பன்வாரி தேவி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண்மணி. அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அதன் பின் நடைபெற்ற வழக்கு தேசிய,சர்வதேச அளவில் பரவலாக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.[1]
இவர் குயவர் வகுப்பை சேர்ந்தவர். அரசு நடத்திவரும் பெண்கள் முன்னேற்ற திட்டத்தில் அடிமட்ட ஊழியராக பணி புரிந்துவந்தார். நிலம், நீர், கல்வி, சுகாதாரம் போன்ற பொது நல விஷயங்களுக்காக உழைத்தார். குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதிலும் அவர் முனைந்து பணி புரிந்தார்.[1]
பழைய வழக்கங்களில் ஊறிப்போயிருந்த அந்த கிராம மக்களை இது சீற்றமுற வைத்தது. ஒரு நாள் பன்வாரி தேவி தன் கணவருடன் நிலத்தில் வேலை செய்துக்கொண்டிருந்தபோது, அக்கிராமத்தை சேர்ந்த ஐந்து பேர் பன்வாரி தேவியின் கணவரைக் கட்டிப்போட்டு பன்வாரி தேவியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தினார்கள். பன்வாரி தேவி காவல் துறையிடம் புகார் கொடுத்தார். வழக்கு நடந்தது. பின் தள்ளுபடி ஆனது. மனைவிக்கு இந்தக் கொடுமை நடப்பதை எந்த கணவனும் பார்த்துகொண்டிருக்கமாட்டான், கீழ் சாதி பெண்ணை மேல் சாதி ஆண்கள் பாலியல் கொடுமைக்கு உள்படுத்தினார்கள் என்பது நம்ப முடியாதது என்று மாவட்ட நீதிமன்றம் காரணம் கூறியது.[1]
பெண்களும் ,பெண்களுக்காக பாடுபடும் அரசு சாரா நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து இந்திய அரசியல் சாசனத்தின் ஷரத்து 32 இன் படி ஒரு பேராண்மை மனு தாக்கல் செய்தன. விசாகா என்ற நிறுவனமும் மனுதாரர்களில் ஒன்று.பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், இது பாலியல் சமத்துவம் பற்றியது என்றும் இது வாழும் உரிமை பற்றியது என்றும், சுதந்திரம் பற்றியது என்றும் சட்டத்தின் வழிமுறைகள் போதுமானதாக இல்லை என்றும், ஆகையால் இந்த சமூக அவலத்தை அகற்ற வேண்டும் என்றும் அதற்கு தேவையான மாற்று வழிமுறை வகுக்க வேண்டும் என்றும் இந்த மனு கோரியது.[1]
1994 ல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பன்வாரி தேவியிடம் உடன்பாட்டுக்கு பணம் கொடுப்பதாக கூறினார்கள்.ஆனால், அவர் அதை மறுத்து விட்டார் . அதற்கு பதிலாக பாலியல் கொடுமை செய்ததை ஒப்புக்கொள்ள அவர்களை கேட்டார். இதன் விளைவாக, அவரது கணவர் தவிர , குடும்பத்தினர் அனைவரும் , பன்வாரி தேவியுடன் தங்கள் உறவுகளை முறித்துக் கொண்டனர்.[2]