பச்சைப் புலி இறால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | கணுக்காலிகள்
|
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | பத்துக்காலிகள்
|
துணைவரிசை: | டெண்டிரோபிராங்கியேட்டா
|
பெருங்குடும்பம்: | பின்னேயிடே
|
குடும்பம்: | பின்னேயிடே
|
பேரினம்: | பின்னேயசு
|
இனம்: | பி. செமிசல்கேடசு
|
இருசொற் பெயரீடு | |
பின்னேயசு செமிசல்கேடசு டீ கான், 1844[1] | |
வேறு பெயர்கள் [1] | |
|
பின்னேயசு செமிசல்கேடசு (Penaeus semisulcatus), பச்சைப் புலி இறால் அல்லது பள்ளம் கொண்ட புலி இறால் என்பது வணிகரீதியாக வளர்க்கப்படும் பின்னேயசு பேரினத்தைச் சேர்ந்த இறால் சிற்றினமாகும்.
பின்னேயசு செமிசல்கேடசின் வெளிர் பழுப்பு நிற உடலைக் கொண்டுள்ளது. இதன் மேலோட்டின் பின்புறம் முழுவதும் இரண்டு மஞ்சள் அல்லது நுரை நிற குறுக்கு பட்டைகளுடன் பச்சை நிறத்தில் காணப்படும். அடிவயிறு பழுப்பு சாம்பல் மற்றும் வெளிர் மஞ்சள் குறுக்கு பட்டைகள் கொண்டதாக இருக்கும். உணர்கொம்புகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளன. சீரான மென்மையான மேலோடு மற்றும் வயிறு காணப்படும். தலைநீட்சியில் 7 அல்லது 8 முதுகு பற்களும் 3 வயிற்றுப்புற பற்களும் காணப்படும். [2] இதனுடைய அதிகபட்ச மொத்த நீளம் ஆண் இறாலில் 180 மிமீ எனவும் பெண் இறாலில் 228 மிமீ எனவும்[3] எடையானது 130 கிராம் வரையும் இருக்கும்.[4]
பின்னேயசு செமிசல்கேடசு கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் செங்கடல் கிழக்கிலிருந்து இந்தோனேசியா மற்றும் வடக்கு ஆத்திரேலியா வரை இந்தோ-மேற்கு பசிபிக் வரை பரவிக் காணப்படுகிறது. இது சூயஸ் கால்வாய் மூலம் கிழக்கு மத்திய தரைக்கடலை காலனித்துவப்படுத்தியது. இதை ஒரு லெஸ்செப்சியன் குடியேற்றமாக மாற்றியது.[3]
கடலோர நீரின் ஆழம் 130மீ வரை உள்ள மணல் மற்றும் சேறு நிறைந்த பகுதிகளில் பின்னேயசு செமிசல்கேடசு காணப்படுகிறது.[2] பாரசீக வளைகுடாவில் பி. செமிசல்கேட்டசு திசம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் முட்டையிடுகின்றன. ஆனால் இலையுதிர் காலத்தில் இரண்டாம் நிலை உச்சம் அடையும். 90% பெண் இறால்கள் 54 மிமீ நீளத்தை அடைந்தபின் பாலியல் முதிர்ச்சியை அடைகின்றன. முட்டையிடுதல் நிகழ்வு முக்கியமாகக் கடலில் நடைபெறுகிறது.[5] முதிர்ச்சியடைந்த இறால்கள் கடல்சார்ந்தும், இளம் இறால்கள் கழிமுகச் சூழலைச் சார்ந்து காணப்படுகின்றன.[3]
பின்னேயசு செமிசல்கேடசு மடகாசுகர், ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் செங்கடல் மிதமான முக்கியத்துவம் வாய்ந்தது. ஏடன் வளைகுடா முதல் பாக்கித்தான் வரையிலான தென்மேற்கு ஆசியக் கடற்கரையோரங்களில் இந்த இனம் கடல் மீன்பிடி தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் இது பின்னேயஸ் மோனோடானைப் போல வணிக ரீதியாக முக்கியத்துவம் பெறவில்லை. பின்னேயசு செமிசல்கேடசு இலங்கை, சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆங்காங், சப்பான் மற்றும் கொரியாவின் தெற்கு கடல் ஆகிய பகுதிகளில் பொருளாதார ரீதியாக முக்கியமான இனமாகும் . மத்தியதரைக்கடலில் பி. செமிசல்கேடசு துருக்கி, இஸ்ரேல் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் மீன்வளத்தில் முக்கியமானதாகி வருகிறது.[3]
இந்தியாவில் பின்னேயசு செமிசல்கேடசு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நெல் வயல்களில் இறால் நெற்பயிருடன் வளர்க்கப்படுகிறது. தைவான் மற்றும் தாய்லாந்தில் இந்த வகை மீன் வளர் சோதனைகள் நடத்தப்படுகின்றன. பாக்கித்தானில் பிடிக்கப்படும் இறால்கள் உறைநிலையிலோ அல்லது கலன்களில் அடைக்கப்பட்டோ ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த இறால்கள் இறால் உணவு மற்றும் இறால் கூழ் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.[3]
2017ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவில் வெள்ளைப்புள்ளி நோய் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் ஆத்திரேலியா இந்த இறால் இறக்குமதியைத் தடை செய்தது.[3]