பிரான்சிஸ் நேப்பியர் | |
---|---|
பிறப்பு | 15 செப்டெம்பர் 1819 |
இறப்பு | 19 திசம்பர் 1898 (அகவை 79) |
படித்த இடங்கள் | |
பணி | அரசியல்வாதி |
வேலை வழங்குபவர் |
|
வாழ்க்கைத் துணை/கள் | Anne Jane Charlotte Lockwood |
குழந்தைகள் | John Scott Napier, Basil Napier, Mark Napier |
குடும்பம் | Ellinor Alice Napier, William Napier |
விருதுகள் | Order of the Thistle |
பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier, செப்டம்பர் 15, 1819 – டிசம்பர் 19, 1898) வியன்னா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இங்கிலாந்தின் தூதராக பணியாற்றினார். 1866இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார். சென்னையின் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் இவரால் கட்டப்பட்டது.
1819இல் ஸ்காட்லாந்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஃபிரான்சிஸ் நேப்பியர், இங்கிலாந்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்தார். சில காரணங்களால் படிப்பைவிட்டு பாதியிலேயே வெளியேறிவிட்டார். ஆனால் தனியாக ஆசிரியரை அமர்த்தி சில வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டார். அதுதான் அவருக்கு பிற்காலத்தில் இங்கிலாந்தின் தூதராக பணியாற்ற பெரிதும் கைகொடுத்தது.
நேப்பியர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அவர் ஒரு மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட இன்றைய ஒரிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தால் தவித்த கஞ்சம் மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நேப்பியர் தலையில் விழுந்தது. ஆனால் நேப்பியர் இதனை திறமையாகவே சமாளித்தார். ரீமிய யுத்தத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் கை விளக்கேந்திய காரிகை என வரலாற்றில் போற்றப்படும் பிரபல செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நேப்பியரின் நெருங்கிய நண்பர். மக்கள் பஞ்சத்தால் மடிந்தபோது, அவருக்கு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டார் நேப்பியர். நைட்டிங்கேலின் ஆலோசனைகளை உடனே செயல்படுத்தவும் செய்தார். இது பஞ்சத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியது. மதுரை திருமலை நாயக்கர் மஹாலைப் புதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நேப்பியர் ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் அமைக்க உதவியதால் அவரது பெயரே அந்த மையத்துக்கு சூட்டப்பட்டது.
பென்னாறு அணை நேப்பியர் காலத்தில்தான் கட்டப்பட்டது. இதேபோல விவசாயத்தை வளப்படுத்த நிறைய பாசனத் திட்டங்களை நேப்பியர் செயல்படுத்தினார். முல்லை பெரியார் அணைக்கான திட்டமிடல் இவரது ஆட்சி காலத்திலேயே நடைபெற்றது. சென்னையின் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் இவரால் கட்டப்பட்டது. .[1] [2]
1872இல் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிச்சர்ட் பூர்ட், அந்தமானில் கொல்லப்பட்ட பிறகு சிறிது காலம் தற்காலிக வைஸ்ராயாக நேப்பியர் நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய வைஸ்ராய் கிடைத்ததும், நேப்பியர் இந்திய சேவைகளை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிவிட்டார். இத்தாலியில் டிசம்பர் 19, 1898 இல் தனது 79ஆம் வயதில் காலமானார்.
சிந்தாதிரிப்பேட்டையில் நேப்பியரின் நினைவாக தொடங்கப்பட்ட நேப்பியர் பூங்கா தான், இன்றைய மே தினப் பூங்காவாக வழங்கப்படுகிறது. நேப்பியர் பெயரில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது.