இந்தியாவில் நிலவும் சாதியமைப்பின் படி, சாதியமைப்பின் கீழ்த்தட்டில் உள்ளவர்கள் மேல்தட்டில் உள்ளவர்களின் மலத்தை அள்ள வேண்டும் என்கிற இழிதொழிலே மனித மலத்தை மனிதன் அள்ளுதலாகும் ( Manual scavenging). மனித ஆற்றலால் விளக்குமாறு மற்றும் தகரம் தகடுகளை பயன்படுத்தி மனித கழிவுகள் அகற்றுதல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் இது சுகாதாரம் சார்ந்த பிரச்சினை ஆகும்.
1901 இல், மகாத்மா காந்தி 'மனித மலத்தை மனிதன் அள்ளுதல் ஒரு தேசிய அவமானம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் வங்காளத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் 'பாங்கிஸ்' எண்ணப்படுபவர்களின் சமூக நிலைமைகள் குறித்து பிரச்சினையை எழுப்பினார்.
இந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 7.50 லட்சம் பேர் இன்னமும் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த இழிதொழிலுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்புகள் கணக்குப்படி 10.3 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேத் துறையில் பல்லாயிரம் துப்புரவுப் பணியாளர்கள் தண்டவாளங்களுக்கிடையிலான இருப்புப் பாதையில் மலம் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.[1] இதில் 98% சதவீதம் பெண்களே ஈடுபட்டுள்ளார்கள் .[2]
1993 இல் உலர் கழிப்பிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனை அமல்படுத்த உறுதியாக நடவடிக்கை எதுவும் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. ஒருவர் கூட இந்தச் சட்டத்தில் தண்டிக்கப்படவில்லை என்பது இச்சட்டம் அமலானதன் முறையை வெளிப்படுத்துகிறது. நாட்டின் தலைநகரான தில்லியிலேயே 10,000 உலர் கழிப்பிடங்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.[1]
இந்த இழி தொழிலை ஒழித்து இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வேறு வேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கு மத்திய பட்ஜெட்டில் 2011-12 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் இது ரூ.35 கோடியாக வெட்டிச் சுருக்கப்பட்டது. 2012-13ல் இதற்காக ரூ. 98 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. ஆனால் ரூ. 20 கோடியாக இது குறைக்கப்பட்டது. இதிலும் கணிசமான தொகை வெறும் ஆய்வுப் பணிக்காகச் செலவிடப்பட்டது.[1]