![]() புனான் சாமா பெண்பிள்ளைகள். 1912-இல் எடுக்கப்பட்ட படம். | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
ஏறக்குறைய 5,000 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() ![]() காப்பிட் பிரிவு பிந்துலு பிரிவு ![]() ![]() ![]() | |
மொழி(கள்) | |
புனான் பா மொழி, மலாய் மொழி, இந்தோனேசிய மொழி, மலேசிய ஆங்கில மொழி | |
சமயங்கள் | |
கிறிஸ்தவம்; ஆன்மவாதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தயாக்கு மக்கள், செகாப்பான், கெசாமான், இலாகனான் |
புனான் மக்கள் அல்லது புனான் பா மக்கள் (மலாய்: Punan அல்லது Orang Punan Bah; ஆங்கிலம்: Punan அல்லது Punan Bah People); என்பவர்கள் மலேசியா சரவாக்; மற்றும் இந்தோனேசியா கலிமந்தான் ஆகிய நிலப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆகும். இவர்கள் பெனான் (Penan) பழங்குடி மக்களுடன் தொடர்பு இல்லாதவர்கள்.[1]
புனான் மக்களை புனான் பா மக்கள் என்று அழைப்பதும் வழக்கம். இவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த இரண்டு நதிகளின் கரையில் இருந்து அவர்களின் இனப் பெயர் பெறப்பட்டது. புனான் மக்கள் ஒருபோதும் நாடோடிகளாக வாழ்ந்தது இல்லை.[2]
இவர்களுக்குப் புங்குலான் மிகுவாங் (Bungulan Mikuang) அல்லது மிகுவாங் (Mikuang) மற்றும் புவான் ஆவேங் (Buan Aveang) எனும் பிற பெயர்களும் உள்ளன. ஆனாலும் அந்தப் பெயர்கள் அவர்களின் இன்றைய சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.[3]
1980-களின் பிற்பகுதியில், புனான்களில் பலர், குறிப்பாக அதிகமாகப் படித்த இளையவர்கள்; சிறந்த வாழ்க்கையைத் தேடி, பிந்துலு, சிபு, கூச்சிங், கோலாலம்பூர் போன்ற நகர்ப்புறப் பகுதிகளுக்குப் படிப்படியாக இடம்பெயர்ந்தனர். இருப்பினும், அவர்கள் தங்களின் நீளவீடுகளை முற்றிலுமாக மறந்துவிடவில்லை.
புனான் மக்களின் முக்கியப் பண்டிகைகளான அறுவடை திருவிழா (Harvest Festival) அல்லது புங்கான் திருவிழா (Bungan Festival) போன்ற பண்டிகைகளின் போது, வெளியூர்களுக்குச் சென்ற இளையவர்கள்; வீடுகளுக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது.
புனான் மக்களின் சமூகம், 'லாசா' (Laja) (பிரபுக்கள்); 'பான்யென்' (Panyen) (சாமானியர்கள்) மற்றும் 'லிப்பென்' (Lipen) (அடிமைகள்) எனும் அமைப்பு கொண்ட ஓர் அடுக்கு சமூகமாகும். இந்த முறைமை பாதுகாக்கப்பட்டு வரும் அவர்களின் வரலாற்று மரபுகளை இன்றும் தீர்மானிக்கின்றது.
புனான் மக்கள் பெரும்பாலும் சரவாக் மாநிலத்தின் பிந்துலு பிரிவில் (Bintulu Division) காணப் படுகிறார்கள். அந்தப் பிரிவின் பாண்டான் (Pandan), சேலாலோங் (Jelalong) மற்றும் காக்காசு (Kakus); ராஜாங் ஆறு (Rajang River), பெலாகா மாவட்டம் (Belaga District) போன்ற இடங்களில் குழுக்களாக வாழ்கின்றனர்.
போர்னியோவின் மத்தியப் பகுதியான ராஜாங் ஆறு மற்றும் பாலுய் ஆறு (Balui River) பகுதிகளில் குடியேறிய பழங்கால தயாக்கு மக்கள், செகாப்பான் மக்கள் (Sekapan People), கெசாமான் மக்கள் (Kejaman People), இலாகனான் (Lahanan People) மக்கள் குழுக்களுடன் புனான் மக்களும் குடியேறியதாக நம்பப்படுகிறது.
இருப்பினும், ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜாங் ஆறு மற்றும் பாலுய் ஆறு பகுதிகளுக்குள் காயான் மக்களின் இடம் பெயர்வு; அதைத் தொடர்ந்து இபான் மக்களின் இடம் பெயர்வு; ஆகிய இடம் பெயர்வுகளினால் புனான் மக்களைப் பின்வாங்கச் செய்தது.[4]
2006-ஆம் ஆண்டு நிலவரப்படி, பிந்துலு பிரிவில் 10-க்கும் மேற்பட்ட புனான் நீளவீடு குடியிருப்புகள் இருக்கின்றன.