பகவதி (Bhagavathi அல்லது Bhagavati) மலையாளத்தில் இறைவியரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, "பகவான்" என்ற சங்கதச் சொல்லின் பெண்பாலாகும். தமிழில், அன்னைத்தெய்வங்களை, "அம்மன்" என்றழைப்பது போல், கேரளத்தில் "பகவதி" என்று சொல்வது வழக்கமாகக் காணப்படுகின்றது. செங்குட்டுவன் துவங்கிய கண்ணகி வழிபாடு பல்கிப்பரந்த சேரநாட்டில் பின்னாளில் ஏற்பட்ட வைதிகமயமாக்கத்தால், கண்ணகி கோவில்கள் எல்லாம் பகவதி ஆலயங்களாக மாறின.[1] இன்றைக்கு, இச்சொல், பார்வதி, இலட்சுமி முதலான எல்லா இறைவியரையும் குறிப்பிடப் பயன்படுகின்றது.
கேரளாவில், ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, பகவதி கோவில்களைக் காணலாம்.[2] பிரபலமான பகவதி ஆலயங்கள் சில வருமாறு:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், பாரதத்தின் தென் அந்தத்தில் அமைந்துள்ள மிகப்புகழ்வாய்ந்த பகவதி ஆலயம் ஆகும். இங்கு, தமிழகத்தின் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணியுடன் செபமாலையை கையில் ஏந்தி தவம் செய்யும் நிலையில் பகவதியம்மன் காட்சி தருகிறார்.மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ள பகவதியம்மன் ஆலயம் ஆகும்.
கோவா பகுதியில், துர்க்கையின் மேதியவுணன்கொல்பாவை வடிவை, பகவதி என்ற பெயரில் வழிபடுவது பெருவழக்காக உள்ளது. மராட்டியத்து இரத்தினகிரியிலும், உத்தர பிரதேசத்து ரியோதிபூரிலும், பகவதி என்ற பெயரில் அன்னை கோயில் கொண்டிருக்கின்றாள்.