இளவரசி நிலோபர் பரகத் பேகம் சகிபா [1][2][3] (Princess Niloufer Farhat Begum இயற்பெயர்:நிலோபர் அனாமிசுல்தான் உதுமானியத் துருக்கியம்: نیلوفر خانم سلطان ; ஜனவரி 1916 - 12 ஜூன் 1989), ஹைதராபாத்தின் கோஹினூர் எனப் புனைப் பெயர் கொண்டவர், [4] உதுமானியப் பேரரசின் இளவரசி ஆவார். இந்தியாவின் கடைசி ஐதராபாத் நிஜாம் மிர் ஒஸ்மான் அலிகானின் இரண்டாவது மகனான மொவாசம் ஜாவின் முதல் மனைவி ஆவார்.
இளவரசி நிலோபர் இஸ்தான்புல்லில் உள்ள காஸ்டெப் அரண்மனையில் 4 ஜனவரி 1916 இல் பிறந்தார், அந்த நேரத்தில் இவரது தாயார் குடும்பம் உதுமானியப் பேரரசை ஆட்சி செய்து வந்தது. இவரது தந்தை தாமது மொரலாசேட் செலாகெதின் அலி பே, மொரலாசேட் மெஹ்மத் அலி பே மற்றும் அலியே அனாம் ஆகியோரின் மகன் ஆவார். இவரது தாயார் அதிலே சுல்தான், சேசது மெகமது செலகாதுன் மற்றும் தெவிதே சதிகி அனிம் ஆகிய தம்பதியின் மகள் மற்றும் சுல்தான் ஐந்தாம் முரத்தின் பேத்தி ஆவார்.[5]
டிசம்பர் 1918 இல், இரண்டு வயதில், இவர் தன் தந்தையை இழந்தார். மார்ச் 1924 இல் ஏகாதிபத்திய குடும்பத்தின் நாடுகடத்தலில், இவரும் இவருடைய தாயும் பிரான்சில் குடியேறினர், மத்திய தரைக்கடல் நகரமான நீசில் வசித்து வந்தனர். [6]
குழந்தை இல்லாததால் நிலோபர் தனிப்பட்ட வாழ்க்கை கவலை நிறைந்ததாக இருந்தாலும், பொது வாழ்க்கையில் ஈடுபடுவதன் மூலம் அதனை ஈடுசெய்தார். அந்த நேரத்தில் இவர் உயரடுக்கு பெண்கள் சங்கமான லேடி ஐதரி சங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்,இவரது குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலல்லாமல் (துருக்கியில் உள்ள இவரது பிறந்த குடும்பம் மற்றும் இந்தியாவில் இவரது திருமணத்தின் மூலமான குடும்பம் ஆகிய இரண்டிற்கும் இது பொருந்தும்) இவர்களின் கண்ணியமும் மரியாதையும் தனது சுய நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தா வண்ணம் செயல்பட்டார், அரண்மனையின் ஜெனனாவை விட்டு அடிக்கடி பொது நிகழ்ச்சிகள்,விருந்துகள் மற்றும் இரவு நேர கூடலில் கலந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டார். இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் மற்றும் பல நிகழ்வுகளையும் துவக்கி வைத்தார். ஹைதராபாத் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேறு எந்தப் பெண்ணும் இதுவரை பான விருந்து அல்லது உத்தியோகபூர்வ பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டது இல்லை. நிலோபர் பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு ஜோதியைத் தாங்கியவராக கருதப்பட்டார். இவரது அழகு மற்றும் சுறுசுறுப்பான பொது வாழ்க்கை பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டது, மேலும் இவர் பத்திரிகைகளின் அட்டைப் பக்கங்களில் இடம்பெற்றார். இவர் உலகின் மிக அழகான 10 பெண்களில் ஒருவராக மதிப்பிடப்பட்டார். [7]
1949 ஆம் ஆண்டில், இளவரசியின் பணிப்பெண்களில் ஒருவரான ரஃபதுன்னிசா பேகம், மருத்துவ வசதிகள் இல்லாததால் பிரசவத்தின்போது இறந்தார். இவளுடைய விருப்பமான வேலைக்காரி இறந்த செய்தியை கேட்டதும், இளவரசி மிகவும் கவலையுற்றார்.[8] இனிமேல் எந்த தாயும் மரணத்தை சந்திக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய முடிவு செய்தார். நிலோபர் தனது மாமனாரிடம் இந்த மருத்துவ வசதிகள் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகளை தெரியப்படுத்தினார். இதன் விளைவாக, நகரத்தின் ரெட் ஹில்ஸ் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டது. மருத்துவமனைக்கு இவளது நினைவாக நிலோபர் மருத்துவமனை என்று பெயரிடப்பட்டது, இவர் அதன் புரவலர் என்று பெயரிடப்பட்டார், இது ரெட் ஹில்சின் முக்கிய அடையாளமாக உள்ளது. [8]