பாத்திமா சுக்ரா பேகம் (Fatima Sughra Begum) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதியும் செயற்பாட்டாளருமாவார். பேகம் குலாம் உசைன் இதாயத்துல்லா, சுக்ரா பேகம், பேகம் இதாயத்துல்லா மற்றும் லேடி இதாயத்துல்லா என்று பல பெயர்களால் இவர் அறியப்படுகிறார். பாக்கித்தான் பஞ்சாபின் லாகூரில் பாத்திமா பிறந்தார் [1] பாக்கித்தான் ஆர்வலரான இவர்[2] சர் குலாம் உசைன் இதாயத்துல்லாவின் மனைவியாவார்.
மிக இளம் வயதிலேயே பாக்கித்தானின் சுதந்திரத்திற்காக போராடி தன் பெயரை உருவாக்கிக் கொண்டார். 1932 ஆம் ஆண்டில் பிறந்த பாத்திமா சுக்ரா பாக்கித்தான் இயக்கத்தின் இளம் உறுப்பினர்களில் ஒருவராக ஆனார். பாக்கித்தான் இயக்கம் உச்சத்தில் இருந்தபோது பாத்திமா சுக்ரா 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். லாகூரில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்த பிரித்தானிய கொடியை இழுத்து அகற்றிவிட்டு 14 வயதில் அங்கு முசுலீம் லீக் கொடியை மாற்றியதற்காக இவர் அனைவராலும் அறியப்பட்டார். [1] [3]
லாகூரில் உள்ள சுவர் நகரத்தில் பாத்திமா பிறந்தார். யாகூப் கான் போபால்சாய் துரானிக்கு மகளாகப் பிறந்தார். 1940 ஆம் ஆண்டு சிந்துவின் முக்கிய அரசியல் தலைவரான சர் குலாம் உசைன் இதாயத்துல்லாவை திருமணம் சேய்து கொண்டார். [4]
1938 ஆம் ஆண்டு பாத்திமா அகில இந்திய முசுலிம் லீக் கட்சியில் சேர்ந்தார். இது அவரது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறித்தது. விரைவில் பெண்கள் மத்திய துணைக்குழுவில் சேர்ந்தார். [1]
பாத்திமாவின் முயற்சியால் தான் பல்வேறு சிந்து மாவட்டங்களான ஐதராபாத்து , நவாப்சா மற்றும் தாது போன்ற பல்வேறு மாகாண துணைக்குழு கிளைகள் உருவாக்கப்பட்டன. [1]
1943 ஆம் ஆண்டு முசுலிம் லீக்கின் வருடாந்திர அமர்வில், பேகம் பெண்கள் வரவேற்புக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]
1940 ஆம் ஆண்டுகளில் லாகூரில் நடந்த அரசியல் ஊர்வலங்களில் இவர் பங்கேற்றார். அங்கு ஒரு தனி நாடு வேண்டும் என்ற முசுலிம் லீக்கின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். [1] 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாத்திமாவுக்கு 14 வயதாக இருந்தபோது லாகூரில் உள்ள சிவில் செயலகத்திலிருந்து பிரிட்டிசாரின் யூனியன் சாக்கு கொடியை கீழே இறக்கிவிட்டு , முசுலிம் லீக் கொடியை மேலே ஏற்றினார். அங்கிருந்த அனைத்து முசுலீம்களும் அவரை ஆதரித்தனர், அவர்கள் 'பாக்கித்தான் சிந்தாபாத்' என்று கோசமிட்டனர். [2] [5] பாத்திமாவின் இந்தச் செயல் சுதந்திரத்தின் பெரிய அடையாளமாக மாறியது. [6]
பாக்கித்தான் தனி நாடு இயக்கத்தின் போது இவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, 'பாக்கித்தானுக்கு சேவைகள்' என்ற விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாத்திமாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதைதவிர வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. [1] பெண்கள் அகதிகள் நிவாரணக் குழுவில் பாத்திமா பணியாற்றினார். பிரிவினைக்குப் பிறகு பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு உதவினார். [1] [3]
பிரபல கட்டுரையாளர் ஓரியா மக்பூல் சானின் கூற்றுப்படி, பாத்திமா சுக்ரா அந்த நேரத்தில் முசுலீம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். [5]
பாத்திமா சுக்ரா பேகம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று இறந்தார். அப்போது இவருக்கு 86 வயதாகும். மியானி சாகிப் கல்லறையில் பாத்திமா அடக்கம் செய்யப்பட்டார். [3] [5]