பலே ராமுடு | |
---|---|
இயக்கம் | வேதாந்தம் ராகவையா |
தயாரிப்பு | வி. எல். நரசு |
கதை | வேம்பட்டி சதாசிவ பிரம்மம் |
திரைக்கதை | வேதாந்தம் ராகவையா |
இசை | எஸ். ராஜேஸ்வரா ராவ் |
நடிப்பு | அகினேனி நாகேஸ்வரராவ் சாவித்திரி |
ஒளிப்பதிவு | எம். மஸ்தான் |
படத்தொகுப்பு | ஆர். ராஜகோபால் |
கலையகம் | நரசு ஸ்டுடியோ |
வெளியீடு | 6 ஏப்ரல் 1956 |
ஓட்டம் | 178 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
பலே ராமுடு (Bhale Ramudu) 1956 ல் வெளிவந்த தெலுங்கு திரைப்படமாகும். வேதாந்தம் ராகவையா இதனை இயக்கியுள்ளார். நரசு ஸ்டுடியோவின் சார்பில் வி. எல். நரசு என்பவர் தயாரித்துள்ளார். அகினேனி நாகேஸ்வரராவ், சாவித்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர். எஸ். ராஜேஸ்வர ராவ் என்பவர் இசையமைத்துள்ளார்.[1] இது 1943ல் இந்தியில் வெளிவந்த கிஸ்மத் என்ற படத்தின் மறு ஆக்கமாகும். பிரேம பாசம் என்ற பெயரில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோர் நடித்து தமிழில் வெளிவந்தது.[2]
ஜமீன்தார் நாராயண ராவிற்கு (ஜந்தையாலா) ரூபா மற்றும் தாரா என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு நாட்டியம் கற்றுத் தர விரும்புகிறார். ராமு ஜமீன்தாரின் வீட்டில் குமாஸ்தாவாக பணியாற்றும் நாகபூஷணம் என்பவரின் மகன். ராமு ரூபாவிடம் மலர்களைத் தருகிறான், ரூபா அதை வாங்க முற்சிக்கையில் கட்டிடத்தின் மேலேயிருந்து கீழே விழுந்து விடுகிறாள். அதில் அவள் கால் ஊனமாகிறது. இதைக் கண்டு கடும் கோபம் கொண்ட ஜமீன்தார் தன்னுடைய துப்பாக்கியால் ராமுவை சுட்டு விடுகிறார். இதில் படுகாயமடைந்த ராமு அருகிலுள்ள நதியில் விழுந்து விடுகிறான். ராமு இறந்து விட்டதாக கருதி ஜமீன்தார் குற்ற உணர்ச்சியால் தனது சொத்துக்களுக்கு எல்லாம் குமாஸ்தா நாகபூஷணத்தை பாதுகாவலராக நியமித்து விட்டு மறைந்து வாழ்கிறார். சில நாட்களுக்குப் பிறகு கிருஷ்ணா என்ற பெயரில் ராமு அந்நகரத்திற்கு வருகிறான். இதற்கிடையில் குமாஸ்தா நாகபூஷணம் ஜமீன்தாரின் சொத்துகளை எல்லாம் அபகரித்துக் கொண்டு ரூபாவையும், தாராவையும் ஏழையாக்கி வறுமையில் வாட விடுகிறார். கிருஷ்ணா அப்பண்ணாவை (ரேலங்கி) நண்பராக்கிக் கொள்கிறான். கிருஷ்ணாவை தங்களுடனேயே தங்கிக் கொள்ள ரூபா அனுமதியளிக்கிறாள். அவர்களது உறவு காதலாக மாறுகிறது. கிருஷ்ணா அவளது ஊனத்தை சரி செய்ய உதவ எண்ணி ஜமீன்தாரின் வீட்டில் திருடுகிறான். ஜமீன்தார் நாகபூஷணத்தின் இரண்டாவது மகன் கோபி (சலம்) தாராவின் மீது காதல் கொள்கிறான். கிருஷ்ணா இத் திருமணத்தை நடத்தி வைக்கிறான். இந்த சமயத்தில் கிருஷ்ணா ஒரு திருடன் என்பதை அறிந்த ரூபாவின் இதயம் உடைந்து போகிறது. மறைந்து வாழும் ஜமீன்தார் நாராயண ராவை பிடிப்பதற்காக ஜமீன்தார் நாகபூஷணம் ரூபாதேவி (சரோஜா) என்ற நாட்டியக்காரியின் நடனத்தை ஏற்பாடு செய்கிறார். இறுதியில் காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கி, ராமுவின் கையில் பச்சை குத்தியதை வைத்து ராமுவும் கிருஷ்ணாவும் ஒருவனே எனவும் கண்டு பிடிக்கின்றனர். முடிவில் ரூபாவுடன் ராமகிருஷ்ணனின் திருமணம் நடைபெறுகிறது.
டிசம்பர் 12, 1956 அன்று இரண்டாவது முறையாக இந்த படம் வெளியிடப்பட்டது. ஆந்திராவில் 16 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 100 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடியது. 1957 மார்ச் 14 இல் விஜயவாடாவில் 16 திரையரங்குகளில் திரையிடப்பட்டு அங்கும் 100 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடியது.[3]