மகேசு பிரசாத் மெக்ரே Mahesh Prasad Mehray | |
---|---|
பிறப்பு | 1900 அலகாபாத், வடமேற்கு மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 1974 |
பணி | கண் மருத்துவர் |
செயற்பாட்டுக் காலம் | 1926–1974 |
அறியப்படுவது | சீதாபூர் கண் மருத்துவமனை |
வாழ்க்கைத் துணை | கோபி ராணி |
விருதுகள் | பத்ம பூசண் பத்மசிறீ பிதான் சந்திரா ராய் விருதை ருசுடோம் மெர்வானிசி ஆல்பாய்வால்லா விருது |
மகேசு பிரசாத் மெகரே (Mahesh Prasad Mehray) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த கண் மருத்துவர் ஆவார். இவரது காலம் 1900 முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலான காலமாகும். உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் ஆகிய மாநிலங்களில் சீதாபூர் கண் மருத்துவமனையை இவர் நிறுவினார். 2500 படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனை 32 கிளைகளைக் கொண்டுள்ளது[1]. இந்தியாவில் மருத்துவ பிரிவுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை இந்திய மருத்துவக் கழகம் மகேசு பிரசாத் மெகரேவுக்கு வழங்கியது. 1955 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசீறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூசண் விருதும் மருத்துவ அறிவியலில் மகேசு செய்த பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.[2]
1900 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு மாகாணத்தில் மெகரே பிறந்தார். அப்பகுதி தற்பொழுது இந்திய நாட்டின் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது.[3] இலக்னோவிலுள்ள கிங் சியார்ச்சு மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் இவர் பட்டம் பெற்றார். பிறகு மாநில தலைநகரான இலக்னோவிலிருந்து 80 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கைராபாத் கிராமத்தில் முதன்மை சுகாதார மையமான மாவட்ட வாரிய மருந்தகத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் இவர் எழும்பூர் கண் மருத்துவமனையில் கண் மருத்துவத்திற்கான மேம்பட்ட பயிற்சியைப் பெற்றார். தற்பொழுது இம்மருத்துவமனை மண்டல கண்மருத்துவ நிறுவனம் மற்றும் அரசு கண் மருத்துவமனை என்ற பெயரில் செயல்படுகிறது. 1935 ஆம் ஆண்டு வியன்னாவில் இவர் தன்னுடைய படிப்பை முடித்தார். இந்தியாவின் கிராமப்புறங்களில் சுகாதாரத் துறை அப்போது வளர்ச்சியடையாமல் இருந்தது. 1926 ஆம் ஆண்டு கைராபாத்தில் கண் பராமரிப்புக்கு எந்த வசதியும் இல்லாத நேரத்தில் மெகரே ஒரு சிறிய கண் மருத்துவமனையைத் தொடங்கினார். நோயாளிகளுக்கான சிகிச்சை தற்காலிக கொட்டகையில் அளிக்கப்பட்டது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகவே மெகரே மையத்தை மாவட்ட தலைமையகமான சீதாபூருக்கு மாற்றினார். [4]
1943 ஆம் ஆண்டு சீதாபூர் நகரில் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது.[3] பின்பு சில ஆண்டுகளில் 1000 படுக்கைகள் வசதி கொண்ட மருத்துவமனையாக வளர்தது. மேலும் உத்தரப் பிரதேசம்மற்றும் உத்தராகண்டம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 32 கிளைகளில் மேலும் 1500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக வளர்ந்தது.[5] மகேசுக்கு இந்திய மருத்துவ பிரிவில் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை இந்திய மருத்துவ கழகம் வழங்கியது.[4] 1955 ஆம் ஆண்டில் இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசீறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[6] பின்னர் 1970 ஆம் ஆண்டில் குடியரசு தின மரியாதை பட்டியலில் மகேசு மீண்டும் சேர்க்கப்பட்டார். அப்போது இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூசண் மருத்துவ அறிவியலில் மகேசு செய்த பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.[2] இவை தவிர ருசுடோம் மெர்வானிசி ஆல்பாய்வால்லா விருது, ராய் சாகிப் மற்றும் ராய் பகதூர் விருது போன்ற உயரிய விருதுகளையும் இவர் வென்றார்[4]. கோபி ராணி என்பவரை மகேசு மணந்தார். 1974 ஆம் ஆண்டு தனது 74 வது வயதில் இவர் இறந்தார்.[4] இன்றும் செயல்பட்டுவரும் சீதாபூர் கண் மருத்துவமனையில் அதன் நிறுவனர் மகேசு நினைவாக டாக்டர் எம். பி. மகேசு கண் மருத்துவம் கழகம் என்ற பெயரில் ஒரு சமூக மையம் திறக்கப்பட்டுள்ளது.[5]