பிரவசனசாரம் என்பது சமணத் துறவியான குந்தகுந்தரால் பொ.ஊ. 2ம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பின்னர் எழுதப்பட்ட ஒரு நூலாகும்.[2][3] இந்நூலின் தலைப்பு "மறைநூல்களின் சாரம்" எனப் பொருள்படும். இந்நூல் குந்தகுந்தரின் இருமைக் கொள்கை அடிப்படையிலான சரியான துறவு மற்றும் அகநிலை சார் நடத்தைகள் தொடர்பாக விரிவாக ஆராய்கிறது.[3] குந்தகுந்தர் இந்நூலில், திகம்பரத் துறவிகளிடையே பின்பற்றப்படும் அம்மண நடத்தைக்கு சார்பாக விளக்கமளித்துள்ளார். இது பற்றி விளக்கும் போது, தான் மற்றும் ஏனையோர் ஆகிய இருமைப் பண்பு என்பது, "நான் மற்றவருக்குச் சொந்தமானவனுமில்லை. ஏனையோர் எனக்குச் சொந்தமானோரும் இல்லை. எனவே எதுவும் எனக்குச் சொந்தமானதல்ல. ஆகவே, ஒரு துறவிக்கான விழுமியம் சார்ந்த வாழ்வு என்பது தான் எவ்வாறு பிறந்தாரோ அவ்வாறு வாழ்வதே ஆகும்" எனக் குறிப்பிடுகிறார்.[4] பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூல் மூன்று பகுதிகளையும் 275 வரிகளையும் கொண்டுள்ளது.
முதற் பகுதி 92 வரிகளைக் கொண்டுள்ளது. இது உயருயிர்களின் பண்புகள் பற்றி விளக்குவதோடு, தன்னை உயருயிரியாக மாற்றும் செயன்முறையின் முதற்படிகளைப் பற்றியும் கோடிட்டுக் காட்டுகிறது. இரண்டாம் பகுதி 108 வரிகளை உள்ளடக்கியுள்ளது. இது வெளி, காலத் துணிக்கைகள், அடிப்படைப் பருப்பொருட் துணிக்கைகள், கூட்டுப் பருப்பொருட் துணிக்கைகள், இயக்கம் மற்றும் அண்டத்திலுள்ள உயிர்கள் ஆகியவற்றுக்கிடையிலான இடைவினைகளுக்கான விதிகள் பற்றி விவரிக்கிறது. மூன்றாம் பகுதி 75 வரிகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி சரியான துறவு வழக்கங்களின் அடிப்படைகள் பற்றி விளக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
ஆச்சாரிய அமிர்தச்சந்திரர், தத்துவதீபிகை (உண்மையின் ஒளி) எனும் தலைப்பில் இந்நூலுக்கு உரையெழுதியுள்ளார். ஆச்சாரிய செயசேனரும் பிரவசனசாரத்துக்கு, தாத்பரியவிருத்தி (கருத்து) எனும் தலைப்பில் உரையெழுதியுள்ளார்.[5] ராசுமாலினால், சமயாசாரத்துக்கு எழுதப்பட்ட உரையை அடிப்படையாகக் கொண்டு, 1652ல் ஏமராசு பாண்டேயினால் மேலுமொரு உரை எழுதப்பட்டுள்ளது.[6]
தத்துவார்த்த சூத்திரம், திகம்பரர்கள் மற்றும் சுவேதாம்பரர்களால் தமது நூல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுவேதாம்பரர்கள் இதனை ஒழுங்குமுறைப்பட்ட நூலாக வகைப்படுத்துவதில்லை.