பண்டிட் மாகன்லால் சதுர்வேதி | |
---|---|
பிறப்பு | பபாயி சிற்றூர், ஹொஷங்காபாத் மாவட்டம் , மத்திய பிரதேசம், பிரித்தானிய இந்தியா | ஏப்ரல் 4, 1889
இறப்பு | சனவரி 30, 1968 | (அகவை 78)
தொழில் | எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர், நாடகாசிரியர், இதழாளர் |
தேசியம் | இந்தியர் |
காலம் | Chhayavaad |
கருப்பொருள் | இந்தி |
குறிப்பிடத்தக்க விருதுகள் | 1955: சாகித்ய அகாடமி விருது |
பண்டிட் மாகன்லால் சதுர்வேதி (Makhanlal Chaturvedi ஏப்ரல் 4, 1889 – சனவரி 30, 1968) என்பவர் இந்தி எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலைப்போராட்ட வீரர் என பன்முகம் கொண்டவர். சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். இந்தி இலக்கிய ஆர்வலர்களால் 'பண்டிட்ஜி' என அன்போடு அழைக்கப்பட்டார். இவரை நினைவுகூறும் விதமாக மாகன்லால் சதுர்வேதி புரஸ்கார் என்னும் விருதை சிறந்த கவிஞர்களுக்கு மத்திய பிரதேச அரசு 1987 முதல் வழங்கிவருகிறது.[1] ஆசியாவிலேயே முதன் முதலாக போபாலில் தொடங்கப்பட்ட ஊடகவியல் தகவல் தொடற்பியல் பல்கலைக்கழகத்துக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2][3]
இவர் மத்திய பிரதேசத்தின் பபாயி என்னும் சிற்றூரில் பிறந்தார். கல்வியை முடித்தபின் 16 வயதில் பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.[4][5] இவருக்கு எழுத்துத்துத்துறையில் ஆர்வம் இருந்தது. பல இதழ்களில் கவிதை, கட்டுரைகளை எழுதினார். திலகரின் 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்னும் முழக்கமும் காந்தியடிகளின் போராட்ட வழிமுறையும், இவரைக் கவர்ந்தன.
ஆசிரியர் பணியை விடுத்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றார்.
1910 முதல் பிரபா, கர்மவீர் முதலிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது எளிமையான, உணர்வுப்பூர்வமான எழுத்துக்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. எழுச்சியூட்டும் எழுத்துக்களால் மக்களின் விடுதலை உணர்ச்சியைத் தூண்டினார். விடுதலைக்குப் பின்பு அதிகாரப் பதவிகளைத் தேடிச்செல்லாமல் பத்திரிக்கைத் துறையிலேயே நீடித்தார். சமூக ஏற்றத்தாழ்வு, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்து காந்திய வழியில் தன் எழுத்துப்பணிகளைத் தொடர்ந்தார்.
இவரது படைப்புகளான யுக சரண், சாகித்ய தேவதா, தீப் சே தீப் ஜலே, புஷ்ப கீ அபிலாஷ், கைசா சந்த் பனா, தேத்தி ஹை, அமர் ராஷ்ட்ரா அகிய படைப்புகள் இந்தி இலக்கியத்தில் இவருக்குப் புகழைப் பெற்றுத்தந்தன.