மரைக்காயர் (மரக்காயர்) (Maraikkayar) எனப்படுவோர் தென்னிந்தியாவில் உள்ள இசுலாமிய மக்களின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் வசிக்கின்றனர்.
முஸ்லிம் வணிகர்களான இவர்கள் குறித்த செய்திகள், பாண்டியர் கால ஆவணங்கள்,[சான்று தேவை] போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், இடானியர், பிரான்சியர் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன. மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். 1722இல் ஆங்கிலேயர் அச்சே நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகம்மது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுகவேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகம்மது காசிம் மரைக்காயர் பினாங்கிலும், கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.[1]
இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது.[2] இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சே, சுமாத்திரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன.[3]
மரக்கலத்தின் மூலம் கடல் வாணிபத்தில் ஈடுபட்டு வந்ததால் மரக்கலராயர் என்றழைக்கப்பட்டு மரக்காயர் > மரைக்காயர் என்றானது.[4]