காரணங்களால் நில உச்சவரம்புச் சட்டம் இந்தியாவில் தோல்வியடைந்தது.