மூன்றாம் அனங்கபீமதேவன் | |
---|---|
ரௌதா, துர்காபுத்ரன், உருத்ரபுத்ரன், புருசோத்தமன், புருசோத்தம புத்ரன் | |
ஆட்சிக்காலம் | பொ.ச.1211-1238 |
முன்னையவர் | மூன்றாம் இராஜராஜ தேவன் (தந்தை) |
பின்னையவர் | இலாங்குல நரசிம்ம தேவன் |
துணைவர் | சோமலா தேவி , கஸ்தூரி தேவி, மற்றும் பலர் |
மரபு | கீழைக் கங்க வம்சம் |
தாய் | மல்ஹனாதேவி (கீழைச் சாளுக்கிய இளவரசி) |
மதம் | Hinduism |
மூன்றாம் அனங்கபீமதேவன் (Anangabhima Deva III ) பொ.ச.1211-1238 வரை கிழக்கு இந்தியாவில் ஆரம்பகால இடைக்கால ஒடிசாவை மையமாகக் கொண்ட பேரரசை ஆண்ட கீழைக் கங்க வம்சத்தின் சக்திவாய்ந்த ஒடிய ஆட்சியாளராவார். வடக்கே கங்கை ஆற்றிலிருந்து தெற்கே கோதாவரி வரை பரந்து விரிந்த நிலப்பரப்பைப் பராமரித்ததில் இவர் வெற்றி பெற்றார். இவர் பேரரசின் மேற்கு எல்லையில் இருந்த இரத்னபுரியின் காலச்சூரிகளை வெற்றிகரமாக தோற்கடித்து அவர்களுடன் ஒரு திருமண கூட்டணியை நிறுவினார். இவரது சகோதரர் அல்லது மைத்துனரான, இரண்டாம் இராசராசன் 1198இல் வம்சத்தின் ஆட்சியாளராக இருந்தார். மூன்றாம் அனங்கபீமன் ஆட்சிக்கு வந்ததும், 1211இல், வங்காள முஸ்லிம்களை தனது இராச்சியத்திலிருந்து வெளியேற்றினார். இவரது மகனான முதலாம் நரசிங்க தேவன், பின்னர் 1244இல் வங்காளத்தின் மீது படையெடுத்து, தலைநகரான கௌடாவைக் கைப்பற்றினார். இவர் ஒடிய சமுதாயத்தின் சமூக மற்றும் ஆன்மீக கட்டமைப்பில் சீர்திருத்தவாதியாக இருந்தார். ஏனெனில் வைணவ தெய்வமான ஜெகன்நாதர் பேரரசின் உச்ச ஆட்சியாளராகவும், பேரரசர் அவருக்கு கீழ் துணைவராகவும் அறிவிக்கப்பட்டார். ஜெகந்நாதருக்கு அனைத்தையும் அர்ப்பணித்த சிறீ புருசோத்தமன் என்று இவர் தன்னைக் கூறிக்கொண்டதாக மதல பஞ்சி பதிவு செய்கிறது.[1]
மூன்றாம் அனங்கபீமா தேவன், பொ.ச. 1211இல் பண்டைய கலிங்கத்தின் ஆட்சியாளராக இருந்தார். இவர் அரியணை ஏறிய நேரத்தில், வங்காளத்தின் ஆட்சியாளரான கியாசுதீன் இவாஜ் ஷாவின் முஸ்லிம் படைகளிடமிருந்து இவரது இராச்சியம் மீண்டும் மீண்டும் தாக்குதல்களை எதிர்கொண்டது. சோமவன்சி ஆட்சியாளர்களின் காலத்திலிருந்தே காலச்சூரி மன்னர்கள் ஒடிசாவின் நிலப்பரப்பைக் கைப்பற்ற போராடி வந்தனர். மேலும் அவர்களால் அனங்கபீமனின் இராச்சியத்தின் மேற்கு எல்லை மீண்டும் மீண்டும் முற்றுகையிடப்பட்டது. மகாநதி மற்றும் காட்டயோடி ஆறு ஆகிய ஆறுகளை பிரிக்கும் இடத்தில் உள்ள மூலோபாய இடமான விதனாசி கடக்கிற்கு தனது புதிய தலைநகருக்கான இடமாகத் தேர்ந்தெடுத்து தனது தலைநகரை பொ.ச.1230இல் மாற்றினார்.[2] கடக் என்றால் கோட்டை என்பதால் விதனாசி கடக் (புதிய வாரணாசி கோட்டை) என்று பெயரிடப்பட்டது. மேலும், தனது திறமையான பிராமண மந்திரியும் விஷ்ணு என்ற இராணுவ ஆலோசகரின் வழிகாட்டுதலின் கீழ் தனது இராணுவப் படையை கட்டியெழுப்புவதற்காக பாராபதி என்ற இடத்தில் ஒரு புதிய கோட்டை வளாகம் கட்டப்பட்டது.
அனங்கபீம தேவன், இந்தப் பிராந்தியத்தில் வரையறுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் நீண்ட வரிசைக்குப் பிறகு இராணுவ நோக்கங்களில் மிகவும் வெற்றிகரமான சாதனை படைத்தவர். இழந்த பிரதேசங்களை மீட்டெடுக்கும் அதே வேளையில், வங்காள முஸ்லிம் ஆட்சியாளர்களின் பெரும் அச்சுறுத்தல்களிலிருந்து இவர் தனது இராச்சியத்தை பாதுகாத்து, அவர்களின் எல்லைக்குள் நுழைந்தும், தென்னிந்தியாவில் தனது பேரரசை இன்றைய தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள திருவரங்கம் வரை விரிவுபடுத்தினார்.
சோமவம்சிகளைத் தோற்கடித்து, பண்டைய கலிங்க இராச்சியத்தின் மேற்குப் பகுதிகளை அதன் முழுமையான திரி கலிங்கப் பகுதியை ஆக்கிரமித்ததன் மூலம் இறுதியில் சிதைந்துகொண்டிருந்த இரத்னபுரியின் காலச்சூரி வம்சத்துடனான தொடர்ச்சியான மோதலின் வாசலில் மூன்றாம் அனங்கபீம தேவன் இருந்தார். நவீன பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள துமானாவின் தெற்கு ஹைகையவன்சி மன்னர்களும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கங்கப் படைகளுக்கு எதிராக போரிட்டு வந்தனர். [3] மூன்றாம் அனங்காபீம தேவனின் மூதாதையரான, அனந்தவர்மன் சோடகங்கனின் பல இராணுவ சாதனைகள் இருந்தபோதிலும், இழந்த இந்த பிரதேசங்களை மீட்பதில் தோல்வியடைந்தார். காலச்சூரி மன்னன், பிரதாபமல்லன் தனது மகன் பரமார்தி தேவனுடன் சேர்ந்து கங்கர் எல்லையில் படையெடுக்கும் முயற்சியைத் தொடர்ந்தார். அனங்கபீமன் தனது திறமையான பிராமணத் தளபதியான விஷ்ணுவின் தலைமையில் ஒரு பெரிய படையை அனுப்பினார். பிரிக்கப்படாத சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சியோரி நாராயணா கிராமத்தில் விந்திய மலைகளுக்கு அருகில் பீமா ஆற்றங்கரையில் இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தன. அனங்கபீமனின் சத்தேசுவரர் கோயில் கல்வெட்டின் படி, விஷ்ணு காலச்சூரி மன்னனை பயமுறுத்தினார் என்று குறிப்பிடுகிறது. [4]
தனது தெற்குப் பகுதி எதிரியான கணபதிதேவன் மீதான இந்தப் போரின் முதல் கட்டத்தில், அனங்கபீமன் கிருஷ்ணா ஆறு வரை முன்னேறி அங்கு முகாமிட்டார். பொ.ச.1230இல் ஒடிசாவின் சில பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டன. இருப்பினும், இரண்டாம் நரசிம்மன் என்ற காக்கத்திய மன்னன் தனது படைகளையும், கிழக்கு கோதாவரி வரையிலான பகுதிகளை இழந்தான். காக்கத்திய மன்னன் கணபதி தேவன் இவர் சோழ நாட்டின் மீது படையெடுத்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டான். மேலும், காஞ்சிபுரம் அல்லல்நாதர் கோவில் கல்வெட்டின் படி, மூன்றாம் அனங்கபீமன் தென்னிந்தியாவில் உள்ள காஞ்சிபுரம், திருவரங்கம் ஆகிய நகரங்களைக் கைப்பற்றினார் எனத் தெரிகிறது.
இவரது இராணி சோமலாதேவி மகாதேவி அல்லல்நாதரின் கோவிலுக்கு மதிப்புமிக்க அன்பளிப்பை வழங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அனங்கபீமன் சிம்மாச்சலம் கோயிலில் தனது கல்வெட்டை வைத்த முதல் கீழை கங்க ஆட்சியாளரானார். [5]
மூன்றாம் இராஜராஜனின் ஆட்சியின் போது சோழ சாம்ராஜ்யத்தின் அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்தி மூன்றாம் அனங்கபீம தேவன் காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்ததாக வரலாற்றாசிரியர் டி. வி. மகாலிங்கம் கூறுகிறார். தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள சாந்தமங்கலத்தில் மூன்றாம் இராஜராஜனை சிறையில் அடைத்த சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கனின் கலகக்கார அரசனால் அனங்கபீமதேவன் அழைக்கப்பட்டிருக்கலாம். மூன்றாம் இராஜராஜனை மீண்டும் அரியணையில் அமர்த்திய போசள வம்சத்தின் முதலாம் இரண்டாம் வீர நரசிம்மன், காஞ்சிபுரம் நகரிலிருந்து கலிங்கப் படைகளின் ஒரு குழுவை வேரோடு பிடுங்கி எறிந்ததாக கல்வெட்டுகளில் பொறித்துள்ளார். தென் பிராந்தியங்களில் இந்த நிகழ்வுகள் நிறைந்த மோதல்கள் ஒடிய படைகள் தெற்கில் உள்ள கிருஷ்ணா ஆறு வரை தங்கள் மேலாதிக்கத்தை நீட்டித்தன.[6] [7]
சிறீகூர்மம் மற்றும் திரக்சாரமம் கல்வெட்டுகள் அனங்கபீமன் ஒரு பக்தியுள்ள வைணவர் என்றும் மிகவும் ஆன்மீகமான நபர் என்று குறிப்பிடுகின்றன. இவரது மனைவி சோமலாதேவியின் காஞ்சிபுரத்தில் உள்ள அல்லல்நாதப் பெருமாள் கல்வெட்டு, இவர் வைணவத்தின் ஏகாதசி விரத சடங்கைப் பின்பற்றியதாகக் கூறுகிறது. இவர் அனங்கபீம-ரௌதா-தேவன் (ரௌதா என்றால் துணை) என்ற பட்டத்தை வைத்துக்கொண்டா. மேலும், தன்னை புருசோத்தமன் அல்லது ஜெகந்நாதரின் துணைவராக அறிவித்தார். மாநிலத்தில் தனது உயர்ந்த ஆன்மீக நிலையை சட்டப்பூர்வமாக்க இவர் பரம வைணவர் என்றும் பரம மகேசுவரன் என்றும் பட்டங்களை வைத்துக் கொண்டார். இவரது ஆட்சியின் போதுதான் புரியின் ஜெகநாதர் தேசிய தெய்வமாக அதிகாரப்பூர்வமாக அறிபிக்கப்பட்டது. 1238இல் இவர் தனது ஆட்சி ஆண்டு அல்லது அங்கத்தை புருசோத்தமனின் ஆட்சி ஆண்டாக அறிவித்தார்.[8]
புவனேசுவரில் உள்ள மேகேசுவரர் கோயில் போன்ற இரண்டு சிவன் கோவில்களையும், புதிதாக நிறுவப்பட்ட தனது தலைநகரான கட்டாக்கில் புதிய ஜெகநாதர் கோவிலையும் இவர் கட்டியிருப்பதாக ஊகிக்கப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டில் சுலைமான் கரானியின் படையெடுப்பால் இக்கோயில்கள் அழிக்கப்பட்டு, பின்னர் மராட்டிய ஆட்சியாளர் ரகுஜியால் மீண்டும் கட்டப்பட்டது. ஜாஜ்பூர் நகரத்தில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுடன் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சலேபூர் அருகே அமைந்துள்ள சட்டேசுவர சிவன் கோயிலையும் கட்டியுள்ளார். [9] இவரது ஆட்சியின் போது சம்பல்பூரில் உள்ள ஹுமாவின் சாய்ந்த கோவிலும் கட்டப்பட்டது. இது பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் சௌகான் மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது அல்லது புனரமைக்கப்பட்டது. அனங்கபீம தேவன், புரியில் உள்ள ஜெகநாதர் கோவில் வளாகத்தில் உள்ள பழைய கட்டமைப்புகளின் தீவிர பராமரிப்பு நடவடிக்கைகளுடன் கட்டுமானங்களுக்கு நிதியளித்து கண்காணித்தார். ஜெகந்நாதருக்கு தினசரி அன்னதானம் மற்றும் நில நன்கொடைகள் பற்றிய விவரங்களை பதிவு செய்யும் நான்கு கல்வெட்டுகள் வளாகத்திற்குள் உள்ள பாடலேசுவர கோவிலின் நுழைவாயில் சுவர்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [10]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)