பேராசிரியர் பிரபுலால் பட்நகர்(ஆகஸ்ட் 7, 1912 - அக்டோபர் 5, 1976) இருபதாவது நூற்றாண்டில் சிறப்புப் புகழ் பெற்ற இந்தியக் கணிதவியலாளர்களில் ஒருவர். இலாஹாபாத் பல்கலைக்கழகத்தில் வான்கோளவியலில் முனைவர் பட்டம் (D.Sc) பெற்று, பிறகு, ஐக்கிய அமெரிக்க நாடட்டில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு ஃபுல்பிரைட் ஆய்வாளராகச் சென்று அங்கு Plasma இயற்பியலில் ஆய்வுகள் செய்து பெயர் பெற்றார்.1955இல் இந்திய விஞ்ஞானக்கழகத்தின் ஃபெல்லோ வாக தேர்வு செய்யப்பட்டார். 13 ஆண்டுகள் பங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் பயன்பாட்டுக் கணிதத் துறையின் தலைவராகப் பணியாற்றி பற்பல இளம் மாணவர்களைக் கணித ஆய்வுப் பணியில் ஊக்கப்படுத்தினார். இந்தியக் கணிதக் கழகத்தின் சரித்திரத்திலேயே மறக்கமுடியாத அளவிற்கு அதன் தலைவராகவும் மற்றும் அதன் பல பொறுப்புகளிலும் உயர்ந்த பணிபுரிந்தார். 1963 இல் இந்திய அரசு அவருக்கு 'பத்ம பூஷண்' பட்டத்தை வழங்கியது. 130 ஆய்வுக்கட்டுரைகள் இயற்றி 29 மாணவர்களுக்கு முனைவர் பட்டப்படிப்புக்கு இயக்குனரகவும் இருந்திருக்கிறார்.
கணிதத்துறைக்கு அவரளித்த சிறந்த பங்குமட்டுமல்லாமல் பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர் நல்லாசானாக இருந்த பெருமை அவருடையது. செய்தொழிலில் ஒர் ஆழ்ந்த ஈடுபாடு, எல்லோருக்கும் உதவவேண்டும் என்ற மனப்பான்மை இவைகளில் சிறந்து விளங்கினார்.
பாரத நாட்டின் கணிதத்துறைக் கல்விக்காகவும், அதன் ஆய்வுக்கூட அமைப்பு, நடைமுறை இவைகளுக்காகவும் தேசீய அளவில் என்னென்ன குழுக்கள், வாரியங்கள் அமைக்கப்பட்டனவோ அநேகமாக அவ்வளவிலும் அவர் முக்கியமான பொறுப்பில் பணி புரிந்து பங்களித்திருக்கிறார்.