ரவாங் | |
---|---|
Rawang | |
சிலாங்கூர் | |
ஆள்கூறுகள்: 3°19′N 101°35′E / 3.317°N 101.583°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | கோம்பாக் மாவட்டம் |
நிர்வாக மையம் | செலாயாங் |
அரசு | |
• நகராட்சி | செலாயாங் நகராண்மைக் கழகம் (Selayang Municipal Council) |
• தலைவர் | சுலைமான் ரகுமான் (Suliman bin Abd. Rahman) |
பரப்பளவு | |
• மொத்தம் | 255 km2 (98 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 1,76,120 |
நேர வலயம் | மலேசிய நேரம் |
அஞ்சல் குறியீடு | 48000 |
தொலைபேசி எண்கள் | +60-3 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | B |
இணையதளம் | mps |
ரவாங், (மலாய்: Rawang; ஆங்கிலம்: Rawang; சீனம்: 萬撓); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோம்பாக் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 23 கி.மீ. வடக்கே உள்ளது.
1940-ஆம் ஆண்டுகளில், மலேசியாவில் தமிழர்கள் மிகுதியாக வாழ்ந்த இடங்களில் ரவாங் நகரமும் ஒன்றாகும். மலேசிய இந்தியர் சமூகத்தைச் சேர்ந்த தொழிற்சங்கவாதிகள்; கல்விமான்கள்; சமூக ஆர்வலர்கள்; எழுத்தாளர்கள்; ஆசிரியர்கள் பலரை உருவாக்கிய பெருமை இந்த நகரத்திற்கு உண்டு.
1900-ஆம் ஆண்டுகளில், பிரித்தானியர்கள் இங்கு ரப்பர் தோட்டங்களை அறிமுகப் படுத்தினர். அதன் பின்னர், 1970-களில், தனியார் நிறுவனங்கள் செம்பனை தோட்டங்களைத் தோற்றுவித்தன.
அப்போதைய பிரித்தானிய மலாயாவில், இந்த ரவாங் நகரில் தான் முதன்முதலாக மின் இயற்றிகள் (Electric Generators) பயன்படுத்தப்பட்டன. உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்று விளங்கும் பத்துமலை கோயிலை உருவாக்கியவரும்; கோலாலம்பூர்மகாமாரியம்மன் கோயிலை தோற்றுவித்தவரும்; மலாயா ஈயச் சுரங்க உரிமையாளர்களில் முதல் தமிழருமான தம்புசாமி பிள்ளை (K. Thamboosamy Pillay) அவர்கள்தான் தம்முடைய ஈய சுரங்கத்தில் (New Tin Mining Company) முதன்முதலாக மின் இயற்றிகளைப் பயன்படுத்தியவர் ஆகும்.[1]
மலேசியாவில் மின்சாரம் பெற்ற முதல் குடியிருப்பு வீடு ரவாங் பகுதியில் இன்றும் உள்ளது. 1894-ஆம் ஆண்டில், பிரித்தானிய மலாயாவில் முதல் மின் இயற்றி ரவாங் கோலா காரிங் சாலையில் (Jalan Kuala Garing) நிறுவப்பட்டது. ரவாங் ஈய நிறுவனத்திற்கு (Rawang Tin Dredging) சொந்தமான குடியிருப்பு. அந்த நிகழ்வே ரவாங் நகரத்தை மலேசியாவிலேயே மின்சாரம் பெற்ற முதல் இடமாக மாற்றி அமைத்தது.[2]
அது மட்டும் அல்லாமல், மின்சார தெரு விளக்குகளைக் கொண்ட முதல் நகரம்; மற்றும் மின்சாரத்தால் இயங்கும் விளக்குகள், மின்விசிறிகள் கொண்ட தொடருந்து நிலையம் ஆகியவற்றைக் கொண்ட முதல் நகரம் இதுவாகும்.[3]
சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் அல்லாமல்; மலேசியாவிலும் மிகப் பழமையான நகரங்களில் ரவாங் நகரமும் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் மலேசியத் தமிழர்களின் வரலாற்றிலும் ரவாங் நகரம் தனி ஒரு வரலாற்றைப் பதிக்கின்றது.
ரவாங் நகரம் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்டது. கோலாலம்பூர் நகரத்தின் தொடக்கக் காலத் துணை நகரங்களில் ரவாங் நகரமும் ஒன்றாகும். கோலாலம்பூரில் ஈயச் சுரங்கத் தொழில் வளர்ச்சி கண்ட போது, கோலாலம்பூருக்கு வடக்கே பல ஈயச் சுரங்கங்கள் திறக்கப்பட்டன.
தொடக்கத்தில் உலு கிள்ளான் (Ulu Kelang) பகுதியில் ஈயச் சுரங்கங்களும் திறக்கப்பட்டன. ஈயச் சுரங்கத் தொழில் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து செலாயாங் (Selayang) மற்றும் ரவாங் புறநகர்ப் பகுதிகளை அடைந்தது.
ரவாங் நகரம் 1825-ஆம் ஆண்டிற்கு முன்பாக உருவாகி இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. சிலாங்கூர் மாநிலத்தில் ஈயச் சுரங்கத் தொழில் வளர்ச்சி கண்ட இரண்டாவது பகுதி ரவாங் ஆகும். பேராக் மாநிலத்தில் ஈயச் சுரங்கத் தொழில் வளர்ச்சி கண்ட அதே காலத்தில் ரவாங்கிலும் வளர்ச்சி அடைந்தது.
1860 - 1870-ஆம் ஆண்டுகளில் நடந்த கிள்ளான் போர் எனும் சிலாங்கூர் உள்நாட்டுப் போரின் (Klang War - Selangor Civil War) போது, துங்கு குடின் (Tengku Kudin) என்பவருடன் இணைந்த யாப் ஆ லோய் (Yap Ah Loy) கும்பல்கள் சையத் மசோர் (Syed Mashor) என்பவரின் படைகளைக் கோலாலம்பூரில் இருந்து விரட்டி அடித்தன. சையத் மசோரின் படைகள் வடக்கு நோக்கி தள்ளப்பட்டன.[4]
1871-இல் ரவாங் போர் (Battle of Rawang) நடந்தது. அந்தப் போரில், சையத் மசோரின் ஆதரவாளர்களும்; அவருக்கு விசுவாசமான சோங் சோங் (Chong Chong) என்பவரின் தலைமையிலான சீனக் கும்பல்களும், செரண்டா (Serendah) மற்றும் கோலா குபு பாரு (Kuala Kubu Bharu) நோக்கித் தள்ளப்பட்டனர்.
சுங் பியாங் (Chung Piang) தலைமையிலான யாப் ஆ லோயின் ஆட்கள் ரவாங் நிலப் பகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டனர். இவ்வாறு தான், வடக்கு கிள்ளான் பள்ளத்தாக்கில் (Klang Valley) ரவாங் ஓர் அதிகாரப்பூர்வமற்ற எல்லையாக மாறியது.
1894-ஆம் ஆண்டில், பிரித்தானிய மலாயாவில், ஈயச் சுரங்கத் தொழிலுக்கு ஆதரவாக முதல் மின் இயற்றிகள் ரவாங்கில் நிறுவப்பட்டன. இதுவே மலேசியாவில் மின்சார மயமாக்கப்பட்ட முதல் இடமாக ரவாங்கைப் புகழ்பெறச் செய்தது. ஏராளமான மின்மயமாக்கப்பட்ட ஈயச் சுரங்கங்கள் நிறுவப்பட்டன.[5]
லோக் இயூ மற்றும் தம்புசாமி பிள்ளை, இருவரும் ரவாங்கின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளனர். மலாயாவில் ஈயச் சுரங்கத்திற்கு மின்சாரத்தைப் பயன்படுத்திய முதல் நகரமாக ரவாங் திகழ்கிறது.
மேலும் இந்த நகரம் மின்சாரத் தெரு விளக்குகளைக் கொண்ட முதல் நகரமாவும்; ஒரு தொடருந்து நிலையத்தில் விளக்குகள் மற்றும் மின்விசிறிகளுக்கு மின்சாரம் வழங்கிய முதல் தொடருந்து நிலையம் (Rawang Railway Station) எனும் வரலாற்றையும் இந்த நகரம் பெறுகின்றது.[3]
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)