பால கணபதி

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் பால கணபதியின் உருவப்படம்.

பால கணபதி(சமக்கிருதம்: बाल-गणपति, bāla-gaṇapati, , விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 1வது திருவுருவம் ஆகும். இவ்வடிவம் யானை முகம் கொண்ட இந்துக் கடவுளான விநாயகரைக் குழந்தையாகப் பாவித்து வழிபடுவதற்கு உரியது.[1] பால கணபதியை பல்வேறு வடிவங்களில் ஓவியர்கள் காட்டுவது உண்டு. விநாயகரின் தாய், தந்தையராகக் கொள்ளப்படும் பார்வதியும், சிவனும் பால கணபதியைக் குளிப்பாட்டுவது போலவும்,[1] பார்வதியின் மடியில் அல்லது தோளில் இருப்பது போலவும்[2] வரையப்பட்ட படங்கள் உள்ளன. தவிர, பால கணபதி இருப்பது போலவும், தவழ்வது போலவும் காட்டுகின்ற ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன.[3]

பெயர்

[தொகு]

சமசுக்கிருதத்தில் "பால" என்பது "இளம்" அல்லது "சிறு பராயம்" எனப் பொருள்படும். கணபதியைச் சிறு பராயத்தினராகக் கொண்டு வழிபடுவதற்கான வடிவம் ஆகையால் இதற்கு "பால கணபதி" எனப் பெயர் ஏற்பட்டது.

திருவுருவ அமைப்பு

[தொகு]
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்ரா ஓவியத்தில் சிவனும் பார்வதியும் பால கணபதியைக் குளிப்பாட்டும் காட்சி.

பால கணபதி நான்கு திருக்கரங்களும் யானைமுகமும் உடைவர். இவரது மேனி உதிக்கின்ற செங்கதிர் போன்ற செந்நிறம் கொண்டது எனச் சில மூலங்களில் காட்டப்பட்டுள்ளது.[4] வேறு சில மூலங்கள் இவரைப் பொன்னிற மேனி கொண்டவர் என்கின்றன.[5] குழந்தைத் திருமேனி கொண்டவராகப் பெரும்பாலும் காட்டப்பட்டாலும், சில சமயங்களில் குழந்தையாகக் காட்டாமல் குழந்தையின் முகத் தோற்றத்துடன் மட்டும் காட்டுவது உண்டு.[3] கழுத்தில் பூமாலை அணிந்திருப்பார்.[6]

பால கணபதி நான்கு கைகளை உடையவர். நான்கு கைகளிலும் ஏந்தியிருக்கும் பொருள்கள் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் ஒரே மாதிரியாகக் காணப்படுவது இல்லை. சிலவற்றில் மாம்பழம், மாமரக் கிளை, கரும்பு, மோதகம் ஆகியவற்றை[7] ஏந்தியிருப்பவராகக் காணப்படும் பால கணபதி, வேறு சிலவற்றில் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவற்றை ஏந்தியவராகக் காணப்படுகிறார். இப்பொருட்கள் செழிப்பையும், வளத்தையும் குறித்துக்காட்டுகின்றன. [5] பலாப்பழத்துக்குப் பதிலாக பூங்கொத்தை[3] அவரது தும்பிக்கையில் மோதகத்தை[5] அல்லது விளாம்பழத்தை[8] ஏந்தியபடி காட்டப்படும் பால கணபதி வடிவங்களும் உண்டு. பெரும்பாலும் துதிக்கையில் மோதகத்தை ஏந்தி அதை வாயை நோக்கித் திருப்பி வைத்திருப்பதையும் காண முடியும்.

இச் சிறுபராயக் கடவுள் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புக்களைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.[9] இவரை வணங்குவதனால் சிறுவர்கள் நல்ல ஒழுக்கத்தை அடைய முடியும் எனவும் கூறுகின்றனர். அத்துடன் இவர் குழந்தையைப் போன்ற மகிழ்வையும், நல்ல உடல்நலத்தையும் தனது பக்தர்களுக்குத் தருவார் என்றும் கூறுகின்றனர்.[3] இரண்டு கைகளுடனான சிறுவன் வடிவில் இவரை வணங்குவதற்கான கோயில்கள் சில தென்னிந்தியாவில் காணப்படுகின்றன. அங்கே இவரைப் பிள்ளையார் (சிறுவன்) என்பர்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Saligrama Krishna Ramachandra Rao (1991). Pratima Kosha: Descriptive Glossary of Indian Iconography. IBH Prakashana. p. 145.
  2. Nagar p. 18
  3. 3.0 3.1 3.2 3.3 T.K.Jagannathan (20 August 2009). Sri Ganesha. Pustak Mahal. p. 59. ISBN 978-81-223-1054-2.
  4. Martin-Dubost p. 224
  5. 5.0 5.1 5.2 Subramuniyaswami p. 59
  6. Chinmayananda, Swami (1987). Glory of Ganesha. Bombay: Central Chinmaya Mission Trust. p. 87. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  7. Martin-Dubost p. 120
  8. T. A. Gopinatha Rao (1993). Elements of Hindu iconography. Motilal Banarsidass Publisher. p. 52. ISBN 978-81-208-0878-2.
  9. Subramuniyaswami p. 159

உசாத்துணைகள்

[தொகு]
  • Martin-Dubost, Paul (1997). Gaņeśa: The Enchanter of the Three Worlds. Mumbai: Project for Indian Cultural Studies. ISBN 81-900184-3-4.
  • Satguru Sivaya Subramuniyaswami. Loving Ganesha. Himalayan Academy Publications. ISBN 978-1-934145-17-3.
  • Shanti Lal Nagar (1992). The Cult of Vinayaka. Intellectual Pub. House. ISBN 978-81-7076-043-6.